தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.
- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.
இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க நானும் எனது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ...
சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனில் நீர் கடந்த ஒன்பது மாதங்களாக துர்நாற்றம் அடித்து வருகிறது. இது பற்றி மேன்ஷன் உரிமையாளர் திரு.நாராயணனிடம் புகார் செய்தேன். அவர், "நீ மட்டுந்தாப்பா இப்படி சொல்ற. நான் உன் ஒருத்தனுக்காக போர்ல கை வைக்க முடியுமா? புடிச்சா பாரு, இல்ல காலி பண்ணிக்க" என்றார். உடனடியாக வேறு இடம் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருந்ததால், வேறு இடம் பார்க்கும் எண்ணத்தை அப்போதைக்கு தள்ளி வைத்தேன். பின்னர் இது பற்றி மற்ற அறைவாசிகளிடம் பேசிய பொழுது, அவர்களும் நீரின் தரம் குறித்து அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பதும், அவர்களும் திரு.நாராயணனிடம் புகர் செய்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு திரு.நாராயணன் அவர்கள், 'நீ மட்டுந்தான் சொல்ற, பிடிக்கலன்னா காலி பண்ணு' வசனம் பேசியிருந்ததும் தெரிய வந்தது. இதனால் பத்து பேர் ஒன்றாக சென்று புகார் செய்யலாம் என முடிவெடுத்தோம்.
ஒரு கூட்டமாக எங்களை கண்டவுடன் திரு.நாராயணன் தன் வசனத்தை சற்றே மாற்றினார். , "தம்பி நீங்க எப்பவோ ஒரு நாள் வந்த வாசனைய இன்னும் நினச்சுட்டு இருக்கீங்க. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க இருக்கீங்க? பேசாம காலி பண்ணிருங்க!."
"சார் நாங்க காலி பண்ணும் போது பண்றோம். இருக்குற வரைக்கும் குளிக்க வேணாமா? அந்த பம்பையாவது ஆஃப் பண்ணி வைங்க சார். அந்தப் பம்ப போட்டா தான் தண்ணி நாறுது."
"அதப்பெடி காசு செலவு பண்ணி பம்ப வெச்சிட்டு, அத போடாம இருக்கிறது? பம்பு கெட்டு போயிராதா? நீங்க என்னா என் பில்டிங்க்ல இருந்துக்குட்டு என்ன அதை செய்யு இத செய்யுன்னு சொல்லிக்கிட்டு? பிடிச்சா இருங்க, இல்ல காலி பண்ண வேண்டியது தானே?"
இவர் இந்த காலி பண்ணு வசனத்தை தவிர வேறெதுவும் பேச மாட்டார் என்பது புரிந்தது.
"சரிங்க சார். தண்ணிய டெஸ்ட் பண்ணலாம். அப்படி தண்ணில ஏதோ தப்பிருக்குன்னு ரிசல்ட் வந்தா, அப்பவாவது ஏதாச்சும் செய்வீங்களா?", என்றேன்.
டெஸ்ட் என்கிற வார்த்தை அவருக்குள் அமிலம் கக்கியது போலும். மனிதர் சற்றே படபடத்தார்.
"பண்ணுயா. பண்ணு. நீ பண்ற டெஸ்ட்டு என் பில்டிங்க்ல இருக்க நூறு பேருக்கு நல்லது பண்ணுதுன்னா, அதப் பாத்து சந்தோஷப்படுற மொதல் ஆளு நான் தான்."
"சரி நான் டெஸ்ட் ரிசல்டோட வந்து உங்கள பாக்குறேன்" என்றேன்.
தலையை சொறிந்தவர், "உனக்கேன் வீண் சிரமம். அதக் கூட நானே பண்ணிக்கறேனே!" என்றார்.
அவர் பண்ண மாட்டார் என்பது தெரியும்.
எழிலகத்தில் உள்ள தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை அணுகினேன். அவர்கள் நீரில் மனித மலம் கலந்திருப்பதாக சான்றிதழ் வழங்கினார்கள். அதிர்ச்சியும் ஆத்திரமும் என்னை ஆட்கொண்டன. தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர் திருமதி. சந்த்ரிகா நாங்கள் பயன் படுத்தும் நீரில் மனித மலத்தின் கலவை மிக அதிக அளவில் இருப்பதாக கூறினார். நூற்றுக்கு ஒன்று இருந்தாலே அந்த நீர் பயன்படுத்த அருகதையற்றதாகிறது, அப்படி இருக்கையில் நூற்றுக்கு முப்பத்தாறு என்கிற விகிதம் எள்ளளவும் சகித்துக்கொள்ள கூடிய அளவில்லை என்றார். இந்த சான்றிதழை காட்டிய பிறகும் உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் திரு.ஷண்முகம் அவர்களிடம் இது பற்றி பேசும் படி கூறினார்.
அன்றிரவே சான்றிதழோடு மேன்ஷனின் ஒவ்வொரு அறைக்கும் அன்வர், அனிமேட்டர் பாலா, மற்றும் நான் ஆகிய மூவரும் சென்று நாங்கள் பயன்படுத்தும் நீர் எவ்வளவு அருவருக்கத்தக்கது என்பதை சக மேஷன் வாசிகளிடம் எடுத்துச் சொன்னோம்.
எங்கள் மேஷனில் ஒரு அலுவலக அறை உள்ளது. அந்த அறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை ஏழு மணிக்கு பூஜை செய்ய திரு.நாராயணன் வருவார். அந்த நேரத்தில் மேன்ஷனில் உள்ள அனைவரும் ஒன்றாக சென்று சான்றிதழோடு திரு.நாராயணன் அவர்களை சந்தித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய்யும்படி கோரிக்கை வைப்பதென முடிவெடுத்தோம். அன்று அவர் வருவது தெரிந்தவுடன் அனைவரும் அலுவலக அறைக்கு வந்தார்கள். சான்றிழின் பிரதியொன்றை அவரிடம் கொடுத்தேன். அவர் சான்றிதழையும் கூட்டத்தையும் கண்டவுடன் மிரண்டார். "சரி இப்ப என்ன அந்த பம்ப போடக் கூடாதா? சரி, போடல. யப்பா வாட்ச் மேன், இனி அந்த பம்ப போடாதப்பா." அவர் அப்போதைக்கு நிலைமையை சமாளிக்க அப்படிச் சொல்கிறார் என்பது எங்களுக்கு புரிந்தது.
"சார், ஒரு ப்ளம்பர கூப்பிட்டு எங்க கசிவு இருக்குன்னு பாக்க சொல்லுங்க சார். அதுவரைக்கும் ஒரு அடி பம்ப் போட்டுக் கொடுங்க"
"சரி சொல்றேன்" தன் கைபேசியை எடுத்தார். ப்ளம்பரை அழைக்க முயற்சித்தார். பின்னர் எங்களிடம், "பாரு உங்க முன்னாடி தான் நான் ஃபோன் பண்றேன். எடுக்க மாட்டேங்கறான். என்ன என்னப்பா செய்ய சொல்றீங்க?"
"சார் மெட்ராசில ஒரே ப்ளம்பர் தான் இருக்காரா?" கூட்டத்திலிருந்து குரல் வந்தது.
"நீங்க கேட்குறது ரைட்டு தான் தம்பி.." தலையை சொறிந்தவர், "ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. ரெடி பண்ணிறேன்", என்றார்.
கூட்டம் கலைந்தது.அவரின் கலக்கமும் தான். அடுத்து ஒரு வாரம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு வாரம் கழித்து நிதானமாக ஒரு துறுப்பிடித்த அடி குழாயை மாட்டினார்.
என் தம்பி வேறு எங்காவது அறையெடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான். "இது லேலைக்கு ஆகாது" என்றான்.
"சரி போகலாம். அங்கயும் இது மாதிரி வேற பிரச்சனை இருந்தா? மறுபடியும் வேற எடம் தேடுறதா?"
"சண்ட போடணும்னா போடலாம். நம்ம வேலையையும் பாக்கணும் இல்ல?"
"அப்புறம் ஏன் ராமர பத்தி, கிருஷ்ணர பத்தி, காந்தி பத்தியெல்லாம் பெரும பேசணும். அந்த அரசியல்வாதி அப்படி தப்பு பண்றான் இவன் இப்படி பண்றானு வாய்க் கிழிய பேசிட்டு கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்குது அத அப்படியே விட்டுட்டு விலகி போயிறதா? அவன் மாசம் ரெண்டு லட்சம் சம்பாரிப்பான். ஆனா அவனுக்கு காசு கொடுக்கிறவனுக்கு நல்ல தண்ணிக் கூட கொடுக்க மாட்டான். அத அப்படியே விட்டுட்டு நாம விலகிப் போகணும். நம்ம என்ன சும்மாவா கேட்குறோம்? காசு கொடுக்கல?"
என் தம்பி ஒரு புன்னகை உதிர்த்தான். "சரி, அடுத்து என்ன பண்றது?"
நான் மீண்டும் ஒவ்வொரு அறைக்கும் சென்று அனைவரையும் சந்தித்து அவர்களின் கையெழுத்தை பெற்றேன். அந்த காகிதத்தோடு தண்ணீர் மற்றும் மின்சார குறைபாடுகள் பற்றிக் கூறி அவற்றை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக் கொண்டு அப்படி நிவர்த்தி செய்யாத பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு நீதி மன்றத்தை அணுக வேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிட்டு ஒரு பதிவுத் தபால் ஒன்றை அனுப்பினேன். அந்த தபாலை பெற திரு.நாராயணன் மறுத்துவிட்டார். அவரும் அவரது மனைவியும் என் அறைக்கு வந்து என்னை காலி செய்து விடும்படிக் கூறி சண்டைப் போட்டுவிட்டுப் போனார்கள். கடிதம் என்னிடம் திரும்பி வந்தது.
எழிலகத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் திரு.ஷண்முகம் அவர்களை சந்தித்தேன். அவர் நடந்தவற்றையெல்லாம் ஒரு புகாராக எழுதி நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆணையர் திரு.ராஜாராமன் இ.ஆ.ப அவர்களிடம் கொடுக்கச் சொன்னார்.
திரு. ராஜாராமன் அவர்கள் என் புகாரையும் நான் சமர்ப்பித்த சான்றிதழையும் அடிப்படையாக கொண்டு திரு.நாராயணனிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அது மட்டும் அல்லாது, சென்னை மாநகராட்சி, சென்னை குடி நீர் வாரியம், மற்றும் மின்சார வாரியம் ஆகியவற்றுக்கும் கடிதம் அனுப்பி மேன்ஷனின் நிலைப் பற்றி விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். எங்கள் மேஷன் மட்டும் அல்லாது சென்னையின் அனைத்து மேன்ஷனின் நிலை பற்றியும் விசாரணை நடத்தும் படி பரிந்துரை செய்தார்.
நாராயணன் திரு.ராஜாராமன் அவர்கள் அனுப்பிய பதிவுக் கடிதத்தையும் பெற மறுத்தார். கடிதம் மீண்டும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கே சென்றது. மீண்டும் நாராயணன் என்னிடம் வந்து மேன்ஷனை காலி செய்துவிடும்படி காரசாரமாக கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் திரு.ராஜாராமன் அவர்களின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு வாரியம் வாரியாக அதிகாரிகள் பிரவேசிக்கத் துவங்கினார்கள்.
முதலில் குடிநீர் வாரியத்தில் இருந்து ஒரு பொறியலாளர் வந்தார்.
குடிநீர் வாரியம் வழங்கும் நீரில் குறையிருந்தால் மட்டுமே தன்னால் நிவர்த்தி செய்ய முடியும் என்றும். இங்கு பிரச்சனை போர் பம்ப்பில் இருப்பதால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமை காலை சுமார் பத்து மணியளவில் மாநகராட்சியிலுருந்து வந்திருக்கும் ஒருவர் என்னை சந்திக்க விரும்புவதாக நாராயணனின் மகன் என்னை அழைத்தார். நான் வெளியே சென்று பார்த்த பொழு இடுப்பில் கைககளும் கண்களில் கனலும் வைத்தபடி ஒரு குண்டான மனிதர் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன், "ஏன்யா தண்ணி சரிலைன்னா வேற மேன்ஷனுக்கு போறது தானே?" என்றார். நான் அவர் பெயரைக் கேட்டேன். அவர் சொல்ல மறுத்தார். சுகாதாரத் துறையிலிருந்து வந்திருப்பதாக சொன்னார். "சார், உங்கள விசாரணை பண்ணி நடவடிக்கை எடுக்க சொல்லி அனுப்பிருக்காங்க. முடிஞ்சா பாருங்க.. இல்லனா விடுங்க நான் கன்ஸ்யூமர் கோர்ட்ல பாத்துக்குறேன்" என்று சொல்லி விட்டு நான் கிளம்பிவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து தேனீர் பருகச் சென்றேன். திரும்பி என் அறைக்கு வந்த பொழுது என் தொலைப்பேசி இணைப்பு ஜன்னலருகே துண்டிக்கப் பட்டிருந்ததை கண்டறிந்தேன். யார் வேலை என்பது புரிந்தது. பி.எஸ்.என். எல்-லில் பின்னர் புகார் செய்யலாம் என முடிவு செய்து என் கணினியை துவக்கினேன்.
என் அறைக்குள் நாராயணன், அவரது மகன், வாட்ச் மேன் மற்றும் ஒரு தடியர் ஆகிய நால்வரும் வந்தார்கள். நாராயணனும் அவரது மகனும் என் அறையினுள் நின்றார்கள். தடியர் வாச்சற்படியில் நின்றார். வாட்ச் மேன் அறைக்கு வெளியே நின்றார். நான் நாற்காலியிலிருந்து எழுந்தேன். நாராயணன் அதை தன் பக்கம் இழுத்துக் கொண்டு அமர்ந்தார். கச்சேரியை ஆரம்பித்தார்கள்.
"பிடிக்கலன்னா காலி பண்ண வேண்டியது தானேடா... என்னா நீ கோர்ட்டு கீட்டுன்ற... நீ வாடகையும் கொடுக்க மாட்ட. கரன்டு பில்லு எவன் உன் அப்பனா கட்டுவான்.."
நான் வாடகைக்கு கொடுக்க சென்ற பொழுது அவர் மனைவி, "உன் வாடகையே வேணாம் நீ காலி பண்ணிக்கோ" என்றார். பிறகு எப்படி வாடகை கொடுப்பது?
"சார் வாடக கொடுக்காம எங்கேயும் நான் ஓடிரல. நீங்க முதல தண்ணிய ரெடி பண்ணுங்க. நீங்க தண்ணிய ரெடி பண்ணா நான் ஏன் கோர்ட்டுக்கு போறேன்"
உடனே தடியர், "டேய்..யார் எடத்துல இருந்து என்னா பேசுற... நீ கோர்ட்டுக்குள்ள போவ.. உயிரோட வெளிய வர மாட்ட.. பாக்குறியா?"
"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கோர்ர்டுக்கு போறது உறுதி."
தடியர், "இவங்கிட்ட பேசுணா வேலைக்கு ஆகாது. இவன உள்ள உட்கார வச்சு தண்ணி நல்லாருக்குனு எழுதி கொடுத்துட்டு காலி பண்ண சொல்லலாம்..." என்றார்.
நாராயணனின் மகனிடம் திரும்பி, "நம்ம கான்ஸ்டபிள வரச் கொல்லு என்றார்."
"சரி வாங்க... போலீஸ் ஸ்டேஷன் போலாம்" என்றபடி அறையை விட்டு வெளியே வந்தேன். உடனே தடியர், "டேய்.. எங்க ஓடப் பாக்குற.. வா வந்து உள்ள உட்காரு" என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் என் கையை அவரிடம் இருந்து இழுத்து விடுவித்துக் கொண்டேன். பின் மேன்ஷனுக்கு வெளியே வர முயற்சித்தேன். அப்பொழுது நாராயணன் என் தோள்களில் பின்னால் இருந்து தொங்கியபடி, "விடாத. புடி புடி புடி இவன", என்றார். நான் சுவற்றையும் கேட்டையும் பிடித்து இழுத்துக் கொண்டு மேன்ஷனை விட்டு வெளியேறினேன். எனக்கிருந்த ஒரே நோக்கம் என்ன சண்டை நடந்தாலும் அது மேன்ஷனுக்கு வெளியே நடக்க வேண்டும் என்பது தான். நான் மேன்ஷனை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் உள்ளேயே நின்று விட்டார்கள். அறையை பூட்டுவது பற்றியோ, செருப்பு அணிவது பற்றியோ கவலை படாமல் காவல் நிலையத்தை நோக்கி வேகமாக ஓடினேன். மணி சுமார் பனிரெண்டு இருக்கும். கால் வெயில் காரணமாக் சுட்டெறித்தது. எதையும் பொருட்படுத்தாமல் நேராக காவல் நிலையத்தை ஓடிச் சென்றடைந்தேன்.
காட்சிக்குள் காவலர்கள் வந்து விட்டதால் அடுத்து வணக்கம் போடப் போகிறேன் என நினைக்காதீர்கள். இப்பொழுது தான் இடைவேளை.
காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் என்னை நிதானமாக வரவேற்றார். "சார் நான் சரவணம் மேன்ஷன்..."
"இரு இரு... ஓடி வந்திருக்க... முதல்ல தண்ணி குடி..." என்றார்.
தண்ணீர் குடித்து விட்டு திரும்பிப் பார்த்தால் காவலர் அனைவரும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் தேனீர் குடிப்பது சாதாரணம் தான். ஆனால் அதை உபயம் செய்து கொண்டிருந்தவரை பார்த்த பொழுது தான் எனக்கு லேசாக தலை சுற்றியது. காரணம் அந்த தேனீரின் உபய கர்த்தா என்னை என் அறையில் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த அதே தடியர் தான். அதில் வேதனை என்னவென்றால் காவலர்களில் சிலர், "சார் எனக்கொரு டீ... எனக்கொரு டீ" என்று கேட்டுக் கேட்டுக் குடித்தது தான்.
அதன் பிறகு நான் பேசிய பேச்செல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருந்தது. எல்லா பிரச்சனைகளையும் விட்டு விட்டு நான் வாடகைக் கொடுக்காத ஒரு குறையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். "சார் நான் வாடகை எப்படியும் இன்னைக்கு இல்ல நாளக்கி கொடுக்கத்தான் போறேன், அவங்க என்ன கொன்றுவேன்னு மிரட்டுனாங்க. அதனால பாருங்க செருப்புக் கூட போடாம ஓடி வந்திருக்கேன் அத முதல்ல விசாரிங்க சார்" என்றேன்."அதெல்லாம் அப்புறம் விசாரிக்கிறோம் நீ முதல வாடகைய கொடுயா" என்றார்கள். வெங்கடாசலம் என்கிற காவலர் என்னிடம் ஒரு கைப் பேசியை கொடுத்து, "இந்தா யாருக்கு ஃபோன் பண்றியோ பண்ணு. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல, வாடகை நீ கொடுத்தாகணும்" என்றார். அலுவலகத்தில் இருந்த என் தம்பியை அழைத்து பணம் எடுத்து வரச் சொன்னேன்.
வாடகையை கொடுத்த பிறகு, நான் ஒரு புகார் பதிவு செய்ய வேண்டும் என்றேன். ஒரு பேனாவும் பேப்பரும் தந்தார்கள். புகாரை நான் எழுதிக் கொண்டிருக்கையில். "யோவ், என்ன நாவலா எழுதுற? சீக்கிரம் முடிய்யா? நான் வீட்டுக்கு போறதில்ல" போன்ற வசனங்களால் என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார் வெங்கடாச்சலம். எனினும் ஒருவழியாக நடந்தவற்றை எல்லாம் எழுதி முடித்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதை என்னை மிரட்ட வந்த நால்வரிடமும் படித்துக் காட்டினார். ஐவரும் வழைப் பழ ஜோக்கை கண்டது போல விலாவாரியாக சிரித்தார்கள்.அதன் பிறகு புகார் கடிதத்தை ஒரு கோப்புக்குள் வைத்து விட்டு, "சரி ரமேஷ். நீங்க கெளம்புங்க. நாங்க என்னான்னு விசாரிக்கிறோம்" என்றார். நான் புகாருக்கான ரசீது ஒன்றைக் கேட்டேன். வெங்கடாச்சலம் முகம் சுளித்தார். ஆய்வாளரிடம் பேசும்படி கூறிவிட்டு முகம் திருப்பிக் கொண்டார்.
ஆய்வாளர் முனைவர். திரு. செல்வகுமார் காவல் நிலைய வாசலில் சாலையோரத்தில் நின்றபடி சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். நானும் என் தம்பியும் அவரருகே சென்று கடிதத்துடன் நின்றோம். அவர் கடிதத்தை என்னிடமிருந்து கையில் வாங்கிக் கொண்டு பேசுவதை தொடர்ந்தார். நான் அவரது பெயரைப் பார்த்து, முனைவர் பட்டம் பெற்ற காவல் ஆய்வாளரா என ஆச்சரியப் பட்டேன். அவர் என் பக்கம் திரும்பி, "என்ன பேட்ஜ பாக்குற? என்ன? என்ன பத்தி கம்ப்ளெயின் பண்ண போறியா? இந்தா நல்லா பாத்துக்க, போய் எவன்கிட்ட வேணா சொல்லு எனக்கு கவலையில்ல" என்றபடி என் முகத்துக்கு நேராக பேட்ஜை கொண்டுவந்தார். அவர் அப்படி செய்தது மிகவும் கீழ்த் தரமாக தெரிந்தது.
என் தம்பி, "என்ன சார்? பேட்ஜ பாத்தது ஒரு தப்பா?" என்றான். பளீரென்று அவன் முகத்தில் அறைந்தார். "என்ன கேள்வி கேக்குற? போலீச கேள்வி கேக்குற அளவுக்கு நீ என்ன பெரிய இவனா நீ" என்று மீண்டும் அவனை அடிக்க கையெடுத்தார். நான் இடையில் புகுந்து என் இடது கையால் அவர் இடது கையை பிடித்துக் கொண்டு, வலது கையால் அவரை தடுத்தபடி, "பேசிட்டிருக்கும் போதே அவன எதுக்கு இப்ப அடிக்கிறீங்க? முதல்ல என்னா ஏதுன்னு விசாரிங்க சார்" என்றேன்.
"போலீஸ் கையவே புடிக்கறீயா நீ." எனக்கு ஒரு அறை விழுந்தது. "நீ உள்ள நட. முதல்ல உன்ன விசாரிக்கிறேன்" என்று என்னை பிடித்து உள்ளே தள்ளினார். முதுகிலும் ஒரு குத்து விழுந்தது. நானும் என் தம்பியும் காவல் நிலையத்துக்குள் கொண்டு செல்லப் பட்டோம். பின்னாலயே ஆய்வாளர் வந்தார். வரும் பொழுது, "இவனுங்க ரெண்டு பேத்தையும் ஜட்டியொட உட்கார வைங்க. பேப்பர்காரன கூப்புடுங்க. நாளைக்கு இவனுங்க ஃபோட்டோ பேப்பருல வரட்டும்" என்றார்.
உடனே வெங்கடாசலம் என் பெயர், பெற்றோர் பெயர், வயது ஆகியற்றை ஒரு குற்றவாளிகளை பதிவு செய்யும் நோட்டில் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்த நாடகம் ஆச்சரியமாக இருந்ததேயன்றி ஆதிர்ச்சியாக இல்லை. எனக்கு பயமும் தோன்றவில்லை. "எழுதுங்க எழுதுங்க தாராளமா எழுதுங்க" என்ற படி என் சட்டியையும் கழற்றினேன். "இந்தா இங்க ஒரு மச்சம், இங்க ஒரு மச்சம் நோட் பண்ணிக்கங்க" என்றேன். என் தம்பி தயங்கிய படி என் கையைப் பிடித்தான். அவனிடம் "இரு இரு. என்னா பண்ணீறாங்க பாப்போம்" என்றேன். ஆய்வாளர், "உங்கள எஃப்.ஐ.ஆர் போட்டு கோர்ட்டுல நிறுத்துவோம்" என்றார். "நானும் அத தான் எதிர்ப்பாக்குறேன்" என்றேன். ஆய்வாளர் மௌனமானார். வெங்கடாசலம் குறிப்பேட்டை மூடிவைத்தார். மிரட்டல் நாடகம் ஒரு முடிவுக்கு வந்தது. குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழிக்கு மிகச் சிறந்த உதாரணமாக ஆய்வாளரும் வெங்கடாசலமும் இன்னும் ஒரு சில காவலர்களும் அன்று என் கண்ணுக்கு தெரிந்தார்கள்.
பின்னர் நான் ஆய்வாளரிடம் அவர் என்னை எதற்காக அடித்தாரென்று கேட்டேன். அவர் எங்களை அடித்தது குற்றம் என்று பலமுறை சொன்னேன். "என்ன ஒருத்தன் கொன்றுவேன்னு மிரட்டுறான். அவன் கிட்டருந்து தப்பிச்சு உங்க கிட்ட வந்தா. நீங்க போட்டு அடிக்குறீங்க. என்ன சார் என்கொய்ரி இது?" அவர் ஒரு போலியான பணிவுடன், "சரி சார். நீங்க டீச் பண்ணுங்க. எப்படி என்கொய்ரி பண்ணுறது?" என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் தொடர்ந்தார். "இங்க பாரு, நீ தப்பு பண்ணுனனு நான் சொல்லல. ஆனா நீ பேசுன விதம் தப்பு. நீ எங்க போனாலும் எப்படி பேசறங்கறத வச்சுத் தான் உன் காரியம் நடக்கும். அதனால எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்கோ. ஒரு இன்ஸ்பெக்டருக்கிட்ட அப்படியாய்யா பேசுவ?"
'நான் எங்கய்யா பேசுனேன். நீ தான் விடவேயில்லையே. சரி விடு மனுஷன் நிதானத்துக்கு வந்துருக்காப்ல. பேச்ச வளக்காம, பிரச்சனைய சொல்லுவோம் ' என நினைத்தபடி, "சார். நான் பேட்ஜ பாத்தத தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல. உங்க பேரு முன்னாடி டாக்டர் இருந்தது அது கொஞ்சம் ஆச்சர்யமா பாத்தேன். சரி, இந்தக் கம்ப்ளெய்ன்ட கொஞ்சம் படிங்க" என்றேன். மனிதர் எந்த சலனமும் காட்டாமல் வெளியே சென்றுவிட்டார். கடைசி வரை அந்த புகாரை அவர் படிக்கவேயில்லை.
துணை ஆய்வாளர் திரு. த. ராதாகிருஷ்ணன் என்னிடம் வந்தார். "என்னய்யா? இன்ஸ்பெக்டருக்கிட்ட இந்தப் பேச்சு பேசுற? ஊது என்றார்." சரக்கடித்த தெம்பில் பேசுகிறேன் என நினைத்துவிட்டார் போலும். என்னுள்ளிருக்கும் சரக்கு, ஸ்ரீ ராமரின் நாம ஜபம் என்பதை நான் ஊதிய பொழுது அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
வெளியே சென்று ஆய்வாளரிடம் ஏதோ பேசி விட்டு திரும்பினார். "யோவ் உனக்கே இவ்வளவு டென்ஷன் இருந்தா. நைட்டு பூரா அலைஞ்சுட்டு வர அவருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும். நல்ல பசங்க, அவிங்கள போய் அடிச்சுட்டமேன்னு ரொம்ப வருத்தப்படுறாருய்யா. அவங்க மேல ஒண்ணும் தப்பு இல்ல அவங்க உரிமைய அவங்க கேட்குறாங்கன்னாரு. சாயங்காலம் வந்து உங்ககிட்ட பேசுறேன்னாரு. அதுவரைக்கும் அப்படி வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு, எங்கள் பதிலுக்கு காத்திராமல் போனார். மாலை வரை காத்திருந்தோம். இடையில் தயிர் சாதம் வாங்கிக்கொடுத்தார்கள். மாலை மாற்றலாகி செல்லும் காவலர்களுக்காக ஒரு சிற்றூண்டி விருந்து நடந்தது. எங்களுக்கும் இனிப்பு காரங்களை வழங்கினார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு, துணை ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் தன் மேஜைக்கு என்னை அழைத்தார். மாலை சுமார் ஆறு முப்பதாகியிருந்தது. "சொல்லுங்க ரமேஷ், என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்றார், தன்னால் முடிந்த மிகச் சிறந்த புன்னகையை உதிர்த்தபடி. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முடிவு செய்ய வேண்டியது அவரல்லவா? நான் முடிவு செய்ய என்ன இருக்கிறது? "சார். நான் என்ன முடிவு பண்றது சார். என் டெலிஃபோன் வயர கட் பண்ணி என்ன கொன்னுருவேன்னு மிரட்டியிருக்காங்க. அவங்க மேல நடவடிக்கை எடுங்க சார்."
"இங்க பாரு உன்ன என் தம்பி மாதிரி நெனச்சு சொல்றேன். தேவையில்லாத பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிடுற. உனக்கு தண்ணி சரியில்லையா? நீ வேற எடம் பாத்துகுட்டு போ. அத விட்டுட்டு மத்தவனுக்கெல்லாம் நீ ஏன் கஷ்டப்படுற?.." என்று ஆரம்பித்து ஒரு கதா காலட்சேபமே செய்தார். அதில் உபதேச ஆர்வத்தில் நான் இப்படியெல்லாம் வலை தளத்தில் பதிவு செய்வேன் என்பது தெரியாமல், "யோவ் இப்ப என்னய எடுத்துக்க. நான் இந்த வேலைக்கு லஞ்சம் கொடுத்து தான் வந்தேன். நான் கொடுக்கலன்னா வேற எவனாவது கொடுத்திருப்பான். இந்தக் காலத்துல நீ என்னயா? சுத்த வெவரம் கெட்டவனா இருக்க? இந்த எலக்ஷன்ல கள்ள ஓட்ட போட விடாம தான் இருந்தேன். நேரம் ஆக ஆக கட்சி ஆளுங்க அதிகமா வர ஆரம்பிச்சாங்க. விடாம இருக்க முடியுமா? விடாம இருந்தா என் குடும்பத்த அவன் சும்மா விடுவானா?" என்றார்.
"யோசிங்க ரமேஷ். யோசிச்சு பாத்து சொல்லுங்க. இப்ப நம்ம என்ன பண்ணலாம்?"
"அவங்க மேல நடவடிக்கை எடுங்க."
"என்னய்யா நீ, இவ்வளவு தூரம் சொல்றேன், சொன்னதயே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க? அவனுந்தாயா உன் மேல கம்ப்ளெயின் பண்ணியிருக்கான்?"
"சரி. அப்ப என் மேலயாவது நடவடிக்க எடுங்க."
த.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என் தோள்களில் ஓங்கி அறைந்தார். என் சட்டையை பிடித்து இழுத்து என்னை எழ வைத்தார். "போ. போய் அங்க உட்காரு." என்னை பிடித்து வெளி அறைக்குத் தர தரவென இழுத்துத் தள்ளினார். இரண்டு அறைகளுக்கும் இடையிலான நிலைப்படியில் நின்று கொண்டார். "யோவ். லூஸாயா நீ. சரியான மென்ட்டல் கேசு மாரி பேசிக்கிட்டு இருக்க?" என் தம்பியிடம் திரும்பி, "என்னயா இன்னக்குதான் இவன் இப்படியா? இல்ல எப்போதுமே இப்படித்தானா?" என்றார். அதன் பிறகு மீண்டும் தன் மேஜைக்கு என்னை அழைத்தார். "வாய்யா. வந்து உட்காரு. என்னய்யா? உங்கூட பெரிய தல வலியா இருக்கு.!" மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கினார். அது மீண்டும் அரை மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்தது.
"ரூல்ஸ் தெரியாம பேசிக்கிட்டு இருக்க. சிவில் கேசுக்கெல்லாம் ரெசீது கொடுக்கக் கூடாதுய்யா" என்றார்.
"சார் என்ன சார் சொல்றீங்க? என்ன கொன்றுவேன்னு நாலு பேரு வந்து மிரட்டியிருக்காங்க. என் டெலிஃபோன் வயர கட் பண்ணியிருக்காங்க. இது கிரிமினல் இல்லையா?" என்றேன்.
"இங்க பாரு. கொம்ப விட்டுட்டு தும்ப பிடிக்கக் கூடாது. பிரச்சன எங்க ஆரம்பிச்சுது?"
"தண்ணில"
"அது சிவிலா? கிரிமினலா?"
"அது சிவில் தான் சார்... ஆனா .."
"சொன்னா புரிஞ்சுக்கயா. இதுக்கெல்லாம் ரெசீது கொடுக்க முடியாதுய்யா"
இறுதியாக, "அவங்க மேல ஆக்ஷன் எடுக்காட்டி கூட பரவால்ல. எனக்கு ரசீது மட்டுமாவது தாங்க சார்" என்றேன்.
"யோவ் உன்ன என்னால சமாளிக்க முடியாது. போ. போய் இன்ஸ்பெக்ட்டருகிட்ட நீயே பேசிக்க. அவரு கொடுக்க சொன்னா, நான் கொடுக்குறேன்" என்றார்.
ஆய்வாளரிடம் சென்றேன். அவர் நூறு பேர் மலம் கலந்த நீரில் குளிப்பது பற்றியோ, எனக்கு வந்த கொலை மிரட்டல் பற்றியோ, துண்டிக்கப் பட்ட என் தொலைப்பேசியை பற்றியோ எல்லாம் கேட்காமல், என் தாடியைப் பற்றியும், நான் அணிந்திருக்கும் துளசி மாலைப் பற்றியும் விசாரித்தார். பின்னர் ஒரு பாக்கெட் மிக்ஸர் அன்பளித்தார். கிளம்பி காரில் சென்று அமர்ந்து கொண்டார்.
நான் பின் தொடர்ந்து சென்று ரசீது கேட்டேன். உடனே காரில் இருந்து இறங்கினார். "அக்னாலஜ்மெண்ட் கேக்குறாங்க. அது அவங்க உரிம. நம்ம நம்ம ரூல்ஸ் படி தானே செய்ய முடியும். இவங்களுக்கு நாப்பத்தியொன்னுல புக் பண்ணிரு. இல்ல இல்ல 75 ல ஒரு கேஸ் புக் பண்ணிரு." என்னிடம் திரும்பி, "நீங்க ரெண்டு பேரும் கோர்ட்டுல ஒரு எட்நூறு ரூபா, ஃபைன் கட்ட வேண்டி வரும். பாத்துக்குங்க. சப்- இன்ஸ்பெக்டர் உங்களுக்கு போட்டுத் தருவார். போங்க" என்றவர் காரில் ஏறி விரைந்தார்.
மீண்டும் திருவாளர். ராதாகிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தேன். அவர் மீண்டும் ரசீது கொடுக்க முடியாதென்றார். அதன் பிறகும் பேச்சு வார்த்தை சிறிது நேரம் தொடர்ந்தது. பின்னர், "யோவ் நீ வேலைக்கு ஆக மாட்ட, உங்கப்பாகிட்ட நான் பேசுறேன். உங்க அப்பா நம்பர் சொல்லு."
எனக்கும் அவர் வேலைக்கு ஆக மாட்டார் என்பது புரிந்தது. இரவு ஒன்பதரை மணிக்கு அப்பாவுக்கு தொலைபேசியில் நானும் என் தம்பியும் காவல் நிலையத்தில் இருக்கிறோம் என்றால் அவர் பயப்படக் கூடும். அம்மாவும் பயப்படக் கூடும். "அப்பாகிட்ட பேச வேணாம் இருங்க" என்றேன். என் கைப் பேசி வேறு அவரிடம் தான் இருந்தது. மதியமே அதை வாங்கி ஆஃப் செய்து வைத்துவிட்டார்கள். கொஞ்ச்ம நேரம் மௌனமாக இருந்தேன். ராதாகிருஷ்ணன் மீண்டும், "யோவ் இப்ப நீ எழுதி கொடுக்கிறியா இல்லயா யா?" என்றார்.
"சரி எழுதி கொடுக்கிறேன்" என்றேன்.
நாராயணனிடம் எந்த தகராறும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும், மேன்ஷனை ஜூன் முப்பதுக்குள் காலி செய்து விடுவதாகவும் எழுதிக் கொடுத்தோம்.
காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய பொழுது மணி ஒன்பதரை இருக்கும்.
அன்வரும் குமரேஷும் எங்களுக்காக வெளியே காத்திருந்தார்கள். அவர்களோடு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றொம்.
வெள்ளை நிற முகத்தோடு குழுலூதும் நிலையில் கிருஷ்ணர் நின்றிருந்தார். அவரை கோக்கி நகர முயற்சித்தேன். மொட்டை மாடி எங்கும் தூய நீர் நிரம்பியது. அதில் என்னை நான் அமிழ்த்தினேன். அந்த நீர் என்னை புனிதப் படுத்தியது. கண் விழித்த பொழுது மணி அதிகாலை நான்கு. எனக்கு அப்பொழுது தோன்றிய முதல் எண்ணம், இதை இப்படியே விடக் கூடாது என்பது தான்.
வாழ்க்கையில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்திருக்கிறேன். போலீஸிடம் வாங்கிய இரண்டு அறைகளால் நான் எந்த விததிலும் குறைந்து விட போவதில்லை. என் மனதிலிருந்த கேள்வி படிதவனாகிய என்னிடமே இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யும் காவலர்கள் படிக்காத பாமரர்களிடம் என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள். ஒரு தவறை நாம் கண்டு கொள்ளாமல் விடும் பொழுது, அது தவறு செய்பவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும் செயலாகத் தான் அமைகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதில் தெளிவானேன்.
உடனே என் தம்பியை எழுப்பினேன், அன்வரையும் குமரேஷையும் என் அறைக்கு அழைத்தேன். அன்று மீண்டும் காவல் நிலையம் சென்று என் புகாருக்கான ரசீது கேட்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். இந்த முறை வக்கீலோடு செல்லலாம் என்று சொன்னேன். மற்ற மூவரும் இதற்கு சம்மதித்தார்கள்.
அன்று வக்கீலை சந்தித்த பொழுது, மீண்டும் அதே காவல் நிலையம் சென்று புகார் செய்வதை விட காவல் துறை ஆணையரிடம் புகார் செய்யலாம் என அறிவுரை சொன்னார்கள்.
இதற்கிடையில் என் தம்பி எழுத்தாளர் திரு.ஞாநி அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்தான். அவர் தன் சக பத்திரிக்கையாளர் ஒருவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த பத்திரிக்கையாளர் எங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்கு ஒரு மானசீக தூணாகவே அவர் திகழ்கிறார். நான் அவரிடம் காவல் துறை தலைமை ஆணையரை சந்தித்து புகார் செய்ய முடிவு செய்திருப்பதுப் பற்றி கூறினேன். "அது மட்டும் பத்தாது இவனுங்கள உடனே மீடியால எக்ஸ்போஸ் பண்ணிரலாம்" என்றார். காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்கும் பொழுது புகாரின் பிரதிகள் சிலவற்ற்றை கொண்டு வரச் சொன்னார். நிருபர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.
ஜூன் பத்தாம் தேதி நான் எங்கள் வக்கீல் வெண்ணிலாவுடன் ஆணையரை சந்திக்கச் சென்றேன்.
புகாரை கேட்கும் ஆய்வாளர், "என்ன தம்பி, போலீஸ் மேலயே கம்ப்ளெயின் கொண்டு வந்திருக்க? நாளைக்கு அவன் உன் மேல பொய்க் கேஸ் போட்டு உள்ள தள்ளுனா என்ன பண்ணுவ? இதெல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி" என்றார்.
"என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் ஃபேஸ் பண்ண தயாரா இருக்கேன் சார்" என்றேன்.
வக்கீல், அவர்கள் துறை என்பதால் நம்மை குழப்ப ஏதாவது சொல்வார்கள், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம், நேராக ஆணையரிடம் பேசிக் கொள்ளலாம் என்றார். ஆணையரை சந்திக்க சென்ற பொழுது எல்லாரையும் இரண்டு மூன்று பேராக விட்டவர்கள் என்னை மட்டும் தனியாகத் தான் போக வேண்டும் என்று வக்கீலை உள்ளே வர விடாமல் தடுத்துவிட்டார்கள். உள்ளே சென்ற பிறகும் ஆணையரிடம் என் புகாரை விளக்கும் பொழுது நாராயணன் என்னை மிரட்டியதோடு கதையை முடித்துவிட்டார்கள். "மிரட்டுறாங்களா?" என்று ஆணையர் திரு.ராஜேந்திரன் என்னை பார்த்து கேட்டார்." நான் உடனே, "அத போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லப் போனா அங்க இன்ஸ்பெக்டரும் சப்- இன்ஸ்பெக்டரும் என்னயும் என் தம்பியும் அடிச்சு ஒன்பது மணி நேரம் உட்கார வெச்சி வர 30ந்த் தேதி காலி பண்ண சொல்லி எழுதி வாங்கிட்டாங்க சார்" என்றேன்.
"இத அந்த ஸ்டேஷனுக்கு பார்வர்ட் பண்ணாதீங்க. நுங்கம்பாக்கம் ஏ.ஸி யை நேரடியா என்னனு பாக்கச் சொல்லுங்க" என்றார். அதில் முத்திரை பதித்தார்கள். கையெழுத்திட்டார். என்னை சிறிது நேரம் காத்திருக்க சொல்லி, பின் அழைத்தார்கள். மக்கள் தொடர்பு அலுவலர் தொலைப் பேசியில் துணை ஆணையர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு புகாரைப் பற்றி கூறி, உடனே விசாரிக்கச் சொன்னார்.
மறு நாள் ஆங்கில நாளிதழ் டெக்கான் க்ரானிக்கலில் செய்தி வெளியானது. (11--6-2009.)
அதன் பிறகு ஜூன் 25 வரை எந்த விசாரணையும் நடை பெறவில்லை. ஜூன் 26 என் தம்பியும் பாலா என்கிற நண்பரும் மீண்டும் காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் செய்தார்கள். ஆணையர், "இந்த புகார் ஏற்கனவே வந்ததே என்றாராம். மீண்டும் துணை ஆணையரை விசாரணை செய்யும்படி உதரவிட்டார்.
அன்று மாலை நுங்கம்பாக்கம் துணை ஆணையர் எங்கள் மேன்ஷனுக்கு வந்தார். உடன் ஆய்வாளர் முனைவர். திரு.செல்வக்குமாரும் வந்திருந்தார்.
நுங்கம்பாக்கம் துணை ஆணையர் விசாரணை செய்ய வந்தாரா அல்லது தேர்தல் நடத்த வந்தாரா என்பதில் நான் இன்னும் குழப்பத்தில் தான் உள்ளேன். காரணம் நீரில் மனித மலம் கலந்ததற்கான சான்றிதழ் என்னிடம் இருந்தது. அது மட்டும் அல்லாமல் தரை தளத்திலேயே சுமார் பத்து பேர் நீர் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு நாராயணின் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு மேன்ஷனில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று நீரின் தரம் பற்றி கேட்டறிந்தார். புகாரை கொடுத்த நானும் புகாரை மறுக்கும் நாராயணின் மகனும் இருக்கும் பொழுது என்னை கீழேயே இருக்கச் செய்துவிட்டு நாராயணின் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக செல்வது எந்த விதத்தில் நடுநிலையான விசாரணை என்பது எனக்கு புரியவில்லை.
நாராயணன் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். முன்னுக்குப் பின் முரணாக துணை ஆணையரின் கேள்விக்கு பதிலளித்தார். அந்த முரண் பாடுகளைக் கூட ஒரு புன்சிரிப்புடன் ரசித்த படி, "பாத்து பண்ணிக் கொடுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்"
என்னை மிரட்டியது பற்றியோ, என் தொலைப் பேசி துண்டிக்கப் பட்டது பற்றியோ எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
மறுநாள் காலை சுமார் பத்து மணியளவில் நாராயணன் மேன்ஷனை எல்லோரும் ஜூலை பதினைந்துக்குள் காலி செய்து விட வேண்டும் என ஒவ்வொரு அறைக்கும் நோட்டீஸ் கொடுத்தார். நீர், மின்சாரம் ஆகியவற்றை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தால் இந்த அவசர முடிவு என குறிப்பிட்டுருந்தார். அது வரைக்கும் யாருக்கும் நீர் வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். மேன்ஷனில் உள்ள அனைவரும் அவரை இது பற்றி அணுகிய பொழுது. ஒன்று நீங்கள் அனைவரும் காலி செய்ய வேண்டும் இல்லையெனில் அறை எண் 3,5,8 மற்றும் 11ல் இருப்பவர்கள் காலி செய்ய வேண்டும் எனக் கூறினார். மீண்டும் காவல் நிலையம் சென்றொம்.
காவல் நிலையத்தில் நான், என் தம்பி, குமரேஷ், அன்வர், பாலா ஆகிய ஐவரும் காலி செய்ய வேண்டும் என்று நாராயணின் மகன் தலைமையில் பதினைந்து மேன்ஷன் வாசிகள் புகார் செய்தார்கள். காவலர் திரு.வெங்கடாசலம் காரணம் கேட்டார். நாங்கள் நீரின் தரம் பற்றி சர்ச்சை செய்வதால் தங்கள் அனைவருக்கும் நீர் வழங்குவதை நாராயணன் நிறுத்திவிட்டதாகவும். நாங்கள் காலி செய்துவிட்டால் தங்களுக்கு உடனே நீர் கிடைக்கும் என்று காரணம் சொன்னார்கள். திரு.வெகடாசலம் நாராயணனின் மகனிடம் அவர்களுக்கு நீர் வழங்காதது பற்றி காரணம் கேட்டார்.
"டேங்க் கழுவணும் சார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் உத்தரவு" என்றான்.
"என்னா பதினஞ்சு நாளா டேங்க் கழுவற?"
"இல்ல சார் இன்னிக்கு மட்டும் தான்"
"அப்ப நாளலருந்து தண்ணி தருவல்ல"
"தருவோம் சார்"
வெங்கடாசலம் அந்த பதினைந்து பேரிடமும், "வீட்ட காலி பண்ண வக்கறது போலீஸ் வேல கிடையாது. அதெல்லாம் நீங்க கோர்ட்டுல பாத்துக்குங்க" என்றார்.
நாராயாணனின் மகனிடம் "தண்ணிய கட் பண்றது, கரண்ட கட் பண்றது இதெல்லாம் பண்ணாத" என்றார். அவனும் சம்மதித்தான்.
நாராயணன் அவர்களின் அதிரடி நடவடிக்கை தோல்வியடைந்தது.
மீண்டும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் திரு.ஷண்முகம் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினேன். இந்த முறை நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ராஜாராமன் அவர்களை நேரடியாக சந்தித்து நடந்தவற்றிக் கூறச் சொன்னார். திரு.ராஜாராமன் அவர்கள் நுகர்வோர் நிலை இவ்வளவு மோசமாக இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். "அத க்ளீன் பண்ணா என்ன? இவனுக்கெல்லாம் நாலு கேஸ் போட்டு அலைய வெச்சாத்தான் புத்தி வரும். ஏற்கனவே நான் அனுப்புன லெட்டர வேற திருப்பி அனுப்பிச்சுருக்கான். செக்ஷன் 12 டி ல நான் ஒரு கேஸ் போட்றேன். தனிப் பட்ட முறையில நீங்க பாதிக்கப் பட்டதால ஒரு லட்சம் கேட்டு நீங்க ஒரு கேஸ் போடுங்க" என்றார். காவல் ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் எழுதி என்னை மீண்டும் அவரை சந்திக்கும்படி சொன்னார்.
மறுநாள் ஜூலை ஒன்றாம் தேதி மீண்டும் காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் செய்தேன். அவர் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார். அதுபற்றி கூற நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்குச் சென்றேன். அங்கு திரு.ஷண்முகம், "உங்க ஓனர் எங்க ஆளு கொண்டு போன லெட்டர வாங்கிட்டார். இல்லனா கதவுல ஒட்டியிருப்போம். இன்னும் பதினஞ்சு நாள் கழிச்சு கேஸ் ஃபைல் பண்ணிரலாம்" என்றார்.
ஜூலை மூன்றாம் தேதி எனக்கு ஒரு பதிவுத் தபால் வந்தது. அது ஜூன் ஐந்தாம் தேதி எங்கள் மேன்ஷனுக்கு வந்து தன் பெயரை சொல்ல மறுத்த அலுவலரிடம் இருந்து வந்திருந்தது. அவர் சரவணம் மேன்ஷனின் நீரில் மனித மலக் கலவையில்லை என்றும், அது குடிக்க தகுந்தது என்றும் சான்றிதழ் வழங்கியிருந்தார். கையால் தொடக் கூட தகுதியற்ற நீரை குடிக்கத் தகுந்தது என்று சான்றிதழ் வழங்கிய கடமையுணர்ச்சியை என்னவென்று புகழ்வது? இதைப் பற்றி திரு.ஷண்முகம் அவர்களிடம் கூறினேன். அவர் அந்த சுகாதார அதிகாரி மீதும் ஒரு வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.
இதற்கிடையில் எங்கள் பத்திரிக்கையாள நண்பர் ஜூனியர் விகடன் நிருபர் திரு.பாலச்சந்திரன் அவர்களிடம் இது பற்றி சொல்லச் சொன்னார். நான் அவரை விகடன் அலுவலகத்தில் சந்தித்து நடந்தவற்றை கூறினேன். ஜூலை எட்டாம் தேதியிட்ட ஜூனியர் விகடனில் "நூறு மில்லி தண்ணீரில் முப்பத்தாறு மில்லி அசிங்கம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
மேன்ஷனில் உள்ள நீர் சரியில்லாததால் அடி குழாயிலிருந்து குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பயன்படுத்தி வந்தோம். ஜூன் ஐந்தாம் தேதி அதில் மண் போடப்பட்டிருந்தது. இது குறித்து காவல் துறைக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக புகார் செய்தேன். அதற்கு எந்த பதிலும் இல்லை.
அன்வர் ஏழாம் தேதி மீண்டும் எண் நூறை அழைத்து புகார் செய்தார். அவர்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்யச் சொன்னார்கள். அங்கே புகாரை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். எனினும் காவலர் ஒருவரை அனுப்பினார்கள்.காவலர் திரு வெகடாச்சலம் நாங்கள் புகார் செய்ததற்காக மிகவும் கடிந்து கொண்டார். மேலும் அடிகுழாயில் யார் கல்லும் மண்ணும் போட்டார்கள் என்பது பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் எங்களை நீதி மன்றத்தை அணுகும் படி கூறிவிட்டு சென்று விட்டார். அன்வர் காவல் நிலையத்தில் புகார் செய்த போதும், வெங்கடாச்சலம் எங்கள் மேனஷனில் விசாரணை நடத்திய போதும் நிகழ்ந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறோம்.
மாநில மனித உரிமை நீதிமன்றத்தில் ஜூன் பதினொன்றாம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளோம்.
குற்றவியல் நீதி மன்றத்திலும் என்னை மிரட்டியது குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.
நுகர்வோர் நீதி மன்றத்திலும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.
திரு. நாராயணன் ஆரம்பத்திலேயே எங்கள் புகாருக்கு செவி சாய்த்திருந்தால், ஒரு பத்தாயிரம் ரூபாய் செல்வில் ஒரே நாளில் அல்லது அதிக பட்சம் மூன்று நாட்களில் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்திருக்கும். அல்லது நான் காவல் நிலயம் சென்ற பொழுதாவது ஆய்வாளரோ துணை ஆய்வாளரோ தங்கள் கடமையை முறையாக செய்திருந்தால் அப்பொழுதாவது முடிந்திருக்கும். ஆனால் நாராயணன் என்கிற ஒரே ஒரு பணக்காரரின் பிடிவாதத்தாலும் சில அதிகாரிகளின் சோம்பேறித்தனம் மற்றும் பொருளாசையாலும் இந்தப் பிரச்சனை கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.
இன்னும் எவ்வளவு தூரம் வளர்கிறதோ...?
அடிகுழாயில் கல் போட்டு அதை சிதைத்தது குறித்து அன்வர் புகார் செய்ய சென்ற பொழுது F5 காவல் நிலையத்தில் நடந்த உரையாடல்.

303 comments:
«Oldest ‹Older 1 – 200 of 303 Newer› Newest»யப்பா மூச்சு முட்டுது.
நினைத்துப் பார்க்க முடியாத, யாருக்கும் நடக்கக் கூடாத கொடுமைகள்.
உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.
என்ன கொடுமை இது? :(
இவ்வளவு பெரிய பதிவை படிச்சி முடிச்சதும் சபாஷ்’ன்னு சொல்ல தோணுச்சு.. தைரியமா பிரச்சினையே அணுகி இருக்கீங்க.. :)
வாழ்த்துக்கள்.. :)
என்னங்க இது?????
காவல்துறை இப்படியா அழுகிப் புண் பிடிச்சுக்கிடக்கு!!!
ச்சே.........
உங்க தைரியத்தை உண்மையான மனசுடன் பாராட்டுகின்றேன்.
வெற்றிபெற அந்த இறைவன் துணை இருக்கும்.
( இவனுங்க செய்யும் அட்டகாசத்தைப் பார்த்தால் சாமி இருக்கான்னே சந்தேகம் வந்துருதுங்க)
உங்கள் விடா முயற்சிக்குப் பாராட்டுக்கள் !!
தொடர்ந்து போராடுங்கள்
Thangalai Eppadi paraattuvathu enrae theriyavillai Nanbha.... Great effort...
நினைத்து பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு. உங்க சார்பா நானே இந்த பதிவின் லிங்கை துணை முதல்வர் வெப் சைட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆக்ஷன் நிச்சயம்!
அகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் ஒரு புதிய பத்திரிக்கையில் இதற்கு எதாவது செய்ய முயல்வதாகவும் உங்களுக்கு தார்மீக ஆதரவும் பாராட்டும் தெரிவித்து ஒரு பத்திரிக்கை ஆசிரியர் தெரிவித்து உள்ளார். வாழ்த்துகள்.
இந்த பதிவை பார்வைக்கு கொண்டுவந்த கோவி கண்ணனுக்கு நன்றி.
கை கொடுங்க ஸார். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள்!
இந்த சுட்டி கொடுத்த அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்கும் நன்றி.
-------------------
உங்களுடைய முயற்சி அருமை நண்பரே, ஏதோ க்ரைம் நாவல் படிப்பது போல் இருந்திச்சி - உண்மைகள் உரைக்க தான் செய்தன - உங்கள் முயற்சி வெற்றி அடைய வேண்டும்.
காந்தியை நினைத்து பார்க்க வைக்கிறது உங்கள் பதிவு ,
பைத்தியக்காரன் என்று உலகம் சொல்லும் , ஆனால் யாராவது ஒருவர் இப்படி செயல்படும் போதுதான் பிறருக்கும் நம்பிக்கை பிறக்கும் ,
வாழக வளமுடன்...
அப்பா.. ம்.. கடும் உழைப்பு..
சல்யூட் அடிக்க வேண்டிய பதிவு..!
காவல்துறையின் அலட்சியப் போக்கால் எவ்வளவு பிரச்சினைகள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..
அரசு இயந்திரங்களின் தூங்கி வழியும் தன்மையினால் தடியெடுத்தவன் தண்டல்காரன் கதையாகிவிட்டது.
உங்களுடைய வழிமுறைகள் அனைத்தும் சரியானவைதான்.. எடுத்துக் கொண்ட முயற்சிகளும், நோக்கமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்..
விடாமுயற்சிக்கு உங்களைத்தான் உதாரணமாக்க வேண்டும் பிரதர்..!
படிக்கும் போதே மனம் மிகவும் சஞ்சலம் அடைத்தது. அப்ப நம்ம திரைப்படங்களில் காண்பிப்பது ஒன்றும் மிகை இல்லையா?
உங்கள் அயரா முயற்சிக்கும், அசாத்திய துணிவுக்கும், மன உறுதிக்கும் வணக்கங்கள். என்னால் நிச்சயம் இவ்வளவு நேரம் தாக்குப் பிடித்திருக்க முடியாது.
அனுஜன்யா
போலிஸ், கோர்ட், கேஸ் இதுக்கெல்லாம் மிடில் கிளாஸ் அஞ்சி நடுங்குறதாலத்தானே இவ்வளவு அட்டூழியமும் நடக்குது. எதுக்கு பயப்படாம இவ்வளவு போராட்டத்தையும் நடத்திய நீங்களும், உங்கள் நண்பர்களும் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
Hi ,
I will tell few information about the Selvakumar Inspector.
He is son of a Head constable, his was trying to get IPS during that time he got his Phd in Socialogy.
he did not get IPS and finally he got Selected as Sub inspector.
he was suspeded from Police inspector last year when he was working as Solayur inspector. a case against from a women police.
using some influence he again came to job.
Ram
சிங்கம் நண்பா நீ ..
Respect Man..
Deep Respect
போலிஸ், கோர்ட், கேஸ் இதுக்கெல்லாம் மிடில் கிளாஸ் அஞ்சி நடுங்குறதாலத்தானே இவ்வளவு அட்டூழியமும் நடக்குது. எதுக்கு பயப்படாம இவ்வளவு போராட்டத்தையும் நடத்திய நீங்களும், உங்கள் நண்பர்களும் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
இந்தப் போராட்டத்தில் நாங்களும் தோள் கொடுக்கிறோம்!
யப்பா, நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. உங்கள் தைரியத்துக்கு ஒரு பெரிய சல்யூட்!
உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !!!
இந்த பதிவ படிக்கும் போது என் உடம்பெல்லாம் சில்லிர்குது
உங்கள் நேர்மையும் தைரியத்தையும் உங்கள் பாதம் தொட்டு வணங்கேறன்
உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் புரையோடிப் போய்கிடக்கும் அரசு இயந்திரங்களை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கின்றது..:(
உங்கள் தைரியத்துக்கு ஒரு சல்யூட்!
:((
இத்தனைக் கொடுமைகளுக்கு மத்தியிலும் உங்களின் மனவுறுதிக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.
இனி மேற்கொண்டு செய்ய வேண்டியதை
மிகுந்த நிதானத்துடனும், பொறுமையுடனும் செய்து வெற்றி அடைவீர்களாக
உங்களது தைரியத்தை பாராட்டுகிறேன்..
வழக்கில் வெற்றிபெற வாழ்த்துகள்..
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்! உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்!!
முடிந்தால் உங்கள் தொலைபேசி நம்பரை எனக்கு மெயில் பண்ணுங்க!!!
tamilamuthan_vn@yahoo.co.in
உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
#கோவி கண்ணன்
மிக்க நன்றி நன்றி நண்பரே. இவ்வளவு நீளமான பதிவுக்கும் இத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்றால் அதற்கு தங்கள் பரிந்துரையே காரணம். தங்களுக்கும் தமிழ்மணம் இணைய தளத்துக்கும் என் நன்றிகளை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.
#ICQ
:) இடும்பைக்கு இடும்பைக் கொடுப்போம். தங்கள் ஆதரவுடன்.
#இராம்/Raam
இவ்வளவு பெரிய பதிவ பொறுமையா படிச்ச பிறகும் என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி... :)
#துளசி கோபால்
//காவல் துறை இப்படியா அழுகி புண் பிடிச்சிக்கிடக்கு??//
அந்த வெள்ளி இரவு இதே கேள்வியோடு தான் தூங்கப் போனேன்.
//வெற்றிபெற அந்த இறைவன் துணையிருக்கும்//
நானும் அதே நம்பிக்கையில் தான் போராடுகிறேன்.
#Seemachu
தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே. நிச்சயம் போராடுவேன்.
#கடிக்கலாம் வாங்க
நன்றி நண்பா.
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..
உங்கள் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் தலைவணங்குகிறேன்..
நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,
வாழ்த்துகள்..
மிக நீளமான கட்டுரையாக இதை பார்க்கவில்லை. மிக நீளமான போராட்டம். உரிமையை நிலைநாட்ட போராடும் உங்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள். விடாமுயற்சியுடன் இருங்கள். வழக்கில் வெற்றி பெற வாழ்த்துகள்.
படிச்சி முடிக்கவே மூச்சு முட்டுதுங்க. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!
Naanum oru kalathule choliamedu le irunthu iruken. ange irukire kastam ennanu theriyum. ana naan patha yaarume, illa naano, intha mudivu edukile. Ungakite antha thonichal iruku, Paraturen.
#அபி அப்பா
மிக்க நன்றி நண்பரே. ஏற்கனவே இது பற்றி துணை முதல்வர் வலை தளத்தில் பதிவு செய்துள்ளேன். இந்தப் பதிவை அனுப்பவில்லை. என் சார்பாக நீங்கள் அதை செய்தது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது. மிக்க நன்றி.
#ICQ
பத்திரிக்கையின் ஆற்றல் அளப்பரியது. அதை இந்தப் பிரச்சனையில் கண் கூடாக காண்கிறேன். அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு என் நன்றியை தெரிவியுங்கள். கோவி கண்ணன் அவர்களுக்கு தங்களோடு நானும் நன்றிகள் சொல்கிறேன்.
#Raja
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா.
#நட்புடன் ஜமால்
நன்றி நண்பரே. முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்ற தங்கள் நல்லெண்ணத்துக்கு என் நன்றிகள்.
#மதி இண்டியா
காந்தி மஹாத்மாவின் தாக்கம் என்னுடைய இம்முயற்சிக்கு ஓர் முக்கிய காரணம். ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.
#உண்மைத் தமிழன்
அரசு இயந்திரங்கள் தூங்குகின்றன என கேள்விப்ப்ட்டிருந்தேன். இப்பொழுது தான் கண்கூடாக பார்ர்கிறேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.
#அனுஜன்யா
திரைப்படங்களில் காண்பிப்பது எள்ளளவும் மிகையல்ல. :) எனக்கு இது சம்பவத்தன்று தான் உரைத்தது. கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் வருவது போல எங்காவது காவலர்கள் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோமாக.
சுட்டி கொடுத்த அண்ணன் ஜமாலுக்கு நன்றி !!!!
சினிமால பாக்குறது உண்மை தாங்க...
பணம் தான் எல்லா இடத்துலயும் விளையாடுது..நமக்கெல்லாம் என்ன மதிப்பு ??
இருந்தாலும் உங்கள் போராட்டத்தை விடாதீர்கள்.
தங்கள் பின்னூட்டங்களால் என்னை நெகிழ்த்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நண்பருக்கும் என் பணிவான வணக்கங்கள். மனிதத்தின் மீதும் மனிதர்கள் மீதும் எனக்குண்டான நம்பிக்கை பொய்யில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். எனக்கு ஆதரவு அளிக்கும் ஒவ்வொருவரின் பாதங்களிலும் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்
Royal Salute Sir உங்களுக்கு.
அரசாங்கம் அதன் துறை சார்ந்தவைகள் எனக்கு எரிச்சலை தரும்.
இந்த போலிஸ்(99%) மாதிரி திருட்டு மொல்லமாரி பசங்க யாருமே கிடையாது.
again great salute sir உங்களுக்கு.
Great Salute.
Please write me your mobile number to friends.sk@gmail.com
தங்கள் பின்னூட்டங்களால் என்னை நெகிழ்த்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நண்பருக்கும் என் பணிவான வணக்கங்கள். மனிதத்தின் மீதும் மனிதர்கள் மீதும் எனக்குண்டான நம்பிக்கை பொய்யில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். எனக்கு ஆதரவு அளிக்கும் ஒவ்வொருவரின் பாதங்களிலும் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன். தாங்கள் அனைவரும் இதை எவ்வளவு தூரம் பிரபலபடுத்துகிறீர்களோ அவ்வளவு தூரம் நம் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். என்வே இதை பலரோடும் பகிர்ந்து கொள்ளும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றி நிச்சயம் ...
சினிமா பார்ப்பது போல உள்ளது..
நீங்கள் காவலர்களிடமும் உங்கள் மேன்சன் நபர்களிடமும் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை என்னால் உங்கள் வார்த்தைகளில் இருந்து உணர முடிகிறது.
உண்மையில் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை... உங்கள் முயற்சி வெற்றி பெற என் மனதாரா உங்களை வாழ்த்துகிறேன்.
என்னால் முடிந்த வரை இதை மற்றவர்களிடம் கொண்டு செல்கிறேன்.
அன்புடன்
கிரி
உங்க மன உறுதிக்கும் விடா முயற்சிக்கும் தலை வணங்குகிறேன். முயற்சி வெற்றியை கொடுக்கட்டும்.
எங்களையும் இத அறிய வச்ச நண்பர் ஜமாலுக்கு நன்றிகள்.
விடக்கூடாதுங்க....இயலுமான அளவுக்கு இந்தப் பதிவைப் பரப்புவோம்.. நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என்று போகாமல் போராடும் உங்கள் போன்றவர்கள் நாளைக்கு நாயகர்களாகப் பார்க்கப்படுவார்கள்... இன்றைய நிலையைக் கண்டுகொள்ளாமல் போராடுங்கள்.
வாழ்த்துக்கள், உங்கள் முயர்ச்சி நிச்சயம் வெற்றி பெரும்
தங்கள் முயற்சி....அபாரமானது... வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் / உங்கள் தைரியத்துக்கும்
தன்னம்பிக்கைக்கும் பாராட்டுகள்
நினைத்துப்பார்க்கவே கொடுமையா இருக்கு..
அதுவும்..
மலம் கலந்த குடிநீர்..
ஆதரவு தரவேண்டிய அதிகாரிகளின் அதிகார துஷ்பிறையோகம்..
இவ்வளவு துணிச்சலா பலமட்டத்திலும் உள்ளவர்களை தைரியமாக எதிர்கொண்டு போராடிக்கொண்டு உள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்..
(ஆமா.. இவ்ளோ பிரச்சனைலையும் முழுவதையும் பதிவா போட்டு அசத்திருக்கின்களே.. உண்மையிலேயே நீங்க கிரேட்..)
இதனை அறியப்படுத்திய ஜமாலுக்கு நன்றிகள்..
என்னால் இயன்ற அளவு நானும் என் நண்பர்களுக்கு இதனை தெரியப்படுத்துகிறேன்..
போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..
Great.. keep going..
Ohh dear! Talk about perseverance.
Well done mate :)
உங்க தைரியத்தை உண்மையான மனசுடன் பாராட்டுகின்றேன்.
வெற்றிபெற அந்த இறைவன் துணை இருக்கும்.
கண்கள் கலங்கியது தோழா , உங்கள் போராட்டத்தை கண்டு . உங்களின் துணிச்சல் இந்த ஆற்றல் இன்னும் பல மடங்காகி இதில் இன்னும் சிறப்பா போராட வாழ்த்துக்கள்.
லட்சத்தில் ஒருவர்தான் இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடும் குணம் இருக்கும்.ஒரு காந்தியை ரயிலில் இருந்து வெள்ளைக்காரன் தள்ளிய போது ஆரம்பித்த போராட்டம் ஒரு தேசத்தின் விடிவுக்கே வழி வகுத்தது.பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மனிதர்களை திருத்தவோ, எதிர்த்து போராடவோ தனி துணிச்சல் வேண்டும். உங்கள் போராட்ட குணத்துக்கும்,உங்களுக்கு உதவிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நம் நாட்டின் நிலைமையை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது. உங்களை மாதிரி தைரியமான்வர்களை பார்பது அரிது. உங்களுடைய போராட்டம் வெற்றியடைய நான் வேண்டிக்கொள்கிறேன்.
செருப்பாலயே அடிக்கோணும் இத பரதேசி நாயுவுல.....!! போலீசுங்குற பேருல இவுனுங்க பண்ற அராஜகம் நெம்ப ஜாஸ்தியா போச்சு ...!! அந்த டீ 'ய வாங்கி குடுச்துக்கு பதிலா... அந்த மேன்சன்ல வர்ற தண்ணிய குடிக்க வெச்சிருக்கொனும் ... அப்ப தெரியும் இந்த கொரங்கு மண்டையனுங்குளுக்கு.....!!!!!!
திரு ரமேஷ்
உங்கள் கட்டுரையை என்வழி.காம் தளத்திலும் பதிவு செய்துள்ளோம். எம்மாலான உதவியைச் செய்யவும் காத்திருக்கிறோம்.
வினோ
என்வழி.காம்
உங்களை பார்க்கும் போது என் அம்மாவின் விடாமுயற்சியும் ,உங்கள் விடாமுயற்சியும் ஒத்து போகிறது . கோவில் நிலத்தை ஒரு பணம் பலம் படைத்த கும்பல் அபகரிக்க முடிந்த போது , அதை தடுக்க போராடினார் .. இன்னும் போராடி கொண்டு இருக்கிறார் ..
இதற்காக நாங்கள் படும் துன்பம் சொல்லி மாளாது ..
இத்தனைக்கும் என் அப்பா ஒரு government ஊழியர் .
மிரட்டல் , போலீஸ் ....
நீங்கள் படும் துன்பம் போலவே நாங்களும் அனுபவிக்கிறோம் ...
இப்போது களத்தை மட்டுமே இழந்தோம் ..போரை அல்ல ..
போராடுவோம் உங்களை போல ..
இந்த நாட்டில் எங்காவது சிறு நியாயம் ஒன்று இருந்தால் அதை அடையாமல் நாம் விடக் கூடாது ..
நண்பா... நல்லவங்களுக்கு தான் பயப்படனும்,.... தொடர்ந்து போராடுங்க, நாங்க உங்க கூட இருப்போம்.
உங்கள் பதிவு...
http://www.envazhi.com/?p=9779
கடும் முயற்சிக்கு பாராட்டுக்கள். இனியேனும் தடையில்லாது, வெற்றிபெற வாழ்த்துக்கள்.
என் வலைத்தளைத்தில்
வேங்கையின் போராட்டம் என்ற தலைப்பில் ஒரு நிறந்ததர அறிவிப்பு செய்தியில் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் ..மற்ற நண்பர்களையும் இதே மாதிரி இணைப்பு கொடுக்க வேண்டி கொள்கிறேன்
திரு ஸ்ரீரமேஷ் சதாசிவம் அவர்களே
என்னால் தங்களது இந்த முயற்சியில் ஸ்ரீராமருக்கு அணிலைப்போல சிறிதேனும் உதவ ஆசை. தொடர்புகொள்ள முகவரி: anjnkmr@yahoo.com
அஞ்சன்குமார்.
படித்தவர்களுக்கே இத்தனை தொல்லை கொடுக்கும் நமது காவல் துறையை என்னவென்று சொல்ல???
உங்களது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் பாரட்டுகின்றேன்.
உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!
உங்களுடைய உறுதிக்குத் தலை வணங்குகிறேன். யாராவது, இப்படித் துணிச்சலாகப் போராடினால் தான், விமோசனம் கிடைக்கும். தவறைத் திருத்திக் கொள்ள மறுக்கும் போக்கும், தவறுக்குத் துணைபோகும் அரசு இயந்திரங்களுமே கூட நீண்ட நாள் இப்படி மப்பில் கிடக்க முடியாது. இறைவனது அருள் உங்களோடு துணையிருக்க, வேண்டிக்கொள்கிறேன்.
உண்மையானவன் தைரியமானவனாகவும் இருக்க வேண்டும் என்று காந்தி சொன்னதற்கு ஒரு நடமாடும் உதாரணமாக உங்களைக் காண்கிறேன். பாராட்டுவதா தலைவணங்குவதா என்று தெரியவில்லை.
மீடியாக்காரர்களும் ஒழுங்கு கிடையாது. அவர்களுக்கு இது ஓர் இதழுக்கான ஒரு செய்தி.
யாரெல்லாம் சரிகிடையாது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டு, "நான் இங்கே இருக்கிறேன்" என்று எந்த ரூபத்தில் கிருஷ்ணன் வரப் போகிறான் என்று அறிய ஆவலாக இருக்கிறது.
கோவி.கண்ணனுக்கும் நன்றி.
I always like to read good/humor things in the web. But having read this article, I am much upset. I hope an early solution for your problem.
If this is the way, the Police is approaching every case, God alone save this Country.
Any way, I appreciate your confidence and legal approach.
No words to describe your ordeal.
I really see a sincere citizen who wont tolerate such atrocities that happen in India today.
There is definitely a need to create an awareness among the people. We need an Organization to do that.
Right or not Traffic Ramasamy did so many things, but the common man did not support him as they were afraid of their family etc.
There has to be a breaking point, I think we are at that point right now, where people have become so numb to crimes against humanity. And I am really worried, that this will push India off the cliff, denying its right place in the World.
Lets do something...I am ready for any kind of help.
//நினைத்து பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு. உங்க சார்பா நானே இந்த பதிவின் லிங்கை துணை முதல்வர் வெப் சைட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆக்ஷன் நிச்சயம்!//
அபிஅப்பா மற்றும் க்கு,
துணை முதல்வர் வெப்சைட் மூலம் ஏதும் நடவடிக்கை எடுக்கபடிகிறதா என அப்டேட் செய்யும்படி வேண்டுகிறேன்.
//நினைத்து பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு. உங்க சார்பா நானே இந்த பதிவின் லிங்கை துணை முதல்வர் வெப் சைட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆக்ஷன் நிச்சயம்!//
அபிஅப்பா மற்றும் சதாசிவம் அவர்களுக்கு,
துணை முதல்வர் வெப்சைட் மூலம் ஏதும் நடவடிக்கை எடுக்கபடிகிறதா என அப்டேட் செய்யும்படி வேண்டுகிறேன்.
உங்கள் விடாமுயற்சிக்கும் நேர்மைக்கும் ஒரு சபாஷ்! நேர்மை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
REAL HERO நீதான் நண்பா.
உன் மன உறுதியைக் கொண்டாடுகிறேன். நீரொரு சராசரி மனிதனல்ல.உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.ஆபத்தில் அறியலாம் உண்மை நண்பனை என்பார்கள். இதன் மூலம் சமுதாயத்தில் பலரை இனம் காணமுடிகிறது.இன்னும் தொடர்புடையவர்கள் விவேகமாக நடந்து தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டும், கடமையை ஒழுங்காகச் செய்த மன நிறைவையும் அடைவார்களாக.
உனக்கு வெற்றி நிச்சயம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.இறுதியில் தர்மம் வென்றே தீரும்.
வழக்கில் வெற்றிபெற வாழ்த்துகள் !!!
Thozhare um thunivai parattuginren...anaal athey samayam ungalukku ulaga anubavam miga kuraivu enbathu purigirathu.enakku athigamaa endru keetkaathirgal enakkum athu kuraive...Neengal kooruvathu ungal tharappu gnayangale.Ithai unmai enru eduthukondaal Narayanan enn ungalai mattum gaali seyya sonnar?Seri neengal vazhakku pathivu seythathanaala?Neengal ozhungaana neer varum varai vadagai thara matten endru solla villai???.
Athu seri antha mansionil thanguvatharkku ethaavathu purinthu unarvu oppantham pottu ullira? Narayanan ungalai gaali seyya sonnal athiga batcham 3 matham avagasam ketkalaam.athai thavira veru onrum seyya mudiyaathu...Athu seri antha kaaval thurai athigaariyidam unmayil enna koorinirgal? Unmayil neengal kooruvathil pala santhegam ullathu.Narayanan ungalai mirattinaara? Illai athu cinema kathaya?Neengal kaaval thuraiyinaridam ungal uravuk kaararidam pesuvadhu pol pesinaal enna seyvaargal...padithavan endru solgirirgale ungal Mel FIR pathivu seythaal athan vilaivu enn endru theriyuma? ungalin seyal cinema herovukku porunthume thavira nadaimurai vaazhvil athu seri pattu varaathu
அய்யோ நினைத்துப் பார்க்கவே கொடுமையான நிகழ்ச்சிகள். தங்களது விடாப்பிடியான போராட்டம் பாராட்டத்தக்கது. காவல் துறை என்றுமே இன்னும் ஏவல் துறையாகவே இருக்கிறது என்பதற்கு இதைவிடக் கொடுமையான உதாரணம் வேறொன்றுமில்லை.
தண்ணீரில் மலம் கலக்கவில்லை என்று சொன்ன அதிகாரி, முனைவர் பட்டம் பெற்றும் மூளையில்லா காவல்துறைக் களங்கம், இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை ஆண்டவன் சன்னதியில் கிடைக்கிறதோ இல்லையோ, மக்கள் மன்றத்தில் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும். அந்த மேன்சன் ஓனர் நாராயணனை நடுத்தெரு நாரயணன் ஆக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டுமோ அத்தனைக்கும் நான் துணையாக இருப்பேன்.
சபாஷ் ரமேஷ்..!!!
தங்களது முயற்சிக்குத் தலை வணங்குகிறேன்.
பார்க்கலாம் துணை முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று
A real Hero'ism.
உங்கள் விடா முயற்சிக்கும், மன உறுதிக்கும், பொறுமைக்கும் பாராட்டுகள்.
The number of comments for this post gives me confidence and HOPE !
பின்னி படேல் எடுத்துடீங்க.... நீங்க தான் ரியல் ஹீரோ... சில இடங்களில் எனக்கு மோசமான அனுபவம் உண்டு.. உங்க பிரிச்ன்னையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியல..
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..
நம்பிக்கையூட்டும் பதிவு. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.
அபாரம் நண்பரே!
தனி ஒருவனால் எதுவும் சாதிக்க முடியும்!
உங்கள் துணிவுக்கும், நேர்மைக்கும், விடாமுயற்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
Shockingly sad and horror filled incidents. I salute your courage and your faith in Krishna.
Where are we going? Scary..
May god bless you and protect you.
posted this link in Viduthalai Chiruthaigal MLA Ravikumar's Facebook wall.
Hats off to you Ramesh. No words to express my emotions.
I could recollect the works of Traffic ramaswamy.
Ways to promote thsi post and rise awareness ans support for Ramesh.
1. If some one can traslate this in good eglish without losing its essence we can post it in englsih websites.
2. Many of you knwo Thatstamil news website, www.thatstamil.com. Where we can post, so reachablity is high
3. Messaging these blogs in social networking sites, Orkut, face book etc.
I will try my best to propaganda this this
I remember This Thirukural after i read this post..
"Theivathal agathathu yeninum, muyarchi, than mei varutha kooli tharam"
I am proud to be elder brother of Ramesh and Manivannan.
Dear's Don't give up.
i am with you.
If required, we will come and join with you.
Thanks to all the supporters.
Selva Anna, anni, Magan & Magal.
Dubai.UAE
#momentum calls
உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கிறேன்.....
என் பதிவிலேயே பதில் உள்ளது எனினும் தெளிவாக்குகிறேன்...
//Neengal kooruvathu ungal tharappu gnayangale.//
நான் என் தரப்பு நியாயத்தை தானே கூற முடியும்? நாராயணன் தரப்பு நியாயம் ஒன்றே ஒன்று தான், தையும் சொல்லியிருக்கிறேன். "பிடிக்காலன்னா காலி பண்ணு"
குடிநீர் வாரியம் வழங்கிய சான்றிதழை காண்பித்த பின்பும் இது எவ்வகையில் நியாயம்? உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உண்மையை அறிந்து கொள்ள உண்மையாகவே விருப்பம் இருந்தால் எங்கள் மேன்ஷனுக்கு வந்து நீரை கொண்டு போய் பரிசோதித்து பாருங்கள்.
Narayanan enn ungalai mattum gaali seyya sonnar?
காரணம் நான் தான் நீரை குடிநீர் வாரியத்திற்கு சோதிக்கக் கொடுத்தேன். நான் தான் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு புகார் கொடுத்தேன். நான் தான் சுகாதார அதிகாரியிடம் நுகர்வோர் நீதி மன்றம் செல்ல வேண்டியிருக்கும் என் எச்சரித்தேன்.
Seri neengal vazhakku pathivu seythathanaala?
செய்யப் போவதாக சொன்னதால்.
Neengal ozhungaana neer varum varai vadagai thara matten endru solla villai???.
நான் வாடகை தர மாட்டேன் என்று சொல்லவில்லை. நாரயணன் மனைவி தான் வாடகை கொடுக்க சென்ற என்னை, கதவை கூட திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து, "நீ கொடுக்கிற வாடகய நம்பி நாங்க இல்ல. நீ காலி பண்ணிக்க என்று என்னை சாலையிலே நிற்க வைத்து, புறக்கணித்தார்.
Athu seri antha mansionil thanguvatharkku ethaavathu purinthu unarvu oppantham pottu ullira?
ஒரே ஒப்பந்தம் தான். நான் காலி செய்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் நான் சொல்ல வேண்டும். தவறினால் முன் பணத்தில் இருந்து பதினைந்து நாள் வாடகை பிடிக்கப்படும். இதுவும் எழுத்தில் இல்லை.
Narayanan ungalai gaali seyya sonnal athiga batcham 3 matham avagasam ketkalaam.athai thavira veru onrum seyya mudiyaathu...
அதை ஏன் அவர் முறையாக செய்யவில்லை. ஏன் வெளியிலிருந்து முரடர் ஒருவரை அழைத்து வந்தார். நான் காலி மறுத்திருந்தாலும் ஏன் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் நீதி மன்றத்தை அணுகவில்லை?
Athu seri antha kaaval thurai athigaariyidam unmayil enna koorinirgal?
உண்மையில் என்ன கூறினீர்கள் என்று கேட்டால் மட்டும் பொய் சொல்பவர் உண்மை சொல்லிவிடுவாரா? :)
Unmayil neengal kooruvathil pala santhegam ullathu.
நான் இந்த பதிவில் எழுதியிருப்பது அனைத்தும் உண்மை தான். சந்தேகப்படுவது தப்பல்ல. சந்தேகம் உள்ளது என்று கூறிவிட்டு ஆராயாமல் இருப்பது தான் தப்பு. தாங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம். எங்கள் மேன்ஷன் முகவரி பதிவிலேயே உள்ளது. தாங்கள் தாராளமாக வந்து புலன் விசாரணை செய்யலாம். தாங்களும் தாங்கள் antha kaaval thurai athigaari போல வாய் வீரர் அல்ல என் நம்புகிறேன்.
Narayanan ungalai mirattinaara? Illai athu cinema kathaya?
நாராயணன் என்னை மிரட்டியது நாளை சினிமா கதையாக வரலாம். தங்களுக்கு நல்ல தயாரிப்பாளர் யாராவது தெரியுமா?
Neengal kaaval thuraiyinaridam ungal uravuk kaararidam pesuvadhu pol pesinaal enna seyvaargal...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மகான்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து, இப்படியொரு கேள்வியா? நான் காவல் துறையினரிடம் அப்படி பேசியதை நீங்கள் பார்த்தீர்களா?
padithavan endru solgirirgale ungal Mel FIR pathivu seythaal athan vilaivu enn endru theriyuma?
இதே கேள்வியைத் தான் அன்று ஆய்வாளரும் என்னிடம் கேட்டார். நான் அவரிடம், "தாராளமாக நான் அதைத் தான் எதிர்ப்பார்க்கிறேன் என்றேன்.ஏனோ மௌனமாகிவிட்டார்" ஏன் என்று கேட்டு சொல்ல முடியுமா? இதை பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேனே? தாங்கள் அதை படிக்கவில்லையா?
ungalin seyal cinema herovukku porunthume thavira nadaimurai vaazhvil athu seri pattu varaathu
நடைமுறைக்கு மலம் கலந்த நீரில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் குளிப்பதும். புகர் செய்ய செல்பவரை போலீஸ் குற்றவாளியைப் போல நடத்துவதும் தான் சரிப் பட்டு வருமா.?
சம்பவத்தன்று F5 இது குறித்து ஏன் எந்த புகாரும் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்களால் அவ்ர்களிடம் கேட்டு சொல்ல முடியுமா? அல்லது ஒரு புகார் உண்மையானது என தெரிந்தால் மட்டுமே பதிவு செய்யப் பட வேண்டும் என சட்டம் எதுவும் உள்ளதா? அப்படி ஒரு சட்டம் இருப்பினும் எந்த விசாரணையும் செய்யாமலேயே எப்படி அது பொய்யானதென காவல் அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள்?
பின்னூட்டம் இட்ட, இடவிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. இத்தனை நாள் நாலைந்து பேர் நடத்திய போராட்டத்திற்கு, இன்று இத்தனை பேர் ஆதரவளித்திருப்பது மிகுந்த உற்சாகத்தையும், மனிதத்தின் மீது நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
I have just posted this post's URL in out deputy CM's website,
I would encourage all our blogers to do the same
Thanks
உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா. விரைவில் நீதி கிடைக்க ஆண்டவரை பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காக்கிச்சடைக் காரர்கள்... சீ என்ன மனிதர்கள். இதை வாசித்து முடிந்ததும் நான் நினச்சது, அடியப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டாங்கள்.....
முதற்கண் ரமேஷ் சதாசிவத்தின் துணிச்சலுக்கு ஒரு சலாம் அண்ட் சபாஷ்.
சிறுவயது முதலே கேள்வி கேட்கவும், தவறை பொறுத்து கொள்ளாத மனமும் அடுத்த தலைமுறைகாவது வர வேண்டுவோம்.
"துஷ்டரை கண்டால் துவம்சம் பண்ணு" - என கந்த சஸ்டி கவசத்தை மாற்றினால் நல்லது.
உங்கள் மனதைரியத்தை பாராட்டுகிறேன. எத்தனை வழிகளில் ஒரு அநியாயத்தை எதிர்க்க முடியும் என்று நிசமாகவே காட்டி இருக்கிறீர்கள். அத்தனை கதவையும் தட்டுவதற்கு ஒரு பெரிய ஊக்கத்தை நீங்கள் நிச்சயம் கொடுக்கிறீர்கள்.
அப்பப்பா....உங்கள் தைரியம்,விடாமுயற்சி பாராட்டுக்குரியது.
என்ன! மனிதர்கள்...நீரைச் சுத்தமாகக் கேட்பதே குற்றமா?
நமது நாடுகளில் காவல் துறை
எப்போ கடமையைச் சரியாகச் செய்யப்
போகிறது.
வெற்றி அருகிலே,உரிய இலக்குகளைத் தொட்டு விட்டீர்கள்.
ஆனாலும் சற்றுக் கவனமாக இருங்கள்.
நம் நாடுகள் கூலிப்படையால் இயங்குவதை எப்போ நிறுத்தும்.
இதனை ஒரு பிரிண்ட் எடுத்து எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்புங்கள்.
இவ்வளவு நடந்த பிறகும் எப்படிங்க இவ்வளவு பொறுமையாக அத்தனையும் எழுதினீங்க???
உங்கள் பொறுமைக்கு நான் தலை வணங்குகிறேன்.
உங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இது தான் நமது ஜனநாயகத்தின் நிஜ மூஞ்சி !
இதற்கே உரிய வலியுடன் கூடிய இது போன்ற பரவலான முயற்சிகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் ஒரு சிறு பொறியாவது நமது தூங்கும் அல்லது தூங்குவது போல் நடித்துக்கொண்டிருக்கும் சமூகத்துக்கான இன்றைய உடனடி தேவை.
hats of to you Mr Ramesh and your friends!
உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ராம நாமம் சொல்லுபவர்களுக்கு இந்த போராடும் பலம் இயல்பாகவே இருக்கிறது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும், நீங்களும் உதாரணங்கள்.
I have posted this in the Facebook wall of Ramya Kannan, Journalist working at The Hindu.
FYI
If some one is doing mistakes continuously you will be punished at least one day.
SMS cop
Chennai: They have netted many a cyber crook, but this proved to be their toughest chase. A set of cyber cops was recently asked to snoop on their colleague who was allegedly sending indecent messages to a lady officer.
The woman, who works as a computer operator at the suburban Selaiyur police station, complained to police commissioner Lathika Saran about inspector Selvakumar, saying he sent her obscene SMSes from a few desks away.
The commissioner put the cyber sleuths on the job. A case has been registered and Selvakumar has been suspended. Last heard, the SMSing cop has gone on medical leave.
http://www.telegraphindia.com/1070207/asp/nation/story_7361089.asp
Ram
// மிக்க நன்றி நண்பரே. ஏற்கனவே இது பற்றி துணை முதல்வர் வலை தளத்தில் பதிவு செய்துள்ளேன். இந்தப் பதிவை அனுப்பவில்லை. என் சார்பாக நீங்கள் அதை செய்தது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது. மிக்க நன்றி.
..
///
I feel the action could not continue against him since his Brother is Personal Security officer for M.K.Stalin ( Vijayakumar Inspector of police SBCID Security) .
Sorry for the wrong information
Megakumar is Inspector of police SBCID Security,
Vijaya kumar is Constable in Periyamedu
Rama Raja
உங்க இடத்துல நா இருந்து இருந்தால் இவளவு தூரம் போராடி இருப்பேனான்னு தெரியல . அனா நீங்க பண்ணினது பார்த்ததுக்கு அப்புறம் நம்ம உரிமைக்காக நாம கடைசி வரைக்கும் போராடணும்னு முடிவு பண்ணிட்டேன் ...
கவனமாக செயல்படுங்க சார்
உங்கள் விடா முயற்சிக்கு தலை வணங்குகின்றேன்.
#Ram,
Thanks a lot for the information. I knew he was a cheap person, but did not guess that he would be this cheap. Thanks for the link. I am overwhelmed by your response and the responses of all the blogger friends.
Thank you so much. I can't express my gratitude in words.
இது போன்ற நிகழ்ச்சிகல் பல தினமும் நடக்கின்றன இந்தியாவில். நான் பல மாநிலத்தில் பணி செய்திருக்கிறேன். கேரளத்தில் தான் மிக குறைவு. தமிழ் நாட்டிலும், கர்நாடகத்திலும் சிறிது கூடுதல். ஆந்திராவில் மிக அதிகம். அதனால் தான் அங்கு நக்சலைட்டுகள் மிகுதியாகிவிட்டார்கள்.வடமாநிலங்களில் அநியாயம்.அதனால் தான் அங்கும் மாவோயிஸ்டுகளும்,நக்சலைட்டுகளும் அதிகரித்துள்ளனர்.இதுபோன்ற நிகழ்ச்சிகளை சந்திப்பவர்கள்( படிக்கதவர்கள்)தீவிரவாதிகள் ஆவதற்கு வழிவகுக்கும். இதற்கு மக்களும், அரசும் இணைந்து தீர்வுகாணவேண்டும்.
ரமேஷ்
எண்ணித் துணிந்த உம் கருமம் இழுக்கின்றி நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
வாழ்க வீரமுடன்...
அன்புடன்
ஈ ரா
good work :)
ஸ்ரீரமேஷ் அவர்களே
momentumcal அவர்களது கூற்றுப்படியே அவருக்கு உலக அனுபவம் பற்றாது. எனவே அவரது சந்தேகங்களை அந்த அளவிலேயே பார்க்கவும்.
இந்த தொடர் நிகழ்வுகளில், நாராயணன், அவரது மகன், தடியர் ஆகியோரைவிட மிக அதிக அளவிலான குற்றங்களைப் புரிந்திருப்பவர்கள் காவல் துறை ஆய்வாளர் செல்வகுமார், துணை ஆய்வாளர் த. ராதாகிருஷ்ணன், காவலர் வெங்கடாசலம், துணை ஆணையர், குடிநீர் வாரிய அதிகாரி(பெயர் சொல்லாதவர்) ஆகியோரே. இவர்களது செயல்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்.
தும்பளையான், கடிக்கலாம் வாங்க போன்ற அன்பர்கள் கூறியிருப்பதைபோல, இத்தகு நிகழ்வுகளே நக்சலைட் போன்ற இயக்கங்களுக்கு வலு சேர்க்கின்றன.
எனவேதான் ....
The Preamble to the said Universal Declaration states that this Declaration is made because –
a) Disregard and contempt for human rights have resulted in barbarous acts which have outraged the conscience of mankind, and the advent of a world in which human beings shall enjoy freedom of speech and belief and freedom from fear and want has been proclaimed as the highest aspiration of the common people.
b) If a man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law.
தங்களது இந்தப் பதிவைப் பல நோக்கர்கள் துணைமுதல்வரது வலைத்தளத்துக்கு எடுத்துச்சென்றதாகப் பதிந்திருக்கிறார்கள். நானும் செய்தேன். ஆனால், தற்போது வரை அவரது தளத்தில் இது குறித்து எந்தப் பதிவையும் காணவில்லை. அவரது தளத்துக்கு தினமும் சராசரியாக 985 பேர் வருகிறார்கள். பலர் தமது பதிவையும் செய்கிறார்கள். ஆனால் அவரது தளம் தினமும் ஒருமுறைதான் அவரது அலுவலரின் கவனிப்பைப் பெறுவது தெரிகிறது. நேற்று காலை 11.42 மணிக்குப் பிறகு தற்போது காலை 10.19 வரை அது கவனிக்கப்படவேஇல்லை. மேலும் 17ஆம் தேதி வெறும் மூன்று பதிவுகளே ஆகியிருக்கின்றன. இதிலிருந்து தெரிவது யாதெனில், அவருக்கு மனச் சலனத்தை அல்லது ஆட்சிக்குச் சலனத்தை அளிக்கும் பதிவுகள் வெட்டப்படும். இதனால்தான் தங்களது முதல் முயற்சி முதல், அபி அப்பா போன்றோரின் முயற்சிகள் வரை எதுவும் கவனிக்கப் படவே இல்லை.
இதைத்தவிரவும், தாங்கள் ஸ்ரீராமபக்தர், கிருஷ்ணபக்தர் என்பனவெல்லாம் கூடத் தங்கள் கருத்துக்கள் அவர்களது காதுகளைச் சென்றடையாமைக்குக் காரணமாகலாம்.
I wish you good luck with your efforts...I am proud of you that you have enormous patience to fight against these thugs....God Bless you...!
The Mansion owner should not have done this.
Having said that, your focus is more creating publicity, writing blogs, getting 200 comments and not focusing on solution to the problem..
I know because it is your age.
My sincere advise and request is you should change your attitude. In the current world, people want solution providers , They do not want problem magnifiers.
This is very very small problem, In the upcoming days you have to face so many big problems.
So Develop positive attitude, WIN-WIN skills etc.
உங்கள் விடாமுயற்சிக்கும் போராடும் குணத்திற்கும் தக்க பலன் கிடைக்க வாழ்த்துகள்!
குப்பன் யாஹூ மாதிரி பத்து பேரு, வேண்டாம், வேண்டாம், அவரு ஒரு ஆளே போதும். தானும் படுக்க மட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்ற கதை தான்.
***
வாழ்த்துக்கள் ரமேஷ்.
முழுவதும் படித்தேன்...என்ன சொல்வது... என்னுடைய சில நண்பர்கள் கூட மேன்ஷன்களில் தான் வாசம் செய்கிறார்கள். அவர்களின் நிலையை நினைத்து கலக்கமாக இருக்கிறது.
உங்களுடைய நேர்மையான அணுகுமுறையும், நெஞ்சுரமும் மெச்சப்பட வேண்டிய ஒன்று.
பாராட்டுக்கள்.
ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும்
எங்கு அநீதி நடந்தாலும் தட்டி கேட்கவேண்டும். அப்படி கேட்காது போனால் அந்த அநீதியை நீயே செய்தவனாவாய். - சுவாமி விவேகானந்தர்
வாழ்த்துக்கள்!
எங்கு அநீதி நடந்தாலும் தட்டி கேட்கவேண்டும். அப்படி கேட்காது போனால் அந்த அநீதியை நீயே செய்தவனாவாய். - சுவாமி விவேகானந்தர்
வாழ்த்துக்கள்!
நீ கண்டிப்பா ஜெயிப்பே சகா. உன்னோட மன உறுதி கண்டு அசந்துவிட்டேன். நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்.
குழுமத்தின் மூலம் இந்தப் பதிவின் லிங்க் கிடைச்சது. ரமேஷ் சதாசிவம், உங்கள் உறுதிக்கும், மற்றப் பதிவர்களின் உதவிக்கும் தலை வணங்குகிறேன். போராட்டம் வெற்றி பெறும்.
உங்கள் தைரியம் பாராட்டத்தக்கது ...
இப்படி எல்லோரும் போராட ஆரம்பித்தால் தான் , இந்த அரசு இயந்திரங்கள் சீர்படும்...
i read the article abt ur prob in junior vikatan......
nothing to say....
i also have such kind of exp.
இந்த விமர்சனத்தை தவறாக எண்ண வேண்டாம். நான் டிவிட்டரில் உங்களைப் பற்றிச் சொன்னதை இங்கு தருகிறேன்.
He needs to be lauded, no doubt, but fact is even if he comes out winning, it is going to happen to some other person, some other time/place. Look at the other "mansioners" who turned against him :(
Mind you, even I have tried to fight the system few times, but gave up in the middle for want of time, energy and drive ! Point is "Fighting the system individually" is great but broad based awareness & support is needed for a permanent solution !
இதனால், இதை நீங்கள் பாதியில் விட வேண்டும் என்று நிச்சயம் சொல்ல வரவில்லை !
எ.அ.பாலா
நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,
வாழ்த்துகள்..
Please Keep us Posted. Ask for any help. We all will do. Your message will reach potent people around this Net People and surely you will WIN...
//Neengal kooruvathu ungal tharappu gnayangale.//
நான் என் தரப்பு நியாயத்தை தானே கூற முடியும்? நாராயணன் தரப்பு நியாயம் ஒன்றே ஒன்று தான், தையும் சொல்லியிருக்கிறேன். "பிடிக்காலன்னா காலி பண்ணு"
//Correct...I am asking his perspective of the turn of events.I am not taking sides.Consider me as a devils advocate.
குடிநீர் வாரியம் வழங்கிய சான்றிதழை காண்பித்த பின்பும் இது எவ்வகையில் நியாயம்? உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உண்மையை அறிந்து கொள்ள உண்மையாகவே விருப்பம் இருந்தால் எங்கள் மேன்ஷனுக்கு வந்து நீரை கொண்டு போய் பரிசோதித்து பாருங்கள்.
//There is a rule that there should be no borewells laid 20-30 m near spetic tanks as there is a clear possiblity of spetic tank water mixing with the borewell water.I have no doubt about that and I did not raise any questions on that.
Narayanan enn ungalai mattum gaali seyya sonnar?
காரணம் நான் தான் நீரை குடிநீர் வாரியத்திற்கு சோதிக்கக் கொடுத்தேன். நான் தான் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு புகார் கொடுத்தேன். நான் தான் சுகாதார அதிகாரியிடம் நுகர்வோர் நீதி மன்றம் செல்ல வேண்டியிருக்கும் என் எச்சரித்தேன்.
//Why didn't others join you.When you can unite so many unknown bloggers for your case why not the tennants?
Seri neengal vazhakku pathivu seythathanaala?
செய்யப் போவதாக சொன்னதால்.
//ok
Neengal ozhungaana neer varum varai vadagai thara matten endru solla villai???.
நான் வாடகை தர மாட்டேன் என்று சொல்லவில்லை. நாரயணன் மனைவி தான் வாடகை கொடுக்க சென்ற என்னை, கதவை கூட திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து, "நீ கொடுக்கிற வாடகய நம்பி நாங்க இல்ல. நீ காலி பண்ணிக்க என்று என்னை சாலையிலே நிற்க வைத்து, புறக்கணித்தார்.
//Ayya naan sonnathu pol thaan vazhakaringnar courtil vaathaduvaar.Neengal kaval nilayathil thaan vadagayai koduthu irukkirir.Ithuve pothum vakkilukku vazhakkai jodippatharkku...Neengal vadagai kodukkathathirkku muganthiram irukkirathu.
Mr. Ramesh I normally don’t spend time on reading posts made on blogs which are too long but with this particular post I did read it till the end and I think I should owe it to your narration style, I happened to read your profile and I am sure that you would make a very good director.
You seem to be spiritually inclined here is something that might be of some interest to you, you would find a link to a video at the bottom of this post, I made this video with all the pictures that I managed to get on the web, it’s a wonderful speech by Mr. Rajnikanth on Bhakthi.
Back to the interesting experience that you been through in these last few Months, I must say that what you have been through is more than interesting, I can say for sure that the most corrupt government department in Tamil Nadu is the Tamil Nadu police department and Chennai Traffic police department and there are too many uniformed scoundrels to prove me right, every guy in Chennai who owns a two wheeler will have a story to tell about the Traffic PCs and their thirst for bribe. I had to pay a fine of Rupees 300 to the policemen driving the patrol car belonging to the police station adjacent to the Marina Beach Light house, just because I was with my friends hanging out in marina beach on Saturday night and one of my friend wasn’t carrying his bike insurance papers though he had the other documents.
Well on that day we were just there to enjoy the cool night sea breeze and nothing more but the police men treated us like miscreants, they made us feel bad and made us realize the true nature of Indian democracy, its what they perceive as that counts but not what you really are, now to me it seems like democracy is an illusion which we are made to believe is real, but incidents like these gets you in touch with the reality and makes you realize that something is wrong with the system. It’s a different story that I am quite skeptical about the reasons behind the concept called insurance and making the vehicular insurance mandatory through an government ordinance is something that I don’t agree with, I am not in favor of the policies such as this one which allows the state to raise money, I firmly believe that taxation should be the only ethical way the state should be allowed to raise money.
On that night one of the policemen said that we could leave by paying a fine of Rupees 300 for which we weren’t given any receipt, I have noticed one thing with all these corrupt policemen the moment they take the money from you they become your best well wishers, on another incident just like this one a Traffic police man advised me to carry my helmet the next day because they had planned to conduct a massive traffic rules violation checking the next day, he even told me the names of the roads in which they will be busy.
one particular name comes to my Mind its Ganapathy swamy he is a traffic sergeant belonging to the ice house police station, he is one of the most corrupt Traffic police personnel you would find in Chennai, one day I really enjoyed nagging him after he asked for rupees 1500 for I wasn’t carrying my driving license on that day, I did tell him that I would ask someone to bring my license but he tried to frame another violation of over speeding on me, and that was it, I gave him rupees 1500 and he gave me a receipt for it which I knew was a fake one, it’s a known fact that these traffic PCs carry fake receipt books printed by them, so after 5 mins when he was about to leave I asked him for the receipt, his entire attitude changed after that, he understood what was going in my mind, he called an auto driver and made him stand as a witness and gave back my 1500 saying that he had never seen a DL case like that of mine“ Rules are not the solution to any problem, more rules lead to corruption”.
http://www.youtube.com/watch?v=1MkNGRp3NmM&feature=channel_page
Athu seri antha mansionil thanguvatharkku ethaavathu purinthu unarvu oppantham pottu ullira?
ஒரே ஒப்பந்தம் தான். நான் காலி செய்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் நான் சொல்ல வேண்டும். தவறினால் முன் பணத்தில் இருந்து பதினைந்து நாள் வாடகை பிடிக்கப்படும். இதுவும் எழுத்தில் இல்லை.
//Ithu onrey pothum ungalai veetai vittu gali seyvatharkku...neengal aakiramippu seythu ullirgal endru Narayanan ungal mithu anru avar kaaval nilayathil pugar kodukkalaam...
Narayanan ungalai gaali seyya sonnal athiga batcham 3 matham avagasam ketkalaam.athai thavira veru onrum seyya mudiyaathu...
அதை ஏன் அவர் முறையாக செய்யவில்லை. ஏன் வெளியிலிருந்து முரடர் ஒருவரை அழைத்து வந்தார். நான் காலி மறுத்திருந்தாலும் ஏன் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் நீதி மன்றத்தை அணுகவில்லை?
//sattam avarukku saathagamaaga irunthathu enru avarukku theriyavillai...Neengal aakiramippu seythu ullirgal aaga ungalai veetai vittu veliye gaali seyya than nanbarai azhaithu sonnathaaga avar kooralam...Case is weak because there is no agreement.Avar kaval thurayinaridam nadakkum vithathil nadanthu ungalai paniya veikka poarthaar...Appothum avar vazhakku kodukkathatharkku kaaranam thannidam oppantham illathathu thanaukku ethaavathu prachchanai varum endra bayathil thaan...
Athu seri antha kaaval thurai athigaariyidam unmayil enna koorinirgal?
உண்மையில் என்ன கூறினீர்கள் என்று கேட்டால் மட்டும் பொய் சொல்பவர் உண்மை சொல்லிவிடுவாரா? :)
//There must be a provocation for such an adverse reaction.Do you expect someone to slap just because they don't like him/her?
Unmayil neengal kooruvathil pala santhegam ullathu.
நான் இந்த பதிவில் எழுதியிருப்பது அனைத்தும் உண்மை தான். சந்தேகப்படுவது தப்பல்ல. சந்தேகம் உள்ளது என்று கூறிவிட்டு ஆராயாமல் இருப்பது தான் தப்பு. தாங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம். எங்கள் மேன்ஷன் முகவரி பதிவிலேயே உள்ளது. தாங்கள் தாராளமாக வந்து புலன் விசாரணை செய்யலாம். தாங்களும் தாங்கள் antha kaaval thurai athigaari போல வாய் வீரர் அல்ல என் நம்புகிறேன்.
//Naan vaai veerane..I repeat I always view things from a different angle.I am a devils advocate.
Narayanan ungalai mirattinaara? Illai athu cinema kathaya?
நாராயணன் என்னை மிரட்டியது நாளை சினிமா கதையாக வரலாம். தங்களுக்கு நல்ல தயாரிப்பாளர் யாராவது தெரியுமா?
//Copyright ilavasamaaga thanthaal nane edukkiren
Neengal kaaval thuraiyinaridam ungal uravuk kaararidam pesuvadhu pol pesinaal enna seyvaargal...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மகான்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து, இப்படியொரு கேள்வியா? நான் காவல் துறையினரிடம் அப்படி பேசியதை நீங்கள் பார்த்தீர்களா?
//Ayya kaaval thurai is a static thing.Athu iral,kudal,iruthayam ellam kettu pala varudangal aagirathu...naam thaam konjam paninthu poga vendum.thevai illamal vimbu(avargal parvayil)seythaal avargal appadi thaan nadanthu kolvar.Avargal kurravaaligaludan pazhagi pazhagi appadi aagi vittanar..athu Selvakumaraaga irunthaalum seri illai Balram Naidu vaaga irunthaalum seri...
padithavan endru solgirirgale ungal Mel FIR pathivu seythaal athan vilaivu enn endru theriyuma?
இதே கேள்வியைத் தான் அன்று ஆய்வாளரும் என்னிடம் கேட்டார். நான் அவரிடம், "தாராளமாக நான் அதைத் தான் எதிர்ப்பார்க்கிறேன் என்றேன்.ஏனோ மௌனமாகிவிட்டார்" ஏன் என்று கேட்டு சொல்ல முடியுமா? இதை பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேனே? தாங்கள் அதை படிக்கவில்லையா?
//Paditheen.I think the houseowner specifically wanted not to make this case go to court because of the desalinated water.But still I would say if an FIR is filed against you become ineligible for almost all white collar jobs and your degree certificates will better serve as shoe cleaner or hand cleaner after hot Samosa.
ungalin seyal cinema herovukku porunthume thavira nadaimurai vaazhvil athu seri pattu varaathu
நடைமுறைக்கு மலம் கலந்த நீரில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் குளிப்பதும். புகர் செய்ய செல்பவரை போலீஸ் குற்றவாளியைப் போல நடத்துவதும் தான் சரிப் பட்டு வருமா.?
//Ithu thaan en santhegam vara muthal kaaranam.>Veru yaarum en pugar seyya vara villai? Ivvalavu azhagaga pathivu pottu 100 pathivargalai thiratta mudintha ungalaal enn ungal mansionil ullavargalai thiratta mudiyavillai?
சம்பவத்தன்று F5 இது குறித்து ஏன் எந்த புகாரும் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்களால் அவ்ர்களிடம் கேட்டு சொல்ல முடியுமா? அல்லது ஒரு புகார் உண்மையானது என தெரிந்தால் மட்டுமே பதிவு செய்யப் பட வேண்டும் என சட்டம் எதுவும் உள்ளதா? அப்படி ஒரு சட்டம் இருப்பினும் எந்த விசாரணையும் செய்யாமலேயே எப்படி அது பொய்யானதென காவல் அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள்?
//Kaval thurai yaarudaya eval thurai endru ungalukku theriyaamal ponathu thaan ella prachanaikkum kaaranam...Ayya ungal edathil naan irunthaal I would have dealt this the way narayanan dealt this case.I would have said I would get 1 lakh from this guy and I will give 25% share and take this case...Ippadi solli case koduthu irunthaal eduthu kolla yosithiruppargal..Enn ayya 8 latcham koduthu pathavi vangupavar enna ayya seyyvaar?oru tea koda vanga mudiyatha ungalidam sevi sayppara allathu paper,pena muthal,tea,biscuit,biriyani pottalam varai vaangi tharuvabavaurkku sevi sayppaara? oru votukke vilai ippothu Rs.3000 .
Naan onrey onru koori kolla virumbugiren..I am not taking sides.I am just trying to see things from a different perspective and nothing else...I hope you understand
ஜூ.வி.யில் பார்த்த போதே அதிர்ந்தேன். நீங்கள் இதை பகிரங்கமாக வெளியிட்டது நல்ல விடயம்.
Let us pray that justice and truth prevails at the end no matter the slight hiccups.
உங்க மன உறுதிக்கும் விடா முயற்சிக்கும் தலை வணங்குகிறேன். முயற்சி வெற்றியை கொடுக்கட்டும்.
எங்களையும் இத அறிய வச்ச நண்பர் ஜமாலுக்கு நன்றிகள்.
கேவலம் பணம் என்ற ஒரு காகிதத்திற்க்காக எவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள்... இன்னும் எத்தனையோ விடுதி வாசிகளும்,வாடகைக்கு தங்குபவர்களின் துயர் சொல்ல முடியாது. வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக இங்கெ இருப்பவர்களை அதிகாரம் செய்யும் உடைமைதரிகளின் செயல்கள் அருவருக்கத் தக்கவை.
கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் தோழரெ ஒவ்வொருவருக்கும் இது பாடமாக அமையும்.உங்களின் மன தைரியம் எல்லோருக்கும் வர ஆரம்பிக்கும் எந்த சூழ்நிலையிலும் பின் வாங்கி விடாதீர்கள் வாழ்த்துக்கள்.
HI
Your effort was simply terrific. All the best.
hi momentum calls,
i read your comment and rightly you have recommended to deal in the most practical way possible. i am not saying thats wrong. as somebody said if you dont bend you will break.
but in this particular case this man has seen the worst and was treated in the most shabbiest manner possible.one option is to adjust himself and go with the wind. second option is to fight against the system. both the options are correct. i think he has taken the most courageous option instead of the most practical option. i had faced similar situation in hyderabad and in chennai. i didnt put the same effort that ramesh has mustered but started doing something to correct it but left it in the middle due to my impatience and frustration.
now i live in a different country where things move quickly and people have discipline, respect for other humans and are good natured.
having seen things here i dont think i can ever come back to india and settle down there due to the so called democracy / stupid procedures prevalent there.
all said and done i salute ramesh for his courage.
Khalil avargale avarudaya thayiriyathai parattalaam.Athu veru anaal avar Abimanyu pol chakkara viyugathil maatti kondu vittar enbathai oppu kolgirira?
Kadantha vaaram rationil Sarkkarai vaanga en thaayar senrirunthaar appothu ungal ration card sellathu endru antha athigaari solli vittaar.Itthanaikkum ithai vaithu licence muthal passport varai anaithu avanangalukkum ithaye atthatchiyaaga samarpithullom.Eppadi ithu sellathu endru avanidam sandai podalaam.Avanai parri melidathil vathi vaikkalaam endru mirattalaam.Anaal nadaimuraiyil ethu saathiyam?avarukku ice veithu enna seyya vendum en ippadi aanathu enru kettal avar solluvaar...Ithai seyyamal velaikku sellum oru penmani nee eppadi ippadi sollalam endru avanidam sandai pottar..Avar porumayaaga enna seyvayo seythukko,intha CM cell number call panni sollu endru koduthaar antha penmaniyidam...
Intha nilayil neengal kaaval thurai pogiren,consumer courtirkku pogireen,civil supples corporationukku pogiren endru sonnal avan izhuthadippane thavira athanaal entha payanum illai.Antha athigarikku vetta vendiyathai vettinaal thaan namakku kaariyam aagum..Koundamani solvathu pol cover+amount is government.Ithai maarrave mudiyaatha enru ketkirirgala..Kandippaaga mudiyum...viravil varugirathu UID.This will change everything in the future...Lets wait till then
momentumcalls அவர்களே
//Ithu onrey pothum ungalai veetai vittu gali seyvatharkku...neengal aakiramippu seythu ullirgal endru Narayanan ungal mithu anru avar kaaval nilayathil pugar kodukkalaam...
//sattam avarukku saathagamaaga irunthathu enru avarukku theriyavillai...Neengal aakiramippu seythu ullirgal aaga ungalai veetai vittu veliye gaali seyya than nanbarai azhaithu sonnathaaga avar kooralam...Case is weak because there is no agreement.Avar kaval thurayinaridam nadakkum vithathil nadanthu ungalai paniya veikka poarthaar...Appothum avar vazhakku kodukkathatharkku kaaranam thannidam oppantham illathathu thanaukku ethaavathu prachchanai varum endra bayathil thaan...
இது தவறான தகவல். காலி செய்யச் சொல்ல இட உரிமையாளர் முறைப்படி நோட்டீஸ் தர வேண்டும். ஒப்பந்தம் இல்லை என்பதால் நினைத்தபோது காலி செய்ய முடியாது. தவறான தகவல் பரவக்கூடாது என்பதால் இதைப்பதிவு செய்கிறேன். ஸ்ரீரமேஷ் தரப்பில் சட்டப்படியும், தர்ம நியாயப்படியும், (in law, equity and justice) வலிமை உள்ளது. அதனால்தான் நாராயணன் தவறான வழிகளைக் கையாண்டிருக்கிறார்.
என்னைப் போன்றோர் மேன்ஷனைக் காலி செய்துகொண்டு சென்றிருப்போம். உங்களின் மன தைரியம் என்னை மெய் சிலிர்க்கச் செய்தது. என்ன நடக்கிறது என்று மேலும் பதிக்கவும். உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முடியுமென்றால் அதற்காக காத்திருப்பேன்.
To Momentumcalls எது உகந்த வழி என்பதை குறித்து இங்கு கலந்துரையாடல் நடத்த் இந்த பதிவை ரமேஷ் அவர்கள் பதிவு செய்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை, அதனால் தாங்கள் தங்களின் அபிப்பிரயாங்களை தங்களிடமே வைத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.....
இணைத்துள்ள ஒலிப்பதிவுகள் - சராசரி காவலர்களின் குரலையும் அதிகாரத்தையும் பதிவு செய்துள்ளன.
தயங்காமல், உறுதியோடு தொடருங்கள்.
பிரச்சினை வந்தாலே 'காலி பண்ணு' 'காலி பண்ணு' என்று பினாத்தும் இந்த மகான்களுக்கு என்றைக்கு வாடிக்கையாளருக்கு மதிப்பு கொடுக்கும் புத்தி வரப்போகிறதோ தெரியவில்லை.
நீ இல்லன்னா எவனாவது இளிச்சவாயன் வருவான் என்ற எண்ணம்தான் எல்லாத்துக்கும் காரணம். அதுவுமில்லாமல் - எல்லாத்தையும் சகித்துக் கொண்டிருக்க நம் பொதுஜனம் சில பொன்மொழிகளை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
'அனுசரிச்சிப்போ-விட்டுக்கொடு-பொறுத்துப்போ' என்று அறிவுரைகள் வேறு.
இப்படிச் சொல்லிச் சொல்லியே பல தலைமுறை மரத்துப் போய் கிடக்கிறது இங்கே.
இதில் கொடுமை என்னவென்றால் - இது நம் சமூகத்தில் வேரூன்றிப் போய் 'நஞ்சு' என்பதே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.
அரசாங்க அளவில் தொடங்கி சாதாரண பொட்டிக் கடை அளவில் இந்த 'என்ன நடந்தாலும் சகிச்சிக்கிடறது' ங்கற எண்ணம் நம்மை உணர்வற்ற ஜன்மங்களாக்குகிறது.
இதையெல்லாம் தாண்டி இந்த முயற்சிகள் செய்யும் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தலைவணங்குகிறேன்.
நண்பரே, வெறும் வீண்பேச்சுடன் இருக்காமல் போராடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
சுட்டி கொடுத்த நண்பன் ரிஷானுக்கு நன்றி !!!!
அன்புச் சகோதரரே,
சுயநலத்தோடு மேன்சனில் அறையை காலி செய்யாமல் பொதுநல நோக்கோடு போராடுகின்ற உங்களின் போராட்டும் வெல்லட்டும்.
Support your cause and salute your courage.
Dear Ramesh,
I will pray to God to give you physical and mental strength and means to fight your case. All my blessings and good wishes to you. I will ensure to let know my friend s and relatives about your fight for justice. bow to you for your courage.
Gopalan
Dear Ramesh,
I am from Singapore. My native is Choolaimedu . I know the attrocities of Mansion owners in choolaimedu as well as Chennai. I appreciate you in this reagrd. Apart from we need to do something to make awareness. We are all living our life like "Evano Oruvan" hero madhavan. Like this i faced some issues when i was in chennai. Even from singapore i sent complaint letters to Chennai corporation officials with photo evidence. No Action so dar. So we need to travel more for justice.
At the same time i succedded in some issues when i took action against BSNL and SriRam Chit Funds.
So All the Best. Fight for the Rights. Thanks.
Good work mate! Appreciate your efforts hey, you may get 20 ppl discouraging you for a practical solution. But there is a need for a man with balls and not to drink shit water living in a shit hole. Hope you bring that mother fucking mansion owner to the fore and everyone gets to drink good water.
Cheers
உங்கள் முயற்சி கண்டிப்பாக நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இதுவரை பலர் பின்னூட்டத்தில் திரும்ப நானும் சொல்வதில் அர்த்தமில்லை...என்னுடைய பார்வையில் நம் நகர கட்டமைப்பை சீர்செய்ய வேண்டிய நிலையில் ஒவ்வொரு மாநிலமும் இருப்பதை தான் இம்மாதிரியான நிகழ்வுகள் காட்டுகிறது.
பல அரசாங்க வேலைகளை தனியாரிடம் மாற்றுவது மாதிரி போலீஸ் துறையும் மாற்றினால் நல்லது தான் என்று பல சினிமாக்களில் அவர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டும் போது தோனும் அது(உங்களுக்கு நேர்ந்த இச்சம்பவம் மூலம்) இப்போது சரி என்று தோன்றுகிறது.என்னதான் பல நல்ல அலுவலகர்கள் இருந்தாலும் ஒரு காவல் நிலையத்தில் புகார் செய்யனும் என்றால் தைரியமாக நுழைய முடியும் என்ற நிலை வரவே வராதோ என்று தோனுகிறது.
உங்கள் விடா முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
இப்போது உள்ள அரசாங்கம் இந்நிகழ்வை உண்மையான உள்ளத்துடன் சீர்தூக்கி பார்த்து திருத்தாவிட்டால் நம்மக்களை நாமே படுகுழியில் தள்ளிய குற்றத்துக்கு ஆளாகவேண்டி வரும்.
பெரிய பதிவு என்றாலும் படிக்கும் போது பத பதைக்க வைத்தது.