Sunday, September 21, 2008

மதம் பிடித்த மூடர்கள்.


மதம் மனிதனை பக்குவப்படுத்த வேண்டும். நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். எது நீராக இருக்க வேண்டுமோ அதுவே பகைமை தீயை வளர்க்கும் எரிபொருளாகும் அவலம் சோகமானது.

இந்த உலகில் வாழப் போவது கொஞ்ச நாள் தான். அதில் நல்ல உணவு உண்டு, நல்ல இசை ரசித்து, நல்ல உறவுகளுடன் பழகி, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து இறைவனடி போய் சேரலாம் என சிந்திக்க ஏன் இவர்களால் முடிவதில்லை? தாங்களும் பாவம் செய்து, பிறர் வாழ்க்கையும் நரகமாக்கி இவர்கள் என்ன தான் சாதிக்கப் போகிறார்கள்?

எப்படி தீவிரவாதம் இஸ்லாம் மதத்துக்கு மிகப் பெரிய அவப் பெயரை ஏற்படுத்துகிறதோ அதே போல இந்த வன்முறை நிகழ்ச்சிகள் இந்து மதத்துக்கு அவப் பெயரைத்தான் ஏற்படுத்தும். இது புரியாதவர்கள் தான் இந்து மதத்தை காப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிப் பட்ட முட்டாள் தனங்களில் ஈடுபடுவார்கள்.

ஓரிஸ்ஸாவிலும் பெங்களூரிலும் கிரிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான செயல். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Saturday, September 20, 2008

ரமணர் காந்தி பற்றி இளையராஜா


மஹாத்மா காந்தியை பற்றிய புத்தகம் ஒன்றை நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில் வெளியிட்ட பொழுது இசைஞானி பேசியது.

அதை என் வார்த்தைகளில் கொடுக்கிறேன்.

"நான் பெரிதும் போற்றும் ரமணருக்கும் மஹாத்மாவிற்குமான தொடர்பு உன்னதமானது. மஹாத்மாவின் மேன்மையை உணர்த்த ரமணரின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்களை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு முறை மஹாத்மாவிற்கு நெருக்கமானவர்கள் குரு ரமணரை சந்திக்க வந்தார்கள். அவர்கள் மஹாத்மாவிற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ரமணரை கேட்டார்கள். அதற்கு ரமணர், "என்னை எந்த சக்தி இங்கே சாந்தம் கொள்ளச் செய்ததோ அதே சக்தி தான் அவரை அங்கே செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவருக்கு நான் சொல்ல ஒன்றுமே இல்லை" என்றாராம். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது இல்லை. இப்போது இருப்பது போல தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பும் இல்லை. அப்படியிருந்தும் காந்தியின் மீது ரமணர் அவ்வளவு அபிமானம் வைத்திருந்தார். காரணம் ஒரு ஞானியின் மேன்மை இன்னொரு ஞானிக்குத் தான் தெரியும். நாம் மஹத்மாவை மறந்ததின் விளைவு தான் இன்று நடைபெறும் வன்முறைகளுக்கும் பிற குற்றங்களுக்கும் காரணம். இன்று செய்தி தாள்களில் வரும் சம்பவங்களையெல்லாம் பார்த்தால் மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

ரமணர் எதற்கும் கலங்காதவர். இந்து முஸ்லிம் மதச் சண்டைகளின் பொழுது ரமணாஸ்ரமம் முன்பே பல கொலைகள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கூட நிச்சலனமாக பார்த்துக் கொண்டிருந்த ரமணர். மஹாத்மாவின் மரணத்தை பற்ற்றிக் கேள்விப் பட்டவுடன் கண் கலங்கி விட்டார்." இதைச் சொன்ன பொழுது இசைஞானியும் கண் கலங்கிவிட்டார். அதன் பிறகு ஒரிரு வார்த்தைகளோடு தன் உரையை முடித்துக் கொண்டார்.

இசைஞானி எப்போதும் இயல்பு நிலையில் இருப்பதை கண்டு பல முறை வியந்திருக்கிறேன். அவர் பேசும் பொழுது தன் மனதை பேசினார். உண்மையை சொல்பவர்கள் சிந்திக்க தேவையில்லை என்பார்கள். அதை நான் அன்று அவரிடம் கண்டேன்

Wednesday, September 10, 2008

சட்டம் ஓர் இருட்டறை


எம். எஃப். ஹுசைன் வரைந்த நிர்வாண ஒவியங்கள் கலை அம்சம் என்றும் அப்படிப் பட்ட ஓவியங்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன என்றும் அவை கோவில்களில் கூட இருக்கின்றன என்றும் கூறி அவரின் கீழ்த் தரமான செயலை நியாயப் படுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றம்.

நிர்வாணம் குற்றமென்று யாரும் சொல்லவில்லை. அவை கோவில்களில் இல்லை என்றும் யாரும் சொல்லவில்லை. கோவில்களில் இருக்கும் நிர்வாணச் சிற்பங்கள் எந்த நபரையும் குறிப்பிடுவன அல்ல. ஒரு குறிப்பிட்ட நபரை நிர்வாணமாக வரைந்து அதை பலர் முன் பகிரங்கப் படுத்தினால் அந்த நபரை நேசிப்பவர்களின் உள்ளம் புண்படாதா? அப்படி மனம் புண்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டால் அவர்கள் உணர்வுகளை பாதுகாக்க வேண்டியது உச்சி மன்றத்தின் கடமையல்லவா? எம்.எஃப் ஹுசைன் நிர்வாணப் படுத்தியது யாரையோ அல்ல. கோடிக் கணக்கான இந்துக்கள் தாயென கருதி வழிபடும் தெய்வங்களை. அவர் வரைந்த ஓவியங்களில் குற்றம் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்து கேட்கிறேன். உங்கள் வீட்டுப் பெண்களை எம்.எஃப். ஹுசைன் நிர்வாணப் படுத்தியிருந்தாலும் இதையே தான் சொல்வீர்களா? அதை கலையென கருதி ரசித்து பலரையும் ரசிக்க வரவழைப்பீர்களா?

நாம் பல்வேறு நம்பிக்கைகள் உடைய மக்கள் கொண்ட நாட்டில் வாழ்கிறோம். இங்கே நாம் அமைதியாக வாழவேண்டும் என்றால் மற்றவர் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, மற்றவர் நம்பிக்கைகளை புண்படுத்தாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் நாம் பண்பாடுடையவர்கள் என்பதற்கான சான்று. அப்படி பண்பாடின்றி நடந்துகொள்பவர்களை கண்டிப்பதும் தேவைப்பட்டால் தண்டிக்கவும் தான் நீதி மன்றங்கள் அமைக்கப் பட்டன.

அப்படி அமைக்கப் பட்ட நீதி மன்றங்களின் தலைமையாக திகழும் உச்ச நீதி மன்றம் இந்த முறை தன் கடமையை செய்ய தவறி விட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு இங்கே பதிவு செய்கிறேன்.

Friday, September 5, 2008

சிவனார் விரும்பும் வெண்தாமரை.


இசைஞானி இளையராஜாவை இதுவரை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

முதல் முறை திருவாசக இசைப் பேழை வெளியீட்டின் பொழுது. ம்யூசிக் அகாடமியில்.

அன்று வியாழக்கிழமை. மைலாப்பூர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே நண்பர் ஜகதீசன் ஐயா அவர்கள் திருவாசக இசைப் பேழை வெளீயீட்டுக்கு தான் செல்வதாக கூறி என்னையும் அழைத்தார். அழைப்பிதழ் இல்லாமல் அனுமதிப்பார்களா என்று நான் தயங்கிய போது, சுவரொட்டியில் அனைவரும் வருக என போட்டிருந்ததால் கண்டிப்பாக அனுமதிப்பார்கள் என்று கூறினார்.

அங்கே சென்ற பொழுது அழைப்பிதழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி மற்றவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். எப்படியாவது உள்ளே சென்று விட வேண்டும் என்று என்னைப் போலவே பலரும் ஆர்வமாயிருக்க உள்ளே அனுமதிக்கும் படி கெஞ்சிப் பார்த்தோம் சண்டையிட்டுப் பார்த்தோம் எதுவும் வேலைக்கு ஆவதாக தெரியவில்லை.

அழைப்பிதழ் வைத்திருந்த ஒருவரிடம் உரையை மட்டும் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைய பார்த்தேன். வாசலில் நின்றிருந்தவர்கள் தெளிவாக உரையை வாங்கி உள்ளே அழைப்பிதழ் இருக்கிறதா என்று பார்த்து இல்லையென்று கண்டுபிடித்து விட்டார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல "போஸ்டர்ல அனைவரும் வருகனு போட்டுட்டு இப்ப இன்விடேஷன் இருந்தா தான் விடுவோம்னா எப்படி சார்" என்றேன். என்னைப் போலவே நிறைய பேர் இருந்ததால், "ப்ரோக்ராம் ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம்" என்று வெளியே அனுப்பிவிட்டார்கள்.

பிரபலங்கள் பலரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. எப்படியும் உள்ளே சென்று விடவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். எப்படி என்று தான் புரியவில்லை. எப்படியும் உள்ளே சென்றுவிடுவேன் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. திருவாசகத்தை இசைஞானியின் இசையில்-குரலில் கேட்கும் உரிமை என் போன்ற ஒரு ஆன்மிகவாதிக்கு இல்லையென்றால் இது என்ன நியாயம் என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒரு முறை என் இதயத்தில் முறையிட்டேன்.

அப்பொழுது இசைஞானி அங்கே வருகை தந்தார். எல்லோரும் அவர் வண்டியை சுற்றிக் கொண்டார்கள். நானும் தான். வண்டி நின்றது. பின் கதவை திறந்தன அவர் கைகள். வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருந்தார். வெள்ளை நிற ஆடை. செருப்பும் கூட வெள்ளை தான். சிவபெருமானுக்கு பிடித்த வெண்தாமரை மலரைப் போல காட்சியளித்தார் இசைஞானி. வண்டியில் இருந்து இறங்கியவுடன் என்னை(யும்) பார்த்தார். ஆஞ்சநேயர் ராமரை வணங்குவதைப் போல அவரை வணங்கினேன். தலையசைத்து ஆமோதித்துவிட்டு உள்ளே சென்றார். பலரும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். காலில் விழுந்து வணங்கும் சில மணித்துளிகள் அவரை பார்க்க முடியாதே! அதனால் நான் விழுந்து வணங்கவில்லை. இசைஞானி உள்ளே சென்றார்.

இதுவரை உள்ளே செல்லாமல் இருந்ததிலும் ஒரு நன்மை இருந்ததை எண்ணி மகிழ்ந்தேன். பிறகு எப்படி உள்ளே செல்வது என சிந்தித்த படி நடந்து கொண்டிருந்த போது நேராக மேடைக்கு செல்லும் ஒரு வழியாக குழுப் பாடகர்களை அனுமதித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பின் நானும் உள்ளே நுழைந்துவிட்டேன். :) . எனக்கு பின்னால் வந்தவர்களை வாசலில் இருப்பவர்கள் தடுத்துவிட்டார்கள். :).

'பொல்லா வினையேன்' பாடலை விளக்குகளை அனைத்துவிட்டு ஒலிக்கச் செய்தார்கள். பாடலை கேட்ட படி என் அறை அருகில் நான் அவ்வப்போது தரிசிக்கும் சுந்தரேஸ்வரரை மனதுக்குள் கொண்டுவந்தேன். 'துய்ய என் உள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யே' என்று இசைஞானி உருகிய பொழுது காரணமே இல்லாமல் அழுகை வந்துவிட்டது. அந்த அனுபவம் வார்த்தைகளால் விளக்க இயலாதது.

அதன்பிறகு பலரும் பேசினார்கள். இசைஞானி பேச எழுந்த போது ஏற்பட்ட கரகோஷத்தை கண்டு ரஜினியே புருவம் உயர்த்தினார்.

இரண்டாவது தரிசனம். மஹாத்மா காந்தியைப் பற்றிய புத்தகம் ஒன்றை இசைஞானி வெளியிட்ட பொழுது. நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில்.

மஹாத்மா காந்தியின் மேன்மையை உணர்ந்த வெகு சில இந்தியர்களில் இசைஞானியும் ஒருவர். ரமணர் மஹாத்மா இவர்களுக்கு இடையேயான உறவைப் பற்றிப் அவர் பேசிய பேச்சும் ஓர் ஆன்மிக விருந்தே.

ரமணர்- மஹாத்மாவை பற்றி "என்னை எந்த சக்தி இங்கே செயல் பட வைக்கிறதோ அதுவே அவரை அங்கே இயக்குகிறது" என்று சொன்னதை சொன்னார்.

மதச் சண்டையின் பொழுது பல கொலைகளை பார்த்தும் கலங்கிடாத ரமணர் மஹாத்மா மறைந்த பொழுது கண்ணீர் சிந்தியதாக சொன்ன பொழுது இசைஞானி கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

விழா முடிந்தவுடன் பாலோ கீலோவின் "Like the flowing river" புத்தகத்தை இசைஞானிக்கு பரிசளிக்கலாம் என நானும் என் தம்பியும் முடிவெடுத்தோம். உடனே அந்த புத்தகத்தை வாங்கி அவர் வெளியேரும் முன் ஓடிச் சென்று அவர் கைகளில் கொடுத்து விட்டோம்.

அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் நான் எழுதிய வரிகள்

"நாங்கள்
உன் ரசிகர்கள்
உன் தலைவர்கள்
நீ படைக்கும் வரைக்கும்
விருந்தை ரசிப்போம்"

உன் தலைவர்கள் என்பதை உன் பக்தர்கள் என்று எழுதியிருக்கலாம் என அதன் பிறகு தோன்றியது.

இசைஞானி அதை படித்திருப்பார் என நினைக்கிறேன். படித்தவுடன் என்ன செய்த்திருப்பார்? புன்னகைத்திருப்பாரா? 'கிறுக்குப் பய' என்று நினைத்திருப்பாரா? தெரியவில்லை.