Tuesday, October 27, 2009

குளிரவைத்த ஈரம்

ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் ஈரம் உலகத் தரமானது. புது முக இயக்குநர் அறிவழகன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.

அன்றாடம் பயன்படுத்தும் நீரை இவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்ட முடியுமா என்ற வியப்பு எனக்குல் எழுந்தது. எத்தனையோ புகைப் படங்களிலும் திரைப்படங்களிலும் பாடல் காட்சிகளிலும் தண்ணீரின் அழகை பதிவு செய்திருந்தாலும் அதன் அழகையும் வசீகரத்தையும் இந்த அளவுக்கு யாரும் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

நீர் தான் படத்தின் மைய கதாபாத்திரம் என்று ஆன பிறகு அதை எத்தனை விதங்களில் கதைக்குள் கொண்டு வர முடியுமோ அத்தனை விதங்களிலுமே கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் மிக அழகாக. உதாரணம் கார் கண்ணாடியின் மீது தண்ணீர் படிந்து பாதை தெரியாதபடி மறைக்கும் காட்சி. அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் நீரின் பங்கு திணிக்கப் பட்டதாக தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கு ஒரு மைல் கல். காமிரா வைக்கப்படிருக்கும் ஒவ்வொரு கோணத்திலும் இயக்குநரின் தன்னம்பிக்கை கலந்த நிதானமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் பளிச்சிடுகின்றன. ஒளிப்பதிவாளரும் சரி, படத்தொகுப்பாளரும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் தத்தம் முத்திரையை பதித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை உறுத்தாத வண்ணம் மிக அழகாக இருக்கின்றன.
உதாரணம் கண்ணாடியில் நாயகியின் முகம் தோன்றி கண்ணீர் சிந்தும் காட்சி.

தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது தார்மீக ரீதியாகவும் நல்லதொரு பாடமாக இப்படம் அமைந்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். கசப்பான ஒரு கதை தான் என்றாலும் அதை மனதுக்கு இதமாக பறிமாறியிருக்கிறார்.

பல இடங்களில் வசனங்களில் விளக்க முயற்சிக்காமல் காட்சிகளாகவே பல விஷயங்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணம் கடைசியில் நாயகி குழந்தையாக வந்து நாயகனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சி. அவர்கள் உறவில் கள்ளங்கபடு இலை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டார். அதன் பிறகு நந்தா கதாபாத்திரம் கொலை செய்யப்பட போகிறது என்று நமக்கு உணர்த்தி படத்தை முடித்திருப்பது அசத்தலான புதுமை.

நாயகன் ஆதி கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். நாயகி, நாயகியின் தங்கையாக நடித்தவர், நந்தா, நாயகியின் தந்தை அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகியை விட நாயகியின் தங்கையாக நடித்திருப்பவருக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் முக்கிய காட்சிகள் கிடைத்திருக்கின்றன. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக மர்ம திரைப்படங்களில் ரசிகர்களை குழப்புவதற்காக சில காட்சிகளை தேவையில்லாமல் வைத்து பின் எந்த விளக்கமும் தராமல் விட்டுவிடுவார்கள். இதில் அப்படிப்பட்ட குறைகள் எதுவும் கிடையாது.

குறைகளே கிடையாதா?

என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்வளவு நேர்மையான ஒரு முயற்சியில் சிறு குறைகள் எங்கேனும் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி பாராட்டுவதே நியாயமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

நல்லதொரு திரைப்படத்தை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இத்திரைப்பட குழுவினருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

Wednesday, October 21, 2009

சைவ உணவுக்கு மாறிய காரணம்



கல்லூரி நாட்களில் நான் அசைவ உணவுகளை விரும்பி உண்பவனாக இருந்தேன். சாமி திரைப்படத்தில் வரும் வசனமொன்றில் சொல்வது போல வானத்தில் திரிவதில் விமானத்தையும், கடலில் திரிவதில் கப்பலையும் தவிர அனைத்தையும் சுவைத்து வந்தேன். அப்படி சுவைக்க முடியாதவற்றை 'என்னிக்காவது ஒரு நாள் ஒரு வெட்டு வெட்டனும்' பட்டியலில் வைத்திருந்தேன்.

ஒரு நாள் என் அம்மா என்னை கோழிக் கறி வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். கடையில் ஜீவனொன்று தன் வாழ்வுக்காக தன்னால் முடிந்த வரை சிறகுகளை படபடத்து கத்திக் கதறி போராடி கடைசியில் இயலாமையொடு மெல்ல மெல்ல உயிரைப் பறிகொடுத்த அந்தக் காட்சி எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.

"நாம் உண்ணும் இந்த ஜீவன்கள், நாம் அவற்றைக் கொல்லும் பொழுது தங்களை விட்டு விடும்படி வார்த்தைகளற்று கெஞ்சுகின்றன. நாம் அந்த கதறலை புறக்கணிக்கிறோம். நாம் ஏன் வாழ வேண்டும் என்கிற அதன் வேட்கையை மதித்து, வார்த்தைகளற்ற அதன் கதறலை கருத்தில் கொள்ளக் கூடாது?"

ஒரு இளிச்ச வாயன் நம் கையில் சிக்கும் பொழுது அவனை எதுவும் செய்யாமல் 'பொழச்சு போ' என்று விடும் பொழுது ஒரு பெருமிதம் கலந்த திருப்தி ஏற்படுமே, அந்த திருப்தியை சுவைக்க வேண்டும் என்கிற ஆசையும் அந்தக் கேள்வியுடன் தோன்றியது.

நான் இது பற்றி சில அசைவ விரும்பிகளிடம் பேசிய பொழுது அவர்கள் பலவிதமான எதிர்மறை கருத்துக்களை முன்வைத்தார்கள்.

"சைவ உணவு மட்டும் கொல்லாமல் கிடைக்கிறதா? ஏன் தாவரங்களில் உயிர் இல்லையா? "

"என் கேள்வி கொல்வதைப் பற்றியதல்ல. கொல்லாமையை தீவிரமாக கடைப் பிடிப்பதாயின் பல் விளக்கக் கூட முடியாது என்பது எனக்குத் தெரியும்."

"அந்த ஜீவன்கள் மனிதனுக்கு உணவாக வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றை உண்பது நம் உரிமை."

"அவற்றை உண்ணும் உரிமை நமக்கு இருக்கலாம். அந்த உரிமை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன?"

"சைவ உணவு உண்பது பாவம் என்றால் சிங்கம் புலி இவற்றுக்கெல்லாம் என்ன உணவை இறைவன் படைத்தார்?"

"என் கேள்வி பாவம் புண்ணியம் பற்றியதல்ல. இரண்டாவது, சிங்கம் புலி இவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யும் திறனும் இல்லை."

இந்த எதிர்மறை கருத்துக்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வந்தது அடுத்த ஒரு கருத்து.

"எல்லாரும் சைவ உணவுக்கு மாறிவிட்டால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இயற்கையின் சமச்சீர் கெடும்"

ஆஹா! என்ன ஒரு பொறுப்புணார்ச்சி!

இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி, மழையே வராதபடி செய்துவிட்டோம். ஆற்று மணலையெல்லாம் திருடி விற்று, விற்பவர்களிடம் வாங்கி வீடு கட்டி ஆறுகளை எல்லாம் வரலாறுகளாக்கி விட்டோம். இயற்கை, கலாச்சாரம், சினிமா, அரசியல், நிர்வாகம் என்ற எல்லாமே நம் பொறுப்பற்ற தன்மையாலயே கெட்டுக் குட்டிச் சுவாராகியிருக்கும் நிலையில் நம் அசைவ விரும்பி நண்பருக்கு இயற்கையின் சமச் சீரை காப்பாற்ற வேண்டும் என்கிற வேட்கை அசைவ உணவு உண்பதில் மட்டும் அளவற்று பொங்குகிறது.

எனக்கு அப்பொழுது ஒன்று புரிந்தது. இது பற்றியெல்லாம் பலரிடமும் கலந்துரையாடிக் கொண்டிருக்க தேவையில்லை.
இது தனிப்பட்ட மனிதர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் விஷயம்.

நான் அன்று முதல் சைவ உணவு மட்டுமே உட்கொள்வதென முடிவெடுத்தேன். கொல்வது பாவம் என்பதற்காக அல்ல. கொல்லாமையை கொள்கையாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

நம் கருணைக்குட்பட்ட ஒரு ஜீவனின் வாழும் வேட்கையை மதிக்க வேண்டும் என்பதற்காக. அதன் கதறலை நான் புறக்கணிக்கவில்லை என்கிற திருப்தியை என் இதயத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக.

Friday, October 9, 2009

என்னைப் போல் இல்லை

நேற்று உலக நாயகன், பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் பொன் விழா படைப்பான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் பார்த்தேன்.

'A WEDNESDAY' என்கிற ஹிந்தி திரைப்படத்தை தமிழ்ப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்படுத்துவதோடு நிற்காமல் கதை திரைக்கதை வசனம் நடிப்பு என மூலத்தில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் படுத்தோ படுத்தென்று படுத்தியிருக்கிறார்கள்.

நீதித் துறையின் வேகத்தைக் கண்டு பொறுமையிழந்த ஒரு பொது மனிதன் தன் சாமர்த்தியத்தால் குற்றம் இழைத்த நால்வருக்கு தணடனை தர முடிவு செய்து, அதை வெற்றிகரமாக எப்படி நிறைவேற்றுகிறான் என்பதை சொல்வது தான் திரைக்கதையின் நோக்கம்.

இந்தியில் இதை ஏற்கனவே எந்தவித குறைகளும் இன்றி, பார்ப்பவர்களின் நாடி நரம்புகள் யாவும் முறுக்கேறும் விதமாக தொய்வில்லாமால் செய்திருந்தார்கள்.

அதே திரைக்கதையில் தன் புத்திசாலித்தனத்தை கலந்து (ஹி ஹி... அப்படித் தான் கமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்) நல்ல திரைக்கதையில் பல ஓட்டைகளைப் போட்டு, பார்ப்பவர்களை முந்திரிகளும் மிளகும் கலந்த பொங்கலை ஒரு வெட்டு வெட்டிய பின் ஏற்படும் ஒரு மந்த நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

உதாரணம் டாக்டர் கமல் அவர்கள் வெற்றுப் பைகளை பேரூந்திலும் ரயிலிலும் வைத்து விட்டு காவல் துறை ஆணையரிடம் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்வது. பொய் சொல்வதென்று ஆன பிறகு, வெற்றுப் பைகளை அங்கும் இங்கும் வைக்காமலேயே வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்லலாமே?

காவல் நிலையத்தில் வெடி குண்டு வைக்கும் பொழுது நஸ்ருதின் ஷா லாவகமாக எந்த பதட்டமும் இல்லாமல் வைத்து விட்டு திரும்புவார். அதைப் பார்ர்கும் பொழுது காவல் துறையினர் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். கமல் அவர்களோ பையை எங்கே வைக்கலாம் என ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார். காவல் துறையினரின் ஓட்டைகளை புரிந்து கொண்டு நல்ல திட்டமிடலோடு அவர்களோடு விளையாட நினைக்கும் ஒருவர் எதற்காக ஒரு பையை மறந்து வைப்பது போல மறந்து வைத்து விட்டு வர அப்படித் தடுமாற வேண்டும்?

ஹாரிஃப் கமல் இருக்கும் கட்டிடத்திற்கு கமல் இருக்கக் கூடும் என கருதி தேட வருவார். அவ்வளவு தூரம் வந்தவர் ஓரே ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்க மறந்து விட்டு எதற்காக யாரும் அங்கு இல்லை என முடிவு செய்ய வேண்டும்? 'Do not disturb' என்று எழுத்துக்களை பார்த்து கீழ்படிந்து விட்டாரா? மூலத்தில் ஹாரிஃப் வேறு கட்டடத்தில் தேடுகிறார் என்று நமக்கு புரிய வைத்திருப்பார்கள். உலக நாயகன் அவர்கள் தொலை நோக்கு கருவி வழியாக ஹாரிஃபை தலைக்கு மேலிருந்து பார்க்கிறார். ஆனால் ஹாரிஃப் அந்த ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்காமலே அங்கு யாரும் இல்லை என முடிவு செய்து விடுகிறார்.

மூன்று தீவிரவாதிகள் ஜீப்பில் அமர்ந்திருக்கும் பொழுது வரும் அழைப்பை சந்தானபாரதி எடுத்து பேச முயற்சிக்கும் பொழுது அவர் ஆள்காட்டி விரலில் அவர் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளொடு தொடர்பு வைத்திருந்து சிறை சென்றவருக்கு யார் ஓட்டுரிமை கொடுத்தார்கள்?

கடைசியில் கமல் மோகன்லால் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் தான் மோகன்லால் காவல் துறையை சேர்ந்தவர் என்பதே கமலுக்கு தெரிகிறது. அதுவும் வந்திருப்பது காவல் ஆணையர் என்பது ஆணையரே தன்னை அறிகமுகம் செய்த பிறகு தான் கமலுக்கு தெரிகிறது. கூகிளில் தேடி வெடிகுண்டு செய்ய தெரிந்தவருக்கு நகரத்தின் காவல் ஆணையரின் முகம் தெரியாததற்கு என்ன காரணமோ?

மூலத்தில் நஸ்ரூதின் ஷா அனுபம் கேர் இடையே நடக்கும் உரையாடல்களில் எந்த ஒரு மதமும் மத நம்பிக்கைகளும் தாக்கப்படுவதில்லை. தமிழில் வழக்கம் போல கமலஹாசன் இந்து மதத்தை தாக்குவதை திறம்பட செய்திருக்கிறார். மத துவேஷத்திற்கு எதிரானவராக தன்னை காட்டிக் கொள்ளும் கமலஹாசன் அவர்கள் பேசும் வசனங்களை மத துவேஷத்தை வளர்க்கும் விதமாகவே இருக்கிறது. உதாரணம், "நீ இந்துவா?" என்று மோகன்லால் கேட்கும் இடத்தில். "அந்த கும்பலோடு என்னை சேர்க்காதீர்கள்" என்று சொல்லி இந்து மதவெறியர்கள் செய்த சில குற்றங்களை முன்னிறுத்துவார். முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல என்று வசனம் வைக்க தெரிந்த கமலஹாசனுக்கு இந்துக்கள் எல்லாரும் மத வெறியர்கள் அல்ல என்பது ஏனோ விளங்குவதில்லை. இதில் கரம்சந்த் காந்தியின் ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறார். காந்தி இரண்டு கைகளிலும் எழுதுவார் என்பது தெரிந்தவருக்கு அவர் ஒரு இந்து என்பதும் , அனுதினமும் ராம நாமம் ஜபித்தவர் என்பதும் ஏனோ இன்று வரை தெரியாமலேயே இருக்கிறது.

'A WEDNESDAY' திரைப்படத்தின் அழகே நஸ்ரூதின் ஷா, தான் எந்த மதம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் வந்து செல்வது தான். ஆனால் தமிழில் கமல் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் என்பதற்கு பல்வேறு விதங்களில் கோடி காட்டியிருக்கிறார். உதாரணம் அவர் மொட்டை மாடியில் நிற்கும் பொழுது அவர் குரலில் ஒலிக்கும் பாடல். அவர் வைத்திருக்கும் தாடி ஆகியவை.

இது போல இந்தியில் உள்ள பல அழகான விஷயங்களை தமிழில் கொண்டு வர தவறி விட்டார்கள். உதாரணம் அவ்வப்பொழுது நஸ்ரூதின் ஷா, "என் மனைவி இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்னை அழைத்து நான் சாப்பிடேனா? டீ குடித்தேனா? என்றெல்லாம் அவ்வப்பொழுது விசாரிக்கிறாள். உண்மையில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு ஆர்வமில்லை. அவளுக்கு பயம் வந்து விட்டது. அங்கங்கே குண்டு வெடிக்கிறதே,அவற்றில் நான் சிக்கியிருப்பேனோ என்கிற பயம் அவளுக்கு" இந்த வசனத்தில் தான் அந்த படத்தின் ஜீவ நாடியே இருக்கிறது. அதை கோட்டை விட்டார்கள். அதே போல நஸ்ரூதின் ஷாவுடன் ரயிலில் பயணிக்கும் பெயர் தெரியாத இளைஞன், தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் காட்சி. இதையும் கோட்டை விட்டார்கள். இப்படி இன்னும் பல காட்சிகள்.

இப்படி நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைஞர் குரலில் வேறு பேசி வெறுப்பேற்றுகிறார்கள். சில லட்ச உயிர்கள் சேதமடையக் கூடிய நிலையில் ஆக வேண்டிய காரணங்கள் என்னவென்று காவல் ஆணையரிடம் விசாரிக்காமல் கிருஷ்ணரைக் கூப்பிடாமல் தமிழ்க் கடவுள்களைக் கூப்பிடும் படி பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார், முதல்வர் அவர்கள். முதலவரின் உண்மையான முகத்தை பதிவு செய்யும் முயற்சியா?

மூன்று தீவிரவாதிகளையும் கொன்ற பிறகு நஸ்ரூதின் ஷா பேசும் வசனங்கள் எந்த ஒரு பொது மனிதனும் பேசக் கூடிய பொதுவான வசனங்கள். அவர் சொல்லும் காரணங்கள் மதச்சார்பற்றவை. அவருக்கு தீவிரவாதிகள் மீது தான் கோபம் இருந்தது. அதனால் தீவிரவாதிகளை கொல்ல திட்டமிட்டார். கமலஹாசன் அவர்கள் கோபமெல்லாம் இந்து வெறியர்கள் மீதிருக்க ஏனோ இவரும் தீவிரவாதிகளையே கொல்ல முடிவு செய்திருக்கிறார்.

நஸ்ரூதின் ஷா ஒரு இந்தியராக இருந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு பொது மனிதனாக இருந்ததனால் என்னால் அவர் கதாபாத்திரத்தொடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது.

உன்னைப் போல ஒருவன் என்று பெயர் வைத்துவிட்டு, என்னைப் போல இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேம்படுத்த கடந்த கால குற்றங்களை பேசி பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும் என நினைக்காமல்
இந்து நம்பிக்கைகளையும் இந்துக்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லி மத துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்திருப்பதால் உன்னைப் போல் ஒருவன் என்னைப் போல இல்லை.