Sunday, December 22, 2013

தலைமுறைகள்


இன்று தலைமுறைகள் திரைப்படம் பார்த்தேன். பார்க்க வேண்டும் என முடிவு செய்து போகவில்லை. வெளியே செல்லலாம் என்று தான் கிளம்பினேன். நடந்து செல்ல பிடிக்கும் என்பதால் நடந்தபடி எஸ்கேப் அவென்யூ சென்றடைந்தேன். அங்கே எல்லாக் காட்சிகளும் அரங்கம் நிறைந்திருந்ததால் சத்யம் சென்று ஐ.டியில் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்து வெளியே வந்ததும் அறைக்கு திரும்பும் திட்டத்தில் தான் இருந்தேன். சும்மா...டிக்கெட் நிலவரம் தெரிந்து கொள்ள டிக்கெட் கௌன்டர் அருகில் செல்ல...தலைமுறைகள் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தன. மணியை பார்த்தேன். 4.18. காட்சி நேரம் 4.20. ஆஹா... என மகிழ்ந்து டிக்கெட் வாங்கினேன்.  ஏ வரிசையிலேயே கிடைத்தது. நான் என் சீட்டில் சென்று அமர்ந்த முப்பது வினாடிகளில்.... என் கண்களுக்கும்...காதுகளுக்கும்....என் இதயத்திற்கும்....என் ஆன்மாவிற்குமான.... ஒரு அற்புத விருந்து.... திரையில் ஒளிர துவங்கியது......இறைவன் என் ஒவ்வொரு நாளையும் திட்டமிடுகிறார் என்பதற்கான சான்றாக இந்நிகழ்வு இருந்தது.....

படம் பார்த்து முடித்தவுடன் இத்திரைப்படத்தை பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்களுக்குப் பின் முடிவு செய்தேன். அதே சமயம் இத்திரைப்படத்தை பற்றி அதிகமாக எழுதி அதன் அனுபவ அழகை கெடுத்துவிடக் கூடாதென்றும் நினைத்துக் கொண்டேன். ஆகையால்....

பாலுமகேந்திரா பதிவு செய்திருக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகளுக்காக ஒருமுறை...

இசைஞானி இளையராஜாவின் தேனனைய இசைக்காக ஒருமுறை....

படமெங்கும் கொட்டிக் கிடக்கும் கள்ளம் கபடமற்ற அன்பிற்காக ஒருமுறை....

அந்தச் சிறுவனுக்காக ஒருமுறை.....

இப்படி ஒரு முயற்சிக்கு தோள் கொடுத்த இயக்குநர் சசிகுமார் அவர்களுக்காக ஒரு முறை என.....

குறைந்தது ஐந்து முறையாவது பார்க்க வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருப்பதை மட்டும் கூறி இவ்விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்.

பி.கு: இத்திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என ஸ்ரீராமரை பிரார்த்திக்கிறேன்! ஸ்ரீராமஜெயம்!

Wednesday, April 3, 2013

போராடும் மாணவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சிந்தனை.



நாளை சன் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ற மாணவர் முடிவை முகநூலில் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துக்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவை இங்கே...


சன் ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர்களை சேர்த்திருக்கக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதற்காக சன் டிவி பார்ப்பதில்லை என்ற முடிவெடுத்தால் அவர்கள் டிஆர்பி அடி வாங்கும். அதை விட்டு சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிடுவதால் என்ன ஆகப் போகிறது. எவ்வளவு நேரம் இந்த முற்றுகை? முற்றுகையிட்ட பிறகு என்ன செய்ய போகிறீர்கள். முற்றுகைக்கு பிறகும் இலங்கை வீரர்களை நீக்க முடியாது என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?சன் டி.வி அலுவலகத்தை முற்றுகையிடுவதால் ஈழ மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட போகிறது?

சூரிய ஒளி எங்கும் சிதறி கிடப்பது போல உங்கள் போராட்டம் தமிழகம் எங்கும் சிதறி கிடக்கிறது. சூரிய ஒளியை ஒரு லென்ஸ் வழியாக குவிப்பதை போல, போராடும் மாணவர்கள் அனைவரும் சென்னையில் குவிந்தால் உங்கள் போராட்டம் ஆற்றல் பெரும். அப்படி குவியும் மாணவர்கள் டெல்லி நோக்கி நகர்ந்தால் உங்கள் போராட்டம் தீப் பிடிக்கும். 
சன்டிவி என்கிற தனியார் நிறுவனத்தை முற்றுகையிடுவதை விட தமிழகத்தில் போராடும் அனைத்து மாணவர்களும் சென்னையில் ஒன்று கூடி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். முற்றுகையிட்டு டெல்லியை நோக்கி போகும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு கேளுங்கள். இந்த ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்று வை.கோ அவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். 
அந்த ஊர்வலத்தில் பங்கு பெற பொது மக்களுக்கும் திரைத்துறையினருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுங்கள். திரைத்துறையினர் வந்தால் ரசிகர்களும் வருவார்கள். இப்படியாக தமிழ் சமூகத்தை ஒன்று திரட்டி நீங்கள் போராடினால் உங்கள் போராட்டம் இந்தியா முழுவது கவனிக்கப்படும். 
ஒரு போராட்டத்திறுகு எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரவு பெருகுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்போராட்டத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் ஈழத்தின் கொடுமைகள் குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உதாரணத்திற்கு நீங்கள் ரஜினிகாந்திடம் அவர் அமிதாப்பிடம் பேசி அமிதாப் அவர் ரசிகர்களிடம் பேசினால் உங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு ஆதரவு பெருகும் என்று சிந்தித்து பாருங்கள். 
ஒரு போராட்டம் என்பது சதுரங்கம் போன்றது. தப்பு தப்பாக காய் நகர்த்தினால் ஜெயிக்க முடியாது. சன் குழுமம் ஒரு வியாபார குழுமம் அவர்களுக்கு நுகர்வோராக இருப்பதில்லை என்று முடிவு செய்தால் அவர்கள் பலத்த நஷ்டம் அடைவார்கள். அதை விட்டு நீங்கள் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு உங்களில் சிலர் சிறை செல்வதால் என்ன லாபம்? நீங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உடலை பலவீனப்படுத்துவதால் என்ன லாபம்? 

Sunday, March 31, 2013

சரியான திசையில் பயணிப்போம்


மாணவர்களின் இந்த போராட்டம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் போராடுகிறார்கள். வெறும் கோபத்தை வைத்து போராடுகிறார்கள். கோபம் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க உதவுமே ஒழிய ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவாது. அன்பும் அறிவும் தான் ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவும்.
முதலில் தனி ஈழம் என்பதே தமிழர்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வாகாது. ஏனென்றால் தனி ஈழம் வெற்றிகரமாக உருவானாலும் ஒரு தீவு அந்த தீவுக்குள் இரண்டு நாடுகள் என்ற நிலை உருவாகும். ஈழ இலங்கை எல்லைப் பகுதியில் இரு ராணுவங்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கும். ஈழத்துக்குள் இலங்கையின் ஊடுருவல் என்ற பெரும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது தமிழக மீனவர்களை கொல்வது போல ஈழ மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து கொல்லும். சண்டை என்பது தீராததாகத்தான் இருக்கும். சிங்கள அரசு என்ற ஒன்று தனித்து இயங்கும் வரை சிங்கள ராணுவம் என்று ஒன்று தனித்து இருக்கும் வரை அவர்கள் தமிழர்களை அழிக்கும் போக்கை நிறுத்தப் போவதில்லை. ஆனால் தமிழர்கள் இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தை உரிமையை நிலைநாட்டினால் தனி சிங்கள அரசு என்று ஒன்று இல்லாமல் போகும். அதனால் தமிழர்களின் கனவு இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் நிலைநாட்டுவதாகத் தான் இருக்க வேண்டுமே ஒழிய ஈழம் என்ற எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது.
இந்த போராட்டத்தின் மிகப் பெரிய தவறாக நான் பார்ர்கும் இன்னொரு விஷயம். தனி ஈழமா அல்லது தனி தமிழ்நாடா என்கிற கேள்வி.
தனி தமிழ் நாடு கேட்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் செயலன்றி வேறில்லை.
தனி தமிழ் நாடு கேட்பதின் முதல் சிக்கல், இந்திய அரசு அதற்கு எளிதில் ஒப்புகொள்ளாது. போராட்டம் வலுப் பெறும் பட்சத்தில் அவரகள் ராணுவத்தை கொண்டு அதை அடக்கும் அளவிற்கு செல்வார்கள். ராணுவம் ஒரு இடத்துக்குள் வந்தால் அவர்கள் என்னென்ன அநியாங்கள் செய்வார்களோ அனைத்தையும் செய்வார்கள். அவ்வளவு கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டு போராடினாலும் அந்த போராட்டம் பல பத்தாண்டுகளுக்கும் நீடிக்கும்.
இப்படியெல்லாம் போராடி தனி தமிழ் நாட்டை வென்றாலும் அதனால் நாம் அடையப் போகும் பலன் என்ன.
1. இப்பொழுது சகஜமாக சென்று கொண்டிருக்கும் கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கூட நாம் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. இந்தியாவிடம் சண்டை போட்டு தனித்து வந்த பிறகு வேலை தேடி அந்த எல்லைகளுக்குள் செல்லாமல் தமிழர்களால் இருக்க முடியுமா? அவர்களிடம் சண்டை போட்டு பிரிந்த வந்த பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்களிடம் வேலை தேடி, தொழில் செய்ய நாம் போவது. அல்லது தனி தமிழ்நாடு கேட்பவர்கள் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிணற்று தவளைகளாக இருந்து விடலாம் என்று சொல்ல வருகிறார்களா?
இப்பொழுது தனி தமிழ்நாடு கேட்க வேண்டிய அவசியம் என்ன. ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஆட்சியில் இருப்பவர்களை மாற்றலாமே? ஏன் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்ள வேண்டும் அரசாங்கம் வெறும் வாகனம் தானே. ஆட்சி செய்பவர் அல்லவா அதை சரியான திசையிலோ தப்பான திசையிலோ கொண்டு செல்கிறார்?

Friday, March 29, 2013

உலகத்தின் கவனம் ஈர்ப்போம்!


ஈழம் தொடர்பான இந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமே உண்டான போராட்டமாக வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெங்கும் உள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தமிழ் நாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதால் நாமே இது பற்றி பேசி கொண்டிருப்பதால் நம் நியாயம் யார் காதையும் எட்டாமல் இருக்கிறது.

உலகமெங்கும் இருக்கும் மக்கள் இந்த போராட்டத்தை பற்றி பேச வைக்க வேண்டும். அதற்கு எனக்கு தோன்றும் யோசனை இந்த போராட்டத்தை ஒரு போராட்டமாக வைத்து கொண்டிருக்காமல் ஒரு கின்னஸ் சாதனையாக மாற்ற வேண்டும். நம் போராட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக மாறினால் உலக ஊடகங்கள் அனைத்தும் நம் பக்கம் கவனம் திருப்பும். அப்பொழுது நமக்கு நியாயம் கிடைப்பது மிக எளிதாக இருக்கும்.

நம் போராட்டத்தை ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றுவதற்கு எனக்கு தோன்றிய ஒரு வழி. தமிழகத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் டெல்லியை நோக்கி நடக்க துவங்குவது. 50 லட்சத்திலிருந்து 2 கோடி தமிழர்கள் டெல்லியில் அமைதியாக குவிய வேண்டும். கோஷம் போட வேண்டாம். உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவோம். இல்லையென்றால். பட்டினி கிடப்போம். ஆனால் உலக ஊடகங்கள் அனைத்தயும் நம் பக்கம் கவனம் ஈர்ப்போம். நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் வரை டெல்லியிலேயே இருப்போம். எந்த வன்முறையும் வேண்டும் எந்த சத்தமும் வேண்டாம். அமைதியாக ஆனால் அழுத்தமாக நாம் ஒரு உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அப்பொழுது தான் நம் பிரச்சனையைப் பற்றி உலகெங்கும் விவாதம் நடக்கும்.  உலகமெங்கும் விவாதம் நடந்தால் நம் நியாயங்கள் எல்லோருக்கும் புரிய துவங்கும்.

இதை எப்படி சாத்தியப்படுத்துவது?????????

Wednesday, February 13, 2013

டேவிட் என்றொரு கொடுமை



டேவிட் திரைப்படத்திற்கு 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது நான் சுயநினைவோடும் சுயசிந்தனையோடும் செய்த தவறு தான். டேவிட் திரைப்படத்தை தயரித்தவர்கள் படத்திற்கு விளம்பரங்கள் செய்திருந்தார்கள் தான். ஆனால் அவர்கள் என்னை முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு முதல் வாரத்திலேயே படத்தை தியேட்டரில் பார்க்கச் சொன்னார்களா? இல்லையே..... அவர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். அவ்வளவு தான். அதை எனக்கான அழைப்பாக நான் கருதிய தவறுக்காக என்னை அத்திரைப்படத்தின் இயகுநர் பிஜோய் நம்பியார் எப்படியெல்லாம் துன்புறுத்தினார் தெரியுமா நண்பர்களே?????

முதலில் ஒரு மணப்பெண் திருமணத்தன்று ஓடிப்போய்விட்டால் அந்த மாப்பிள்ளை குடிப்பழக்கத்திற்கு ஆளாவான் தானே என்றார். நான் ஆம் என்றேன். உடனே அவர் அந்த சோகத்தில் அந்த மாப்பிள்ளை (விக்ரம்) எப்படி தண்ணியடிக்கிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். உடனே அவர், ஒரு பாதிரியார் முகத்தில் இந்துத்வா அமைப்பினர் கறியை பூசினால் அந்த பாதிரியார் அழுவார் தானே என்றார். ஆமாம் என்றேன். அந்த பாதிரியார் (நாசர்) எப்படியெல்லாம் அழுகிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். அவ்வளவு தான் நண்பர்களே..... நான் அவருக்கு என்ன தீங்கிழைத்தேன் என்பதே எனக்கு விளங்காத நிலையில்..... என்னை பல்வேறு வகைகளில் துன்புறுத்த துவங்கி விட்டார்....


விக்ரம் தண்ணியடிப்பதையும் நாசர் மற்றும் குடும்பத்தினர் அழுவதையும் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி காட்டி காட்டி என்னை துன்புறுத்தினார்......நாசர் தம் குணசித்திர நடிப்பால் குமுறி குமுறி அழுவதை காட்டி துன்புறுத்தினார்....அப்பொழுது நாசரின் முதுகு குலுங்குவதை காட்டி துன்புறுத்தினார்....நாசரின் மகள்கள் இருவரும் கலங்கி நிற்பதை காட்டி துன்புறுத்தினார்..... நாசரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிப்பதை காட்டி துன்புறுத்தினார்......அவ்வப்பொழுது தபுவை தத்துவம் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.....லாரா தத்தாவை வைத்து ஆறுதல் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.... விக்ரம் செத்துப் போன அப்பா ஆவியாக வந்து விக்ரமோடு தண்ணியடிப்பதை காட்டி துன்புறுத்தினார்.... அந்த அப்பா சொன்ன ஜோக்குகளை வைத்து துன்புறுத்தினார்.....இப்படியாக பலவகையில் 2.30 மணி நேரம் துன்புறுத்திய பின்னர், "தண்ணியடித்துக் கொண்டிருந்தாரே விக்ரம்? அவருக்கும்..... அழுதுக் கொண்டிருந்தானே பாதிரியின் பிள்ளை ஜீவா அவனுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா??????" என்றார்..... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... எங்கே தவறாக சொன்னால் இன்னொரு படம் எடுத்து துன்புறுத்துவாரோ என்கிற பயத்தில்.... நான் விழிக்க... அவங்க ரெண்டு பேருமே.... டேவிட்.... என்றார்.......நான் நொந்து நூலானேன்... வெந்து வேர்க்கடலையானேன்......


என் சொந்த செலவில் சூன்னியம் வைத்துக் கொண்டவன் என்கிற முறையில் இத்தனை துன்புறுத்தல்களையும் இன்னும் பல சொல்லவொண்ணா சோகங்களையும் அந்த 2.30 மணி நேரத்தில் பொறுத்துக் கொண்ட நான்.... ஒன்றே... ஒன்றை... மட்டும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நண்பர்களே.... அது என்ன தெரியுமா.... புதிய கெட்டப் என்கிற பெயரிலே....ஹேர் ஸ்டைல் என்கிற போர்வையிலே.....அழகான தோரணம் என்கிற தோரணையிலே.... ஜீவா.... பின்னந்தலையில். தொங்கவிட்டிருந்தாரே அந்த ரெட்டை ஜடை...... அந்த ரெட்டை ஜடையை மட்டும் என்னால்..... பொறுத்துக் கொள்ள முடியவில்லை...... பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை......