
கேயோஸ் சித்தாந்தத்தின் படி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு கூட ஒரு புயலுக்கு காரணமாக இருக்க முடியும் அல்லது வந்திருக்க வேண்டிய புயலை வரவிடாமல் தடுத்திருக்க முடியும் என விளக்குகிறது.
ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின் ராமாயண சொற்பொழிவு காலை ஏழு மணியளவில் சென்னை தி.நகரின், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலேமலுமங்கா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
ராமாயணத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சுவைபட சொல்லி வருகிறார் ஸ்வாமிஜி.
இன்று ராவண சம்ஹாரத்தின் ஆரம்பம் எது என்பதை காண பின் நோக்கி விளக்கி வந்தார்.
ராமர் ராவணனை ஏன் கொன்றார்?
அவன் சீதாதேவியை கவர்ந்து சென்றதால் கொன்றார்.
சீதாதேவியை ராவணன் ஏன் கவர்ந்தான்?
சூர்ப்பணகையின் போதனையால் கவர்ந்தான்.
சூர்ப்பணகை ஏன் அவ்வாறு போதித்தாள்.?
ராமர் அவள் காதலை நிராகரித்ததால்.
ராமரிடம் அவள் எப்படி காதல் கொண்டாள்?
ராமரை வனத்தில் கண்டதால்.
ராமர் வனம் வர காரணம்?
கைகேயியின் வரம்.
கைகேகி ஏன் அந்த வரங்களை கேட்டாள்?
ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்ததால்.
தசரதர் ஏன் அவ்வாறு அறிவித்தார்?
தன் காதோரம் ஒரு முடி நரைத்திருந்ததை கண்டு தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்தார்.
தசரதரின் காதோரம் முடி நரைப்பதற்கும் ராவண சம்ஹாரத்திற்கும் இருக்கும் இந்த மறை முக தொடர்பு தான் கேயோஸ் சித்தாந்தம்.
இந்த மறைமுக தொடர்பை உணர்ந்ததால் தான் ராமாயணத்தை பாடிய எல்லா பெருங்கவிகளும் தசரதருக்கு முடி நரைக்கும் காட்சியை பாடியிருக்கிறார்கள் என விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் விளக்கினார்கள்.
காளிதாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று ராவணன் செய்த பாவத்தால் தசரதருக்கு முடி நரைத்தது என பாடினாராம்.
நம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி அந்நியர்களின் துதிபாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் நகைப்புக்கு உரியவர்களே.