Sunday, April 1, 2012

விரதம் பற்றி நகைச்சுவை


நண்பர் 1: ணா... எனக்கும் விரதமெல்லாம் இருக்கணும்னு ஆசை தான். சாப்பிடுகிட்டே இருக்க விரதம் ஏதாவது இருக்கா?

நண்பர் 2: இருக்கே.... மௌனவிரதம்!

நண்பர் 1: எது... இந்த பேசாம இருக்கணுமே அதுவா? அதுக்கு நான் சாப்புடாமலே இருந்துருவேனே...

நண்பர் 2. அப்ப பேசிகிட்டே இருக்க விரதம் ஒண்ணு இருக்கு ட்ரை பண்றீங்களா....

நண்பர் 1: என்னது ணா...

நண்பர் 2: சத்திய விரதம்...

நண்பர் 1: பொய் சொல்லாம இருக்கணுமா??? ணா... நான் நல்லவன் தான் ணா.. ஆனா உலகம் கெட்டு போய் கெடக்கே... இவிங்க கிட்ட பொய் சொல்லலனா வேல நடக்காதே...

நண்பர் 2: சரி... அப்ப ஏகபத்தினி விரதம் ட்ரை பண்றீங்களா...?

நண்பர் 1: ணா... ஹி ஹி ஹி... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புங்ணா....

நண்பர் 2: ஹ்ம்ம்ம்.... உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு :)

Wednesday, January 4, 2012

நமக்கு ஏற்பட்ட காயங்களை விட
நாம் ஏற்படுத்திய காயங்களே
அதிகம் வலிக்கும் நமக்கு....

Tuesday, October 27, 2009

குளிரவைத்த ஈரம்

ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் ஈரம் உலகத் தரமானது. புது முக இயக்குநர் அறிவழகன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.

அன்றாடம் பயன்படுத்தும் நீரை இவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்ட முடியுமா என்ற வியப்பு எனக்குல் எழுந்தது. எத்தனையோ புகைப் படங்களிலும் திரைப்படங்களிலும் பாடல் காட்சிகளிலும் தண்ணீரின் அழகை பதிவு செய்திருந்தாலும் அதன் அழகையும் வசீகரத்தையும் இந்த அளவுக்கு யாரும் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

நீர் தான் படத்தின் மைய கதாபாத்திரம் என்று ஆன பிறகு அதை எத்தனை விதங்களில் கதைக்குள் கொண்டு வர முடியுமோ அத்தனை விதங்களிலுமே கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் மிக அழகாக. உதாரணம் கார் கண்ணாடியின் மீது தண்ணீர் படிந்து பாதை தெரியாதபடி மறைக்கும் காட்சி. அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் நீரின் பங்கு திணிக்கப் பட்டதாக தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கு ஒரு மைல் கல். காமிரா வைக்கப்படிருக்கும் ஒவ்வொரு கோணத்திலும் இயக்குநரின் தன்னம்பிக்கை கலந்த நிதானமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் பளிச்சிடுகின்றன. ஒளிப்பதிவாளரும் சரி, படத்தொகுப்பாளரும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் தத்தம் முத்திரையை பதித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை உறுத்தாத வண்ணம் மிக அழகாக இருக்கின்றன.
உதாரணம் கண்ணாடியில் நாயகியின் முகம் தோன்றி கண்ணீர் சிந்தும் காட்சி.

தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது தார்மீக ரீதியாகவும் நல்லதொரு பாடமாக இப்படம் அமைந்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். கசப்பான ஒரு கதை தான் என்றாலும் அதை மனதுக்கு இதமாக பறிமாறியிருக்கிறார்.

பல இடங்களில் வசனங்களில் விளக்க முயற்சிக்காமல் காட்சிகளாகவே பல விஷயங்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணம் கடைசியில் நாயகி குழந்தையாக வந்து நாயகனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சி. அவர்கள் உறவில் கள்ளங்கபடு இலை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டார். அதன் பிறகு நந்தா கதாபாத்திரம் கொலை செய்யப்பட போகிறது என்று நமக்கு உணர்த்தி படத்தை முடித்திருப்பது அசத்தலான புதுமை.

நாயகன் ஆதி கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். நாயகி, நாயகியின் தங்கையாக நடித்தவர், நந்தா, நாயகியின் தந்தை அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகியை விட நாயகியின் தங்கையாக நடித்திருப்பவருக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் முக்கிய காட்சிகள் கிடைத்திருக்கின்றன. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக மர்ம திரைப்படங்களில் ரசிகர்களை குழப்புவதற்காக சில காட்சிகளை தேவையில்லாமல் வைத்து பின் எந்த விளக்கமும் தராமல் விட்டுவிடுவார்கள். இதில் அப்படிப்பட்ட குறைகள் எதுவும் கிடையாது.

குறைகளே கிடையாதா?

என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்வளவு நேர்மையான ஒரு முயற்சியில் சிறு குறைகள் எங்கேனும் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி பாராட்டுவதே நியாயமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

நல்லதொரு திரைப்படத்தை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இத்திரைப்பட குழுவினருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

Wednesday, October 21, 2009

சைவ உணவுக்கு மாறிய காரணம்



கல்லூரி நாட்களில் நான் அசைவ உணவுகளை விரும்பி உண்பவனாக இருந்தேன். சாமி திரைப்படத்தில் வரும் வசனமொன்றில் சொல்வது போல வானத்தில் திரிவதில் விமானத்தையும், கடலில் திரிவதில் கப்பலையும் தவிர அனைத்தையும் சுவைத்து வந்தேன். அப்படி சுவைக்க முடியாதவற்றை 'என்னிக்காவது ஒரு நாள் ஒரு வெட்டு வெட்டனும்' பட்டியலில் வைத்திருந்தேன்.

ஒரு நாள் என் அம்மா என்னை கோழிக் கறி வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். கடையில் ஜீவனொன்று தன் வாழ்வுக்காக தன்னால் முடிந்த வரை சிறகுகளை படபடத்து கத்திக் கதறி போராடி கடைசியில் இயலாமையொடு மெல்ல மெல்ல உயிரைப் பறிகொடுத்த அந்தக் காட்சி எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.

"நாம் உண்ணும் இந்த ஜீவன்கள், நாம் அவற்றைக் கொல்லும் பொழுது தங்களை விட்டு விடும்படி வார்த்தைகளற்று கெஞ்சுகின்றன. நாம் அந்த கதறலை புறக்கணிக்கிறோம். நாம் ஏன் வாழ வேண்டும் என்கிற அதன் வேட்கையை மதித்து, வார்த்தைகளற்ற அதன் கதறலை கருத்தில் கொள்ளக் கூடாது?"

ஒரு இளிச்ச வாயன் நம் கையில் சிக்கும் பொழுது அவனை எதுவும் செய்யாமல் 'பொழச்சு போ' என்று விடும் பொழுது ஒரு பெருமிதம் கலந்த திருப்தி ஏற்படுமே, அந்த திருப்தியை சுவைக்க வேண்டும் என்கிற ஆசையும் அந்தக் கேள்வியுடன் தோன்றியது.

நான் இது பற்றி சில அசைவ விரும்பிகளிடம் பேசிய பொழுது அவர்கள் பலவிதமான எதிர்மறை கருத்துக்களை முன்வைத்தார்கள்.

"சைவ உணவு மட்டும் கொல்லாமல் கிடைக்கிறதா? ஏன் தாவரங்களில் உயிர் இல்லையா? "

"என் கேள்வி கொல்வதைப் பற்றியதல்ல. கொல்லாமையை தீவிரமாக கடைப் பிடிப்பதாயின் பல் விளக்கக் கூட முடியாது என்பது எனக்குத் தெரியும்."

"அந்த ஜீவன்கள் மனிதனுக்கு உணவாக வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றை உண்பது நம் உரிமை."

"அவற்றை உண்ணும் உரிமை நமக்கு இருக்கலாம். அந்த உரிமை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன?"

"சைவ உணவு உண்பது பாவம் என்றால் சிங்கம் புலி இவற்றுக்கெல்லாம் என்ன உணவை இறைவன் படைத்தார்?"

"என் கேள்வி பாவம் புண்ணியம் பற்றியதல்ல. இரண்டாவது, சிங்கம் புலி இவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யும் திறனும் இல்லை."

இந்த எதிர்மறை கருத்துக்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வந்தது அடுத்த ஒரு கருத்து.

"எல்லாரும் சைவ உணவுக்கு மாறிவிட்டால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இயற்கையின் சமச்சீர் கெடும்"

ஆஹா! என்ன ஒரு பொறுப்புணார்ச்சி!

இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி, மழையே வராதபடி செய்துவிட்டோம். ஆற்று மணலையெல்லாம் திருடி விற்று, விற்பவர்களிடம் வாங்கி வீடு கட்டி ஆறுகளை எல்லாம் வரலாறுகளாக்கி விட்டோம். இயற்கை, கலாச்சாரம், சினிமா, அரசியல், நிர்வாகம் என்ற எல்லாமே நம் பொறுப்பற்ற தன்மையாலயே கெட்டுக் குட்டிச் சுவாராகியிருக்கும் நிலையில் நம் அசைவ விரும்பி நண்பருக்கு இயற்கையின் சமச் சீரை காப்பாற்ற வேண்டும் என்கிற வேட்கை அசைவ உணவு உண்பதில் மட்டும் அளவற்று பொங்குகிறது.

எனக்கு அப்பொழுது ஒன்று புரிந்தது. இது பற்றியெல்லாம் பலரிடமும் கலந்துரையாடிக் கொண்டிருக்க தேவையில்லை.
இது தனிப்பட்ட மனிதர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் விஷயம்.

நான் அன்று முதல் சைவ உணவு மட்டுமே உட்கொள்வதென முடிவெடுத்தேன். கொல்வது பாவம் என்பதற்காக அல்ல. கொல்லாமையை கொள்கையாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

நம் கருணைக்குட்பட்ட ஒரு ஜீவனின் வாழும் வேட்கையை மதிக்க வேண்டும் என்பதற்காக. அதன் கதறலை நான் புறக்கணிக்கவில்லை என்கிற திருப்தியை என் இதயத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக.

Friday, October 9, 2009

என்னைப் போல் இல்லை

நேற்று உலக நாயகன், பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் பொன் விழா படைப்பான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் பார்த்தேன்.

'A WEDNESDAY' என்கிற ஹிந்தி திரைப்படத்தை தமிழ்ப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்படுத்துவதோடு நிற்காமல் கதை திரைக்கதை வசனம் நடிப்பு என மூலத்தில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் படுத்தோ படுத்தென்று படுத்தியிருக்கிறார்கள்.

நீதித் துறையின் வேகத்தைக் கண்டு பொறுமையிழந்த ஒரு பொது மனிதன் தன் சாமர்த்தியத்தால் குற்றம் இழைத்த நால்வருக்கு தணடனை தர முடிவு செய்து, அதை வெற்றிகரமாக எப்படி நிறைவேற்றுகிறான் என்பதை சொல்வது தான் திரைக்கதையின் நோக்கம்.

இந்தியில் இதை ஏற்கனவே எந்தவித குறைகளும் இன்றி, பார்ப்பவர்களின் நாடி நரம்புகள் யாவும் முறுக்கேறும் விதமாக தொய்வில்லாமால் செய்திருந்தார்கள்.

அதே திரைக்கதையில் தன் புத்திசாலித்தனத்தை கலந்து (ஹி ஹி... அப்படித் தான் கமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்) நல்ல திரைக்கதையில் பல ஓட்டைகளைப் போட்டு, பார்ப்பவர்களை முந்திரிகளும் மிளகும் கலந்த பொங்கலை ஒரு வெட்டு வெட்டிய பின் ஏற்படும் ஒரு மந்த நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

உதாரணம் டாக்டர் கமல் அவர்கள் வெற்றுப் பைகளை பேரூந்திலும் ரயிலிலும் வைத்து விட்டு காவல் துறை ஆணையரிடம் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்வது. பொய் சொல்வதென்று ஆன பிறகு, வெற்றுப் பைகளை அங்கும் இங்கும் வைக்காமலேயே வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்லலாமே?

காவல் நிலையத்தில் வெடி குண்டு வைக்கும் பொழுது நஸ்ருதின் ஷா லாவகமாக எந்த பதட்டமும் இல்லாமல் வைத்து விட்டு திரும்புவார். அதைப் பார்ர்கும் பொழுது காவல் துறையினர் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். கமல் அவர்களோ பையை எங்கே வைக்கலாம் என ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார். காவல் துறையினரின் ஓட்டைகளை புரிந்து கொண்டு நல்ல திட்டமிடலோடு அவர்களோடு விளையாட நினைக்கும் ஒருவர் எதற்காக ஒரு பையை மறந்து வைப்பது போல மறந்து வைத்து விட்டு வர அப்படித் தடுமாற வேண்டும்?

ஹாரிஃப் கமல் இருக்கும் கட்டிடத்திற்கு கமல் இருக்கக் கூடும் என கருதி தேட வருவார். அவ்வளவு தூரம் வந்தவர் ஓரே ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்க மறந்து விட்டு எதற்காக யாரும் அங்கு இல்லை என முடிவு செய்ய வேண்டும்? 'Do not disturb' என்று எழுத்துக்களை பார்த்து கீழ்படிந்து விட்டாரா? மூலத்தில் ஹாரிஃப் வேறு கட்டடத்தில் தேடுகிறார் என்று நமக்கு புரிய வைத்திருப்பார்கள். உலக நாயகன் அவர்கள் தொலை நோக்கு கருவி வழியாக ஹாரிஃபை தலைக்கு மேலிருந்து பார்க்கிறார். ஆனால் ஹாரிஃப் அந்த ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்காமலே அங்கு யாரும் இல்லை என முடிவு செய்து விடுகிறார்.

மூன்று தீவிரவாதிகள் ஜீப்பில் அமர்ந்திருக்கும் பொழுது வரும் அழைப்பை சந்தானபாரதி எடுத்து பேச முயற்சிக்கும் பொழுது அவர் ஆள்காட்டி விரலில் அவர் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளொடு தொடர்பு வைத்திருந்து சிறை சென்றவருக்கு யார் ஓட்டுரிமை கொடுத்தார்கள்?

கடைசியில் கமல் மோகன்லால் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் தான் மோகன்லால் காவல் துறையை சேர்ந்தவர் என்பதே கமலுக்கு தெரிகிறது. அதுவும் வந்திருப்பது காவல் ஆணையர் என்பது ஆணையரே தன்னை அறிகமுகம் செய்த பிறகு தான் கமலுக்கு தெரிகிறது. கூகிளில் தேடி வெடிகுண்டு செய்ய தெரிந்தவருக்கு நகரத்தின் காவல் ஆணையரின் முகம் தெரியாததற்கு என்ன காரணமோ?

மூலத்தில் நஸ்ரூதின் ஷா அனுபம் கேர் இடையே நடக்கும் உரையாடல்களில் எந்த ஒரு மதமும் மத நம்பிக்கைகளும் தாக்கப்படுவதில்லை. தமிழில் வழக்கம் போல கமலஹாசன் இந்து மதத்தை தாக்குவதை திறம்பட செய்திருக்கிறார். மத துவேஷத்திற்கு எதிரானவராக தன்னை காட்டிக் கொள்ளும் கமலஹாசன் அவர்கள் பேசும் வசனங்களை மத துவேஷத்தை வளர்க்கும் விதமாகவே இருக்கிறது. உதாரணம், "நீ இந்துவா?" என்று மோகன்லால் கேட்கும் இடத்தில். "அந்த கும்பலோடு என்னை சேர்க்காதீர்கள்" என்று சொல்லி இந்து மதவெறியர்கள் செய்த சில குற்றங்களை முன்னிறுத்துவார். முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல என்று வசனம் வைக்க தெரிந்த கமலஹாசனுக்கு இந்துக்கள் எல்லாரும் மத வெறியர்கள் அல்ல என்பது ஏனோ விளங்குவதில்லை. இதில் கரம்சந்த் காந்தியின் ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறார். காந்தி இரண்டு கைகளிலும் எழுதுவார் என்பது தெரிந்தவருக்கு அவர் ஒரு இந்து என்பதும் , அனுதினமும் ராம நாமம் ஜபித்தவர் என்பதும் ஏனோ இன்று வரை தெரியாமலேயே இருக்கிறது.

'A WEDNESDAY' திரைப்படத்தின் அழகே நஸ்ரூதின் ஷா, தான் எந்த மதம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் வந்து செல்வது தான். ஆனால் தமிழில் கமல் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் என்பதற்கு பல்வேறு விதங்களில் கோடி காட்டியிருக்கிறார். உதாரணம் அவர் மொட்டை மாடியில் நிற்கும் பொழுது அவர் குரலில் ஒலிக்கும் பாடல். அவர் வைத்திருக்கும் தாடி ஆகியவை.

இது போல இந்தியில் உள்ள பல அழகான விஷயங்களை தமிழில் கொண்டு வர தவறி விட்டார்கள். உதாரணம் அவ்வப்பொழுது நஸ்ரூதின் ஷா, "என் மனைவி இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்னை அழைத்து நான் சாப்பிடேனா? டீ குடித்தேனா? என்றெல்லாம் அவ்வப்பொழுது விசாரிக்கிறாள். உண்மையில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு ஆர்வமில்லை. அவளுக்கு பயம் வந்து விட்டது. அங்கங்கே குண்டு வெடிக்கிறதே,அவற்றில் நான் சிக்கியிருப்பேனோ என்கிற பயம் அவளுக்கு" இந்த வசனத்தில் தான் அந்த படத்தின் ஜீவ நாடியே இருக்கிறது. அதை கோட்டை விட்டார்கள். அதே போல நஸ்ரூதின் ஷாவுடன் ரயிலில் பயணிக்கும் பெயர் தெரியாத இளைஞன், தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் காட்சி. இதையும் கோட்டை விட்டார்கள். இப்படி இன்னும் பல காட்சிகள்.

இப்படி நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைஞர் குரலில் வேறு பேசி வெறுப்பேற்றுகிறார்கள். சில லட்ச உயிர்கள் சேதமடையக் கூடிய நிலையில் ஆக வேண்டிய காரணங்கள் என்னவென்று காவல் ஆணையரிடம் விசாரிக்காமல் கிருஷ்ணரைக் கூப்பிடாமல் தமிழ்க் கடவுள்களைக் கூப்பிடும் படி பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார், முதல்வர் அவர்கள். முதலவரின் உண்மையான முகத்தை பதிவு செய்யும் முயற்சியா?

மூன்று தீவிரவாதிகளையும் கொன்ற பிறகு நஸ்ரூதின் ஷா பேசும் வசனங்கள் எந்த ஒரு பொது மனிதனும் பேசக் கூடிய பொதுவான வசனங்கள். அவர் சொல்லும் காரணங்கள் மதச்சார்பற்றவை. அவருக்கு தீவிரவாதிகள் மீது தான் கோபம் இருந்தது. அதனால் தீவிரவாதிகளை கொல்ல திட்டமிட்டார். கமலஹாசன் அவர்கள் கோபமெல்லாம் இந்து வெறியர்கள் மீதிருக்க ஏனோ இவரும் தீவிரவாதிகளையே கொல்ல முடிவு செய்திருக்கிறார்.

நஸ்ரூதின் ஷா ஒரு இந்தியராக இருந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு பொது மனிதனாக இருந்ததனால் என்னால் அவர் கதாபாத்திரத்தொடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது.

உன்னைப் போல ஒருவன் என்று பெயர் வைத்துவிட்டு, என்னைப் போல இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேம்படுத்த கடந்த கால குற்றங்களை பேசி பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும் என நினைக்காமல்
இந்து நம்பிக்கைகளையும் இந்துக்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லி மத துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்திருப்பதால் உன்னைப் போல் ஒருவன் என்னைப் போல இல்லை.

Thursday, August 27, 2009

நீரின் தரம் உயர்ந்தது


சரவணம் மேன்ஷன் நீரின் தரம் மீண்டும் பயன்படுத்த தகுதியானதாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்தது இது தான்.

சுகாதார துறையினர் நீரின் தரம் உயரும் முன்பே நீரின் தரம் நன்றாக இருப்பதாக திரு.நாராயணன் அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கியிருந்தார்கள்.

அதை திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களிடம் கொடுத்தேன். அவர் அது குறித்து சுகாதார அதிகாரியிடம் விசாரித்தார். திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களின் மீது இருக்கும் பயத்தின் காரணமாக, நான் கொடுத்த நீரை உண்மையாக பரிசோதித்து மனித மலம் கலந்திருப்பதாக சான்றிதழ் வழங்கினார்கள். அதை நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ராஜாராமன் அவர்களிடம் கொடுத்தேன். அவர் சுகாதார துறையின் இணை ஆணையர் திருமதி. ஜோதிநிர்மலா அவர்களிடம் இது குறித்து பேசினார். சான்றிதழின் மேல் கைப்பட பிரச்சனையை விவரித்து எழுதியும் தந்தார்.

திரு.ஜோதிநிர்மலா அவர்கள் கூடுதல் சுகாதார அதிகாரி திரு.கிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணைப் பிறப்பித்தார்.

திரு.கிருஷ்ணன் அவர்கள் 14.08.2009 வெள்ளியன்று எங்கள் மேன்ஷனுக்கு வந்தார். என்னை அழைத்து என்ன புகார் என்றும் நான் என்ன நடவடிக்கை எதிர் பார்க்கிறேன் என்றும் கேட்டார்.

நான், "கசிவு அடைக்கப்பட வேண்டும். அப்படி முடியாவிட்டால் அந்த போரை அடைக்க வேண்டும். குழாய்களை மாற்ற வேண்டும் என்றேன்"

ஆனால் அவர், "நீங்கள் ஏன் காலி செய்துவிட்டு வேறு இடம் தேடக் கூடாது என்று கேட்டார்." என் காரணங்களை சொன்னேன்.

உடனே அவர் சுகாதார அதிகாரியிடம் திரும்பி, "நூறு பேரையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் கொடுங்க. ரமேஷ் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கைனு ஓனருக்கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். (இந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.)

அவரும் நான் அவரை இவ்வளவு தூரம் வர வைத்து விட்டேன் என்கிற கோபத்தில் பேசுகிறார் என்பது புரிந்தது. சரி அதையாவது செய்தால் மகிழ்ச்சி தான் என நினைத்துக் கொண்டோம்.

எனினும் மீண்டும் ஒருமுறை திருமதி.ஜோதிநிர்மலா அவர்களை சந்தித்து இது குறித்து விளக்கினால் நல்லதென்று எனக்குப் பட்டது. 18.08.2009 செவ்வாயன்று மீண்டும் அவர்களை சந்தித்தேன். இம்முறை சுகாதார ஆய்வாளர் வழங்கிய போலி சான்றிதழையும் அவர்களிடம் காட்டினேன். திரு.கிருஷ்ணன் அவர்கள் சொல்வது போல அனைவரையும் காலி செய்ய சொல்வது தேவையில்லை என்றும், உரிமையாளரை கசிவை அடைக்க ஆவன செய்யவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். திரு.ஜோதிநிர்மலா அவர்கள் பிரச்சனையை புரிந்து கொண்டார். என்னை சிறிது நேரம் வெளியே காத்திருக்க செய்தார்.

சிறிது நேரத்தில் உதவி சுகாதார அதிகாரி மருத்துவர். ரேவதி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார்.

"நா உங்க மேன்ஷனுக்கு வந்திருந்தேன். அந்த தண்ணீய நானே எடுத்து வந்து லேப்ல கொடுத்தேன். எங்க லேப்ல தண்ணீ நல்லாருக்குனு சொல்றாங்க" என்றார்.

நான், "மேடம் அப்படியிருக்க வாய்ப்பே இல்ல. நாங்க தினமும் அந்த தண்ணீய கையில தொடுறோம். எங்களுக்கு நல்லா தெரியும் மேடம். நீங்க டெஸ்ட் பண்ணவே வேண்டாம். கொஞ்சம் தண்ணீ ய கையில பட வெச்சு அஞ்சு நிமிஷம் கழிச்சு முகர்ந்து பாருங்க" என்றேன்.

அவர் புரிந்து கொண்டார். "நான் அது தான் அந்த பம்ப சீல் வெச்சுரலாம்னு சொன்னேன். எங்க சீனியர் தான் எவிக்ஷன் நோட்டீஸ் கொடுக்கலாம்னு சொன்னார். சீனியர் சொல்றப்ப நான் என்ன சொல்றதுனு விட்டுட்டேன்" என்றார்.

நான், "மேடம் நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்க. எல்லாரையும் காலி பண்ணவைக்கிறது சரியான தீர்வாகாது. உங்க சீனியர் ஒத்துக்கலன்னா ஜோதிநிர்மலா மேடம் கிட்ட பேசிப் பாருங்க புரிஞ்சுப்பாங்க என்றேன்."

மருத்துவர் ரேவதி, "சரி நான் பேசிப் பாக்குறேன் என்றார்"

கடந்த வெள்ளியன்று வேறு வேலை நிமித்தமாக வேளியே சென்று மாலை சுமார் ஆறு மணியளவில் விடுதிக்கு திரும்பினேன்.

குடிநீர் வாரிய நீர் சேமிக்கப் படும் தொட்டி சுத்தம் செய்யப் பட்டிருந்தது தெரிந்தது.

சம்மந்தப்பட்ட பம்பின் நிலையை காண சென்றேன். அங்கே திரு.நாராயணன் அவர்கள் சில வேலையாட்கள் மத்தியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். வேலையாட்கள் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாளே நீரின் துர்நாற்றம் 99% குறைந்திருந்தது. ஆச்சர்யம் ஆனால் உண்மை என்பது போல கடந்த ஒரு வாரமாக நீரின் தரம் படிப்படியாக உயர்ந்து பயன்படுத்த தகுதியானதாகிவிட்டது.

நன்றி சொல் படலம்.

மூன்றே மணி நேரத்தில் சரியாகியிருக்க வேண்டிய பிரச்சனை. பத்து மாத போராட்டத்திற்கு பிறகு நிறைவேறியது. இந்த போராட்டத்தில் பல நல்ல உள்ளங்கள் உதவியிருக்கிறார்கள். அனைவருக்கும் தனித் தனியாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.

சம்பவ அடிப்படையில் ஒவ்வொருவராக நன்றி சொல்கிறேன்.

முதல் முதலில் எங்களை நுகர்வோர் பாதுகாப்புத் துறையை அணுகும் படி அறிவுரை செய்த திருமதி. சந்த்ரிகா அவர்கள். ( தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர்.) இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நுகர்வோர் பாதுகாப்பு துறையினரிடம் மீண்டும் பேசியிருக்கிறார்.

அதன்பிறகு நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி. திரு சண்முகவேல் அவர்களும் அங்கு செயல் படும் இன்னும் சில அதிகாரிகளும். புகாரோடு சென்ற பொழுது ஆறுதல் அளிக்கும் விதமாக பேசி தேவையான நடவடிக்கை செய்து தந்தார்கள்.

நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் திரு.ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள். முதல் முறை நாராயணன் அவர்களுக்கு கடிதம் அனுப்பி அது திரும்பி வந்ததால் நேரடியாக ஒருவரை அனுப்பி கடிதம் கொடுத்து, அதற்கும் பலனில்லாததால், வழக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து, காவல் ஆணையர் மற்றும் சுகாதார இணை ஆணையர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் கைப்பட எழுதி என்று இவர் ஆற்றிய சேவை எண்ணி மகிழ வைப்பது.

எழுத்தாளர் திரு.ஞாநி அவர்கள். என் தம்பி அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதில் தந்தார். விகடன் பத்திரிக்கையை சேர்ந்த திரு.பாரதிதமிழன் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

திரு. பாரதிதமிழன் அவர்கள். எங்களுக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்தார். அவர் துணையால் தான் இப்பிரச்சனையை பத்திரிக்கையில் வெளியிட்டு உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தது. அது மட்டும் இல்லாமல் இது குறித்து தொடர்ந்து சிந்தித்து எங்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கினார். அவ்வப் பொழுது அவரே தொலைப்பேசியில் எங்களை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். இவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைப்பது எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்வது போல சற்று விசித்திரமாக எனக்கு தோன்றுகிறது. காரணம் இப்போராட்டத்தில் அவர் இரண்டற கலந்து விட்டார்.

டெக்கான் க்ரானிக்கல் பத்திரிக்கையின் நிருபர் செல்வி.ஜனனி அவர்கள் டெக்கான் க்ரானிக்கலில் இச்செய்தியை வெளியிட உதவினார்.
தமிழ்ச் சுடர் பத்திரிக்கையின் நிருபர் அவர்களும் இச்செய்தியை வெளியிட்டார்.

ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் நிருபர் திரு. பாலா அவர்கள், மற்றும் புகைப்படங்கள் எடுத்த திரு.நாகநாதன் அவர்கள். திரு பாலா அவர்கள் காவல் துறையினரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் காவல் துறையினர் மேலும் மேலும் தவறு செய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.

வாழும் மஹாத்மா உயர்திரு. டிராஃபிக் ராமசாமி அவர்கள். இவர் மீது அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் பயம் கலந்த மரியாதையை நான் கண் கூடாகக் கண்டேன். அவர் தன்னலமற்று நம் நன்மைக்காக செயல் பட்டு வருகிறார். அவரை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

அவருக்கு பக்கபலமாக செயல்பட்டுவரும் அக்னிச் சுடரின் ஆசிரியர். டி.எஸ்.ஜேம்ஸ் நாயகம் மற்றும் தலைமை நிருபர் என்.ஜெகதீஸ்வரன் அவர்கள்.

இவ்விருவரும் காவல் துறையினருக்கு கடுமையான பல சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். துணை ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை மேல் அதிகாரிகள் சிலர் விசாரிக்கும்படி செய்து விட்டார்கள். அதன் பிறகு திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இனி காவல் நிலையத்தில் எனக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது என வாக்களித்தார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கழகத்தை சேர்ந்த கோ.சுகுமாரன் அவர்கள். அவர் இது தொடர்பாக பலரிடம் பேசிவருகிறார். காவல் ஆய்வாளார் மற்றும் துணை ஆய்வாளார் மீது மனித உரிமை மீறல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து வருகிறார்.

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள். இவர் மேயரை சந்திக்கும் படி கடிதம் ஒன்று எனக்கு கொடுத்திருந்தார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் முன் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. இது குறித்து அவரிடம் இன்று தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன். அவர், "பொது பிரச்சனையை கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக உங்களுக்குத் தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.

திரு.நட்ராஜ் IPS அவர்கள், அவருக்கு இச்செய்தியை கொடுத்த paolos raja அவர்கள்.

திரு.ஜோதிநிர்மலா. இ.ஆ.ப அவர்கள். பல இடங்களுக்கும் சென்று கடைசியில் இவர் தான் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார். இவர் சேவைத் திறன் குறித்து பலரும் மரியாதையோடு இவரை பாராட்டுகிறார்கள்.

மருத்துவர் ரேவதி அவர்கள், பிரச்சனைக்கு சரியான தீர்வை பரிந்துரைத்தார்.

பதிவருலக நண்பர்கள்.

டிராஃபிக் ராமசாமி அவர்களை தொடர்பு கொள்ள உதவிய நண்பர் ஜீவன் அவர்கள்.

கிணறு வெட்ட பூதம் பதிவை பலருக்கும் கொண்டு செல்ல உதவிய நண்பர்கள் கோவி.கண்ணன், நட்புடன் ஜமால், கிரி , தருமி,
என்வழி.காம் இணைய தளத்தினர். தமிழ்மணம்.நெட் இணைய தளத்தினர், மந்திரன், அழகி விஸ்வநாதன், ரிஷான், சூர்வேசன், வால்பையன், கௌதம்.

தருமி அவர்கள் இப்பிரச்சனை குறித்து பலரும் புகார் அனுப்புவதை தன் தளத்தில் பதிவிட்டு உற்சாகப்படுத்தினார்.

மந்திரன் அவர்கள் இப்பதவுக்காக ஒரு நிரந்தர சுட்டியை கொடுத்திருந்தார்.

இப்பிரச்சனையை pdf file-ஆக தயாரித்து தந்த காசு ஷோபனா.

சைலேந்திர பாபு அவர்களுக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்ற செல்வி.ரூபிணி மற்றும் கமல்.

காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கொடுத்து ஊக்கப்படுத்திய செல்வி.ஈஸ்வரி அவர்கள்.

துணை முதல்வர் தளத்திற்கு புகார் அனுப்பிய அபி அப்பா அவர்கள்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் தளத்தில் இப்புகாரை வெளியிட்ட ப்ரகாஷ் அவர்கள்.

மற்றும் ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்வர் சாதிக், குமரேஷ், மணிவண்ணன் மற்றும் நான் ஆகிய நால்வரும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை மனமுருக தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பிரச்சனை மேலும் மேலும் வளர்க்காமல் இப்பொழுதாவது முடித்துத் தந்த திரு.நாராயணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

(இன்னும் சில பெயர்களை மறந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் என் மறதியை பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன். )

Monday, August 3, 2009

முயற்சிகள் தொடர்கின்றன.



என் முந்தைய பதிவைப் படித்துவிட்டு தாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த ஆதரவுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் இவ்வளவு தூரம் முயற்சி செய்தும், பல்வேறு தளங்களில் புகார் செய்தும் இன்னும் பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு காவலர்கள் எங்கள் மேன்சனுக்கு வந்தார்கள்.

வாட்ச்மேனிடம், "உங்க ஓனர வரச் சொல்லு" என்றார்கள்.

நான் சத்தம் கேட்டு வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்தவுடன். "வா தம்பி. உன் கதையா தான் வந்திருக்கோம். இப்படி போலீஸ் மானத்த வாங்கி வச்சிருக்கியே, இது உனக்கே நல்லா இருக்கா? நாங்கள்லாம் யாருக்காக ராத்திரி பகலா கண்ணு முழிக்கிறோம். உன்ன இவுங்க அடிச்சா யாரு கிட்ட சொல்லுவ? எங்ககிட்ட தானே வரணும்?"

ஜூன் ஐந்தாம் தேதி நான் மிரட்டப்பட்ட பொழுது இவர்களிடம் தானே சென்றேன்?

அவர் தொடர்ந்தார், "செருப்பு கால கடிச்சா கழட்டி எறின்னா.. கேக்க மாட்டேங்கிற! சரவணா மேன்ஷனையே தல கீழா மாத்தப் போறீயா. மெட்ராஸ்ல வேற மேன்ஷனே இல்லையா?"

"எனக்கு வேற மேன்ஷன் கிடைக்கும் சார். ஆனா இங்க நூறு பேர் அதே அசிங்கத்துல கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க!"

"வேண்டாம். உங்கிட்ட பேசுனா. நீ இதயும் போடுவ. நீ கெளம்பு. நான் உங்க ஓனர தான் பாக்க வந்தேன்"

அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்கலாமா? அது தான் அதையும் போடுகிறேன். :)

வாட்ச்மேன் அதற்குள் ஓனர் வீடு வரை சென்று திரும்பி இருந்தார். காவலர்களிடம், "சார், ஓனர் ஊர்ல இல்லை" என்றார்.

"யோவ். அந்த ஆள பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் உள்ள இருந்துகிட்டே இல்லனு சொல்வான்யா. " என்றவர், தன்னோடு வந்த காவலரிடம், "வா போய் வீட்ல ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்" என்று சொன்னார்.

அத்தோடு முடிந்தது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.

மாநகராட்சியில் இருந்து இரண்டு முறை வந்து சென்றார்கள்.

அவர்கள் வரும் பொழுதெல்லாம் நாராயணன் அவர்கள் தலையை வெளியே காட்டுவதேயில்லை. அவர் வெளியூரில் உள்ள தன் மகளின் வீட்டில் தங்கியிருப்பதாக விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் கூறினார்.

இன்னிலையில் பொது நல ஆர்வலரும் அக்னி சுடர் பத்திரிக்கையின் நிறுவனருமான திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பிற்கு உதவிய ஜீவன், இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அக்னிச் சுடரில் வெளியான செய்தியும் அந்த தளத்தில் உள்ளது. அங்கே செல்ல.

திரு.டிராஃபிக் ராமசாமி அவர்கள் சுகாதார அதிகாரியை கைப் பேசியில் தொடர்பு கொண்டு, பொய் சான்றிதழ் வழங்கிய சுகாதார ஆய்வாளர் குறித்து கேள்வி எழுப்பினார்.

"அவர் யார் இவங்கள காலி பண்ண சொல்றதுக்கு? தண்ணியே எடுத்துட்டு போகாம, தண்ணி நல்லாருக்குன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கார்.? "

மறுமுனையில் சொல்வதை கொஞ்சம் நேரம் மௌனமாக கேட்டார். பிறகு, "சரி, இப்ப பையன தண்ணியோட வரச் சொல்றேன். டெஸ்ட் பண்ணிப் பாருங்க" என்றார்.

நான் தண்ணீரோடு சென்று சுகாதார அதிகாரியைப் பார்த்தேன். சுகாதார அதிகாரி மருத்துவர் குகானந்தம், பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று சொன்னார். பரிசோதனையின் முடிவு எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடரக் கூடாது என்றும் சொன்னார். சான்றிதழ் இன்னும் ஓரிரு தினங்களில் வரும்.

கடந்த புதன் 29-072009 முதல் அந்த பம்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது வெறும் சப்பைக் கட்டுத் தான். சூடு தணிந்தவுடன் மீண்டும் போடத் துவங்கிவிடுவார்கள்.

என் அப்பா குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சவுந்திரபாண்டியன் அவர்களை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். திரு. சவுந்திரபாண்டியன் அவர்கள் மேயரை சந்திக்கும் படி ஒரு கடிதம் கொடுத்துள்ளார். மேயரை நாளை அல்லது மறுநாள் சந்திக்க முயற்சி செய்வேன்.

பிரச்சனைக்கான தீர்வு மிக எளிமையானது தான். அதை திரு.நாராயணன் அவர்களை செய்ய வைக்க எந்த அதிகாரியாலும் முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம். இத்தனை I.A.S , I.P.S அதிகாரிகள் இருந்தும் ஒரு நியாயமான கோரிக்கையை, அடிப்படையான ஒரு விஷயத்தை, நிறைவேற்றித் தர யாருமேயில்லை. (நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவிர)


இதற்கெல்லாம் ஒரு முடிவு நீதி மன்றத்தில் தான் கிடைக்கும் என நினைக்கிறேன்.

நிற்க. நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் அதை செய்யலாம்.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்க செல்லும் பொழுது பெரும்பாலும் காவல் அதிகாரிகள் புகாரை பதிவு செய்யாமலேயே தட்டிக் கழிக்கிறார்கள். இதனால் பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் போவதுடன், தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. இதனால் தவறான வழிகளை தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் இடையறாது அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மக்களின் விழிப்புணார்வின்மையே ஆகும்.

நம் அறியாமையை போக்குவது நம் நண்பர்களான காவல் துறையின் வேலையல்லவா? அதனால் காவல் துறையே மக்களிடம் இது பற்றிய விழிப்பிணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை, வலைப்பதிவர்கள் சார்பாக நாம் எல்லோரும் சென்று காவல் ஆணையரிடம் ஒரு பொது நல கோரிக்கையாக கொடுக்கலாம். அந்த கோரிக்கை கீழ்க் கண்டவாறு இருக்கும்.

காவல் துறைக்கு வரும் எல்லா புகார்களுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். அப்படி ரசீது கொடுப்பது தங்கள் கடமையென காவல் துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் ரசீது பெறுவது தங்கள் உரிமையென்பதை உணர்வதற்கான விளம்பரங்கள் வெளியிடப் பட வேண்டும். அப்படி புகாருக்கு காவலர்கள் ரசீது தராத பட்சத்தில் புகார் கொடுப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை நாம் எல்லோரும் சேர்ந்து காவல் துறை ஆணையரிடம் கொடுக்கலாமா?

நிறைய பேர் சேர்ந்து புகார் கொடுத்தால் பொது நல புகார் என்பதால் நாளிதழ்களில் செய்தி வெளியாக வாய்ப்பிருக்கிறது. அப்படி செய்தி வெளியானால், அதுவே பலரிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதை உங்களில் யாராவது முன் நின்று ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் இதை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். என்று என்பதை, விவாதித்து முடிவு செய்யலாம்.