Tuesday, June 2, 2015
Monday, June 1, 2015
Monday, April 14, 2014
தலைவர் கணக்கு
அரசியல்வாதி போடுவது கூட்டு-ஓட்டுக் கணக்கு
தலைவர் போற்றுவது நட்புக்-கூட்டு கணக்கு
அரசியல்வாதி போடுவது வேஷக் கணக்கு
தலைவர் போடுவது பாசக் கணக்கு!
ஒகே சொன்னா ஓட்டு கிடைக்கும்
அவர்களின் கணக்கு
தேர்தல் வந்தது நிம்மதி போனது
தலைவரின் கணக்கு!
Sunday, December 22, 2013
தலைமுறைகள்
இன்று தலைமுறைகள் திரைப்படம் பார்த்தேன். பார்க்க வேண்டும் என முடிவு செய்து போகவில்லை. வெளியே செல்லலாம் என்று தான் கிளம்பினேன். நடந்து செல்ல பிடிக்கும் என்பதால் நடந்தபடி எஸ்கேப் அவென்யூ சென்றடைந்தேன். அங்கே எல்லாக் காட்சிகளும் அரங்கம் நிறைந்திருந்ததால் சத்யம் சென்று ஐ.டியில் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்து வெளியே வந்ததும் அறைக்கு திரும்பும் திட்டத்தில் தான் இருந்தேன். சும்மா...டிக்கெட் நிலவரம் தெரிந்து கொள்ள டிக்கெட் கௌன்டர் அருகில் செல்ல...தலைமுறைகள் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தன. மணியை பார்த்தேன். 4.18. காட்சி நேரம் 4.20. ஆஹா... என மகிழ்ந்து டிக்கெட் வாங்கினேன். ஏ வரிசையிலேயே கிடைத்தது. நான் என் சீட்டில் சென்று அமர்ந்த முப்பது வினாடிகளில்.... என் கண்களுக்கும்...காதுகளுக்கும்....என் இதயத்திற்கும்....என் ஆன்மாவிற்குமான.... ஒரு அற்புத விருந்து.... திரையில் ஒளிர துவங்கியது......இறைவன் என் ஒவ்வொரு நாளையும் திட்டமிடுகிறார் என்பதற்கான சான்றாக இந்நிகழ்வு இருந்தது.....
படம் பார்த்து முடித்தவுடன் இத்திரைப்படத்தை பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்களுக்குப் பின் முடிவு செய்தேன். அதே சமயம் இத்திரைப்படத்தை பற்றி அதிகமாக எழுதி அதன் அனுபவ அழகை கெடுத்துவிடக் கூடாதென்றும் நினைத்துக் கொண்டேன். ஆகையால்....
பாலுமகேந்திரா பதிவு செய்திருக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகளுக்காக ஒருமுறை...
இசைஞானி இளையராஜாவின் தேனனைய இசைக்காக ஒருமுறை....
படமெங்கும் கொட்டிக் கிடக்கும் கள்ளம் கபடமற்ற அன்பிற்காக ஒருமுறை....
அந்தச் சிறுவனுக்காக ஒருமுறை.....
இப்படி ஒரு முயற்சிக்கு தோள் கொடுத்த இயக்குநர் சசிகுமார் அவர்களுக்காக ஒரு முறை என.....
குறைந்தது ஐந்து முறையாவது பார்க்க வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருப்பதை மட்டும் கூறி இவ்விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்.
பி.கு: இத்திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என ஸ்ரீராமரை பிரார்த்திக்கிறேன்! ஸ்ரீராமஜெயம்!
Wednesday, April 3, 2013
போராடும் மாணவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சிந்தனை.
நாளை சன் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ற மாணவர் முடிவை முகநூலில் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துக்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவை இங்கே...
சன் ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர்களை சேர்த்திருக்கக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதற்காக சன் டிவி பார்ப்பதில்லை என்ற முடிவெடுத்தால் அவர்கள் டிஆர்பி அடி வாங்கும். அதை விட்டு சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிடுவதால் என்ன ஆகப் போகிறது. எவ்வளவு நேரம் இந்த முற்றுகை? முற்றுகையிட்ட பிறகு என்ன செய்ய போகிறீர்கள். முற்றுகைக்கு பிறகும் இலங்கை வீரர்களை நீக்க முடியாது என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?சன் டி.வி அலுவலகத்தை முற்றுகையிடுவதால் ஈழ மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட போகிறது?
சூரிய ஒளி எங்கும் சிதறி கிடப்பது போல உங்கள் போராட்டம் தமிழகம் எங்கும் சிதறி கிடக்கிறது. சூரிய ஒளியை ஒரு லென்ஸ் வழியாக குவிப்பதை போல, போராடும் மாணவர்கள் அனைவரும் சென்னையில் குவிந்தால் உங்கள் போராட்டம் ஆற்றல் பெரும். அப்படி குவியும் மாணவர்கள் டெல்லி நோக்கி நகர்ந்தால் உங்கள் போராட்டம் தீப் பிடிக்கும்.
சன்டிவி என்கிற தனியார் நிறுவனத்தை முற்றுகையிடுவதை விட தமிழகத்தில் போராடும் அனைத்து மாணவர்களும் சென்னையில் ஒன்று கூடி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். முற்றுகையிட்டு டெல்லியை நோக்கி போகும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு கேளுங்கள். இந்த ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்று வை.கோ அவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
அந்த ஊர்வலத்தில் பங்கு பெற பொது மக்களுக்கும் திரைத்துறையினருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுங்கள். திரைத்துறையினர் வந்தால் ரசிகர்களும் வருவார்கள். இப்படியாக தமிழ் சமூகத்தை ஒன்று திரட்டி நீங்கள் போராடினால் உங்கள் போராட்டம் இந்தியா முழுவது கவனிக்கப்படும்.
ஒரு போராட்டத்திறுகு எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரவு பெருகுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்போராட்டத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் ஈழத்தின் கொடுமைகள் குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உதாரணத்திற்கு நீங்கள் ரஜினிகாந்திடம் அவர் அமிதாப்பிடம் பேசி அமிதாப் அவர் ரசிகர்களிடம் பேசினால் உங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு ஆதரவு பெருகும் என்று சிந்தித்து பாருங்கள்.
ஒரு போராட்டம் என்பது சதுரங்கம் போன்றது. தப்பு தப்பாக காய் நகர்த்தினால் ஜெயிக்க முடியாது. சன் குழுமம் ஒரு வியாபார குழுமம் அவர்களுக்கு நுகர்வோராக இருப்பதில்லை என்று முடிவு செய்தால் அவர்கள் பலத்த நஷ்டம் அடைவார்கள். அதை விட்டு நீங்கள் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு உங்களில் சிலர் சிறை செல்வதால் என்ன லாபம்? நீங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உடலை பலவீனப்படுத்துவதால் என்ன லாபம்?
Sunday, March 31, 2013
சரியான திசையில் பயணிப்போம்
மாணவர்களின் இந்த போராட்டம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் போராடுகிறார்கள். வெறும் கோபத்தை வைத்து போராடுகிறார்கள். கோபம் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க உதவுமே ஒழிய ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவாது. அன்பும் அறிவும் தான் ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவும்.
முதலில் தனி ஈழம் என்பதே தமிழர்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வாகாது. ஏனென்றால் தனி ஈழம் வெற்றிகரமாக உருவானாலும் ஒரு தீவு அந்த தீவுக்குள் இரண்டு நாடுகள் என்ற நிலை உருவாகும். ஈழ இலங்கை எல்லைப் பகுதியில் இரு ராணுவங்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கும். ஈழத்துக்குள் இலங்கையின் ஊடுருவல் என்ற பெரும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது தமிழக மீனவர்களை கொல்வது போல ஈழ மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து கொல்லும். சண்டை என்பது தீராததாகத்தான் இருக்கும். சிங்கள அரசு என்ற ஒன்று தனித்து இயங்கும் வரை சிங்கள ராணுவம் என்று ஒன்று தனித்து இருக்கும் வரை அவர்கள் தமிழர்களை அழிக்கும் போக்கை நிறுத்தப் போவதில்லை. ஆனால் தமிழர்கள் இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தை உரிமையை நிலைநாட்டினால் தனி சிங்கள அரசு என்று ஒன்று இல்லாமல் போகும். அதனால் தமிழர்களின் கனவு இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் நிலைநாட்டுவதாகத் தான் இருக்க வேண்டுமே ஒழிய ஈழம் என்ற எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது.
இந்த போராட்டத்தின் மிகப் பெரிய தவறாக நான் பார்ர்கும் இன்னொரு விஷயம். தனி ஈழமா அல்லது தனி தமிழ்நாடா என்கிற கேள்வி.
தனி தமிழ் நாடு கேட்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் செயலன்றி வேறில்லை.
தனி தமிழ் நாடு கேட்பதின் முதல் சிக்கல், இந்திய அரசு அதற்கு எளிதில் ஒப்புகொள்ளாது. போராட்டம் வலுப் பெறும் பட்சத்தில் அவரகள் ராணுவத்தை கொண்டு அதை அடக்கும் அளவிற்கு செல்வார்கள். ராணுவம் ஒரு இடத்துக்குள் வந்தால் அவர்கள் என்னென்ன அநியாங்கள் செய்வார்களோ அனைத்தையும் செய்வார்கள். அவ்வளவு கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டு போராடினாலும் அந்த போராட்டம் பல பத்தாண்டுகளுக்கும் நீடிக்கும்.
இப்படியெல்லாம் போராடி தனி தமிழ் நாட்டை வென்றாலும் அதனால் நாம் அடையப் போகும் பலன் என்ன.
1. இப்பொழுது சகஜமாக சென்று கொண்டிருக்கும் கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கூட நாம் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. இந்தியாவிடம் சண்டை போட்டு தனித்து வந்த பிறகு வேலை தேடி அந்த எல்லைகளுக்குள் செல்லாமல் தமிழர்களால் இருக்க முடியுமா? அவர்களிடம் சண்டை போட்டு பிரிந்த வந்த பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்களிடம் வேலை தேடி, தொழில் செய்ய நாம் போவது. அல்லது தனி தமிழ்நாடு கேட்பவர்கள் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிணற்று தவளைகளாக இருந்து விடலாம் என்று சொல்ல வருகிறார்களா?
இப்பொழுது தனி தமிழ்நாடு கேட்க வேண்டிய அவசியம் என்ன. ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஆட்சியில் இருப்பவர்களை மாற்றலாமே? ஏன் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்ள வேண்டும் அரசாங்கம் வெறும் வாகனம் தானே. ஆட்சி செய்பவர் அல்லவா அதை சரியான திசையிலோ தப்பான திசையிலோ கொண்டு செல்கிறார்?
Friday, March 29, 2013
உலகத்தின் கவனம் ஈர்ப்போம்!
ஈழம் தொடர்பான இந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமே உண்டான போராட்டமாக வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெங்கும் உள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தமிழ் நாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதால் நாமே இது பற்றி பேசி கொண்டிருப்பதால் நம் நியாயம் யார் காதையும் எட்டாமல் இருக்கிறது.
உலகமெங்கும் இருக்கும் மக்கள் இந்த போராட்டத்தை பற்றி பேச வைக்க வேண்டும். அதற்கு எனக்கு தோன்றும் யோசனை இந்த போராட்டத்தை ஒரு போராட்டமாக வைத்து கொண்டிருக்காமல் ஒரு கின்னஸ் சாதனையாக மாற்ற வேண்டும். நம் போராட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக மாறினால் உலக ஊடகங்கள் அனைத்தும் நம் பக்கம் கவனம் திருப்பும். அப்பொழுது நமக்கு நியாயம் கிடைப்பது மிக எளிதாக இருக்கும்.
நம் போராட்டத்தை ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றுவதற்கு எனக்கு தோன்றிய ஒரு வழி. தமிழகத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் டெல்லியை நோக்கி நடக்க துவங்குவது. 50 லட்சத்திலிருந்து 2 கோடி தமிழர்கள் டெல்லியில் அமைதியாக குவிய வேண்டும். கோஷம் போட வேண்டாம். உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவோம். இல்லையென்றால். பட்டினி கிடப்போம். ஆனால் உலக ஊடகங்கள் அனைத்தயும் நம் பக்கம் கவனம் ஈர்ப்போம். நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் வரை டெல்லியிலேயே இருப்போம். எந்த வன்முறையும் வேண்டும் எந்த சத்தமும் வேண்டாம். அமைதியாக ஆனால் அழுத்தமாக நாம் ஒரு உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அப்பொழுது தான் நம் பிரச்சனையைப் பற்றி உலகெங்கும் விவாதம் நடக்கும். உலகமெங்கும் விவாதம் நடந்தால் நம் நியாயங்கள் எல்லோருக்கும் புரிய துவங்கும்.
இதை எப்படி சாத்தியப்படுத்துவது?????????
Wednesday, February 13, 2013
டேவிட் என்றொரு கொடுமை
டேவிட் திரைப்படத்திற்கு 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது நான் சுயநினைவோடும் சுயசிந்தனையோடும் செய்த தவறு தான். டேவிட் திரைப்படத்தை தயரித்தவர்கள் படத்திற்கு விளம்பரங்கள் செய்திருந்தார்கள் தான். ஆனால் அவர்கள் என்னை முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு முதல் வாரத்திலேயே படத்தை தியேட்டரில் பார்க்கச் சொன்னார்களா? இல்லையே..... அவர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். அவ்வளவு தான். அதை எனக்கான அழைப்பாக நான் கருதிய தவறுக்காக என்னை அத்திரைப்படத்தின் இயகுநர் பிஜோய் நம்பியார் எப்படியெல்லாம் துன்புறுத்தினார் தெரியுமா நண்பர்களே?????
முதலில் ஒரு மணப்பெண் திருமணத்தன்று ஓடிப்போய்விட்டால் அந்த மாப்பிள்ளை குடிப்பழக்கத்திற்கு ஆளாவான் தானே என்றார். நான் ஆம் என்றேன். உடனே அவர் அந்த சோகத்தில் அந்த மாப்பிள்ளை (விக்ரம்) எப்படி தண்ணியடிக்கிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். உடனே அவர், ஒரு பாதிரியார் முகத்தில் இந்துத்வா அமைப்பினர் கறியை பூசினால் அந்த பாதிரியார் அழுவார் தானே என்றார். ஆமாம் என்றேன். அந்த பாதிரியார் (நாசர்) எப்படியெல்லாம் அழுகிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். அவ்வளவு தான் நண்பர்களே..... நான் அவருக்கு என்ன தீங்கிழைத்தேன் என்பதே எனக்கு விளங்காத நிலையில்..... என்னை பல்வேறு வகைகளில் துன்புறுத்த துவங்கி விட்டார்....
விக்ரம் தண்ணியடிப்பதையும் நாசர் மற்றும் குடும்பத்தினர் அழுவதையும் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி காட்டி காட்டி என்னை துன்புறுத்தினார்......நாசர் தம் குணசித்திர நடிப்பால் குமுறி குமுறி அழுவதை காட்டி துன்புறுத்தினார்....அப்பொழுது நாசரின் முதுகு குலுங்குவதை காட்டி துன்புறுத்தினார்....நாசரின் மகள்கள் இருவரும் கலங்கி நிற்பதை காட்டி துன்புறுத்தினார்..... நாசரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிப்பதை காட்டி துன்புறுத்தினார்......அவ்வப்பொழுது தபுவை தத்துவம் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.....லாரா தத்தாவை வைத்து ஆறுதல் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.... விக்ரம் செத்துப் போன அப்பா ஆவியாக வந்து விக்ரமோடு தண்ணியடிப்பதை காட்டி துன்புறுத்தினார்.... அந்த அப்பா சொன்ன ஜோக்குகளை வைத்து துன்புறுத்தினார்.....இப்படியாக பலவகையில் 2.30 மணி நேரம் துன்புறுத்திய பின்னர், "தண்ணியடித்துக் கொண்டிருந்தாரே விக்ரம்? அவருக்கும்..... அழுதுக் கொண்டிருந்தானே பாதிரியின் பிள்ளை ஜீவா அவனுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா??????" என்றார்..... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... எங்கே தவறாக சொன்னால் இன்னொரு படம் எடுத்து துன்புறுத்துவாரோ என்கிற பயத்தில்.... நான் விழிக்க... அவங்க ரெண்டு பேருமே.... டேவிட்.... என்றார்.......நான் நொந்து நூலானேன்... வெந்து வேர்க்கடலையானேன்......
என் சொந்த செலவில் சூன்னியம் வைத்துக் கொண்டவன் என்கிற முறையில் இத்தனை துன்புறுத்தல்களையும் இன்னும் பல சொல்லவொண்ணா சோகங்களையும் அந்த 2.30 மணி நேரத்தில் பொறுத்துக் கொண்ட நான்.... ஒன்றே... ஒன்றை... மட்டும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நண்பர்களே.... அது என்ன தெரியுமா.... புதிய கெட்டப் என்கிற பெயரிலே....ஹேர் ஸ்டைல் என்கிற போர்வையிலே.....அழகான தோரணம் என்கிற தோரணையிலே.... ஜீவா.... பின்னந்தலையில். தொங்கவிட்டிருந்தாரே அந்த ரெட்டை ஜடை...... அந்த ரெட்டை ஜடையை மட்டும் என்னால்..... பொறுத்துக் கொள்ள முடியவில்லை...... பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை......
Saturday, June 2, 2012
இசைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அமிர்தம் அமிர்தம் என்கிறார்கள்
அதை நான் பார்த்ததில்லை
தொட்டதில்லை
சுவைத்ததும் இல்லை
ஆனால் கேட்டிருக்கிறேன்.....
இசைஞானியே....
உன் இசையில்.....
(சனிப் ப்ரதோஷத்தை முன்னிட்டு சிவனாரைப் பார்த்தபடி இசைஞானியின் திருவாசகத்தை கேட்டுக் கொண்டிருந்த பொழுது தோன்றியது.)
Sunday, April 1, 2012
விரதம் பற்றி நகைச்சுவை

நண்பர் 1: ணா... எனக்கும் விரதமெல்லாம் இருக்கணும்னு ஆசை தான். சாப்பிடுகிட்டே இருக்க விரதம் ஏதாவது இருக்கா?
நண்பர் 2: இருக்கே.... மௌனவிரதம்!
நண்பர் 1: எது... இந்த பேசாம இருக்கணுமே அதுவா? அதுக்கு நான் சாப்புடாமலே இருந்துருவேனே...
நண்பர் 2. அப்ப பேசிகிட்டே இருக்க விரதம் ஒண்ணு இருக்கு ட்ரை பண்றீங்களா....
நண்பர் 1: என்னது ணா...
நண்பர் 2: சத்திய விரதம்...
நண்பர் 1: பொய் சொல்லாம இருக்கணுமா??? ணா... நான் நல்லவன் தான் ணா.. ஆனா உலகம் கெட்டு போய் கெடக்கே... இவிங்க கிட்ட பொய் சொல்லலனா வேல நடக்காதே...
நண்பர் 2: சரி... அப்ப ஏகபத்தினி விரதம் ட்ரை பண்றீங்களா...?
நண்பர் 1: ணா... ஹி ஹி ஹி... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புங்ணா....
நண்பர் 2: ஹ்ம்ம்ம்.... உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு :)
Wednesday, January 4, 2012
Tuesday, October 27, 2009
குளிரவைத்த ஈரம்
ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் ஈரம் உலகத் தரமானது. புது முக இயக்குநர் அறிவழகன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.
அன்றாடம் பயன்படுத்தும் நீரை இவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்ட முடியுமா என்ற வியப்பு எனக்குல் எழுந்தது. எத்தனையோ புகைப் படங்களிலும் திரைப்படங்களிலும் பாடல் காட்சிகளிலும் தண்ணீரின் அழகை பதிவு செய்திருந்தாலும் அதன் அழகையும் வசீகரத்தையும் இந்த அளவுக்கு யாரும் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.
நீர் தான் படத்தின் மைய கதாபாத்திரம் என்று ஆன பிறகு அதை எத்தனை விதங்களில் கதைக்குள் கொண்டு வர முடியுமோ அத்தனை விதங்களிலுமே கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் மிக அழகாக. உதாரணம் கார் கண்ணாடியின் மீது தண்ணீர் படிந்து பாதை தெரியாதபடி மறைக்கும் காட்சி. அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் நீரின் பங்கு திணிக்கப் பட்டதாக தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.
இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கு ஒரு மைல் கல். காமிரா வைக்கப்படிருக்கும் ஒவ்வொரு கோணத்திலும் இயக்குநரின் தன்னம்பிக்கை கலந்த நிதானமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் பளிச்சிடுகின்றன. ஒளிப்பதிவாளரும் சரி, படத்தொகுப்பாளரும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் தத்தம் முத்திரையை பதித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை உறுத்தாத வண்ணம் மிக அழகாக இருக்கின்றன.
உதாரணம் கண்ணாடியில் நாயகியின் முகம் தோன்றி கண்ணீர் சிந்தும் காட்சி.
தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது தார்மீக ரீதியாகவும் நல்லதொரு பாடமாக இப்படம் அமைந்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். கசப்பான ஒரு கதை தான் என்றாலும் அதை மனதுக்கு இதமாக பறிமாறியிருக்கிறார்.
பல இடங்களில் வசனங்களில் விளக்க முயற்சிக்காமல் காட்சிகளாகவே பல விஷயங்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணம் கடைசியில் நாயகி குழந்தையாக வந்து நாயகனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சி. அவர்கள் உறவில் கள்ளங்கபடு இலை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டார். அதன் பிறகு நந்தா கதாபாத்திரம் கொலை செய்யப்பட போகிறது என்று நமக்கு உணர்த்தி படத்தை முடித்திருப்பது அசத்தலான புதுமை.
நாயகன் ஆதி கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். நாயகி, நாயகியின் தங்கையாக நடித்தவர், நந்தா, நாயகியின் தந்தை அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகியை விட நாயகியின் தங்கையாக நடித்திருப்பவருக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் முக்கிய காட்சிகள் கிடைத்திருக்கின்றன. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக மர்ம திரைப்படங்களில் ரசிகர்களை குழப்புவதற்காக சில காட்சிகளை தேவையில்லாமல் வைத்து பின் எந்த விளக்கமும் தராமல் விட்டுவிடுவார்கள். இதில் அப்படிப்பட்ட குறைகள் எதுவும் கிடையாது.
குறைகளே கிடையாதா?
என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்வளவு நேர்மையான ஒரு முயற்சியில் சிறு குறைகள் எங்கேனும் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி பாராட்டுவதே நியாயமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
நல்லதொரு திரைப்படத்தை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இத்திரைப்பட குழுவினருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
Wednesday, October 21, 2009
சைவ உணவுக்கு மாறிய காரணம்

கல்லூரி நாட்களில் நான் அசைவ உணவுகளை விரும்பி உண்பவனாக இருந்தேன். சாமி திரைப்படத்தில் வரும் வசனமொன்றில் சொல்வது போல வானத்தில் திரிவதில் விமானத்தையும், கடலில் திரிவதில் கப்பலையும் தவிர அனைத்தையும் சுவைத்து வந்தேன். அப்படி சுவைக்க முடியாதவற்றை 'என்னிக்காவது ஒரு நாள் ஒரு வெட்டு வெட்டனும்' பட்டியலில் வைத்திருந்தேன்.
ஒரு நாள் என் அம்மா என்னை கோழிக் கறி வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். கடையில் ஜீவனொன்று தன் வாழ்வுக்காக தன்னால் முடிந்த வரை சிறகுகளை படபடத்து கத்திக் கதறி போராடி கடைசியில் இயலாமையொடு மெல்ல மெல்ல உயிரைப் பறிகொடுத்த அந்தக் காட்சி எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.
"நாம் உண்ணும் இந்த ஜீவன்கள், நாம் அவற்றைக் கொல்லும் பொழுது தங்களை விட்டு விடும்படி வார்த்தைகளற்று கெஞ்சுகின்றன. நாம் அந்த கதறலை புறக்கணிக்கிறோம். நாம் ஏன் வாழ வேண்டும் என்கிற அதன் வேட்கையை மதித்து, வார்த்தைகளற்ற அதன் கதறலை கருத்தில் கொள்ளக் கூடாது?"
ஒரு இளிச்ச வாயன் நம் கையில் சிக்கும் பொழுது அவனை எதுவும் செய்யாமல் 'பொழச்சு போ' என்று விடும் பொழுது ஒரு பெருமிதம் கலந்த திருப்தி ஏற்படுமே, அந்த திருப்தியை சுவைக்க வேண்டும் என்கிற ஆசையும் அந்தக் கேள்வியுடன் தோன்றியது.
நான் இது பற்றி சில அசைவ விரும்பிகளிடம் பேசிய பொழுது அவர்கள் பலவிதமான எதிர்மறை கருத்துக்களை முன்வைத்தார்கள்.
"சைவ உணவு மட்டும் கொல்லாமல் கிடைக்கிறதா? ஏன் தாவரங்களில் உயிர் இல்லையா? "
"என் கேள்வி கொல்வதைப் பற்றியதல்ல. கொல்லாமையை தீவிரமாக கடைப் பிடிப்பதாயின் பல் விளக்கக் கூட முடியாது என்பது எனக்குத் தெரியும்."
"அந்த ஜீவன்கள் மனிதனுக்கு உணவாக வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றை உண்பது நம் உரிமை."
"அவற்றை உண்ணும் உரிமை நமக்கு இருக்கலாம். அந்த உரிமை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன?"
"சைவ உணவு உண்பது பாவம் என்றால் சிங்கம் புலி இவற்றுக்கெல்லாம் என்ன உணவை இறைவன் படைத்தார்?"
"என் கேள்வி பாவம் புண்ணியம் பற்றியதல்ல. இரண்டாவது, சிங்கம் புலி இவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யும் திறனும் இல்லை."
இந்த எதிர்மறை கருத்துக்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வந்தது அடுத்த ஒரு கருத்து.
"எல்லாரும் சைவ உணவுக்கு மாறிவிட்டால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இயற்கையின் சமச்சீர் கெடும்"
ஆஹா! என்ன ஒரு பொறுப்புணார்ச்சி!
இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி, மழையே வராதபடி செய்துவிட்டோம். ஆற்று மணலையெல்லாம் திருடி விற்று, விற்பவர்களிடம் வாங்கி வீடு கட்டி ஆறுகளை எல்லாம் வரலாறுகளாக்கி விட்டோம். இயற்கை, கலாச்சாரம், சினிமா, அரசியல், நிர்வாகம் என்ற எல்லாமே நம் பொறுப்பற்ற தன்மையாலயே கெட்டுக் குட்டிச் சுவாராகியிருக்கும் நிலையில் நம் அசைவ விரும்பி நண்பருக்கு இயற்கையின் சமச் சீரை காப்பாற்ற வேண்டும் என்கிற வேட்கை அசைவ உணவு உண்பதில் மட்டும் அளவற்று பொங்குகிறது.
எனக்கு அப்பொழுது ஒன்று புரிந்தது. இது பற்றியெல்லாம் பலரிடமும் கலந்துரையாடிக் கொண்டிருக்க தேவையில்லை.
இது தனிப்பட்ட மனிதர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் விஷயம்.
நான் அன்று முதல் சைவ உணவு மட்டுமே உட்கொள்வதென முடிவெடுத்தேன். கொல்வது பாவம் என்பதற்காக அல்ல. கொல்லாமையை கொள்கையாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
நம் கருணைக்குட்பட்ட ஒரு ஜீவனின் வாழும் வேட்கையை மதிக்க வேண்டும் என்பதற்காக. அதன் கதறலை நான் புறக்கணிக்கவில்லை என்கிற திருப்தியை என் இதயத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக.
Friday, October 9, 2009
என்னைப் போல் இல்லை

நேற்று உலக நாயகன், பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் பொன் விழா படைப்பான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் பார்த்தேன்.
'A WEDNESDAY' என்கிற ஹிந்தி திரைப்படத்தை தமிழ்ப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்படுத்துவதோடு நிற்காமல் கதை திரைக்கதை வசனம் நடிப்பு என மூலத்தில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் படுத்தோ படுத்தென்று படுத்தியிருக்கிறார்கள்.
நீதித் துறையின் வேகத்தைக் கண்டு பொறுமையிழந்த ஒரு பொது மனிதன் தன் சாமர்த்தியத்தால் குற்றம் இழைத்த நால்வருக்கு தணடனை தர முடிவு செய்து, அதை வெற்றிகரமாக எப்படி நிறைவேற்றுகிறான் என்பதை சொல்வது தான் திரைக்கதையின் நோக்கம்.
இந்தியில் இதை ஏற்கனவே எந்தவித குறைகளும் இன்றி, பார்ப்பவர்களின் நாடி நரம்புகள் யாவும் முறுக்கேறும் விதமாக தொய்வில்லாமால் செய்திருந்தார்கள்.
அதே திரைக்கதையில் தன் புத்திசாலித்தனத்தை கலந்து (ஹி ஹி... அப்படித் தான் கமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்) நல்ல திரைக்கதையில் பல ஓட்டைகளைப் போட்டு, பார்ப்பவர்களை முந்திரிகளும் மிளகும் கலந்த பொங்கலை ஒரு வெட்டு வெட்டிய பின் ஏற்படும் ஒரு மந்த நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.
உதாரணம் டாக்டர் கமல் அவர்கள் வெற்றுப் பைகளை பேரூந்திலும் ரயிலிலும் வைத்து விட்டு காவல் துறை ஆணையரிடம் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்வது. பொய் சொல்வதென்று ஆன பிறகு, வெற்றுப் பைகளை அங்கும் இங்கும் வைக்காமலேயே வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்லலாமே?
காவல் நிலையத்தில் வெடி குண்டு வைக்கும் பொழுது நஸ்ருதின் ஷா லாவகமாக எந்த பதட்டமும் இல்லாமல் வைத்து விட்டு திரும்புவார். அதைப் பார்ர்கும் பொழுது காவல் துறையினர் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். கமல் அவர்களோ பையை எங்கே வைக்கலாம் என ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார். காவல் துறையினரின் ஓட்டைகளை புரிந்து கொண்டு நல்ல திட்டமிடலோடு அவர்களோடு விளையாட நினைக்கும் ஒருவர் எதற்காக ஒரு பையை மறந்து வைப்பது போல மறந்து வைத்து விட்டு வர அப்படித் தடுமாற வேண்டும்?
ஹாரிஃப் கமல் இருக்கும் கட்டிடத்திற்கு கமல் இருக்கக் கூடும் என கருதி தேட வருவார். அவ்வளவு தூரம் வந்தவர் ஓரே ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்க மறந்து விட்டு எதற்காக யாரும் அங்கு இல்லை என முடிவு செய்ய வேண்டும்? 'Do not disturb' என்று எழுத்துக்களை பார்த்து கீழ்படிந்து விட்டாரா? மூலத்தில் ஹாரிஃப் வேறு கட்டடத்தில் தேடுகிறார் என்று நமக்கு புரிய வைத்திருப்பார்கள். உலக நாயகன் அவர்கள் தொலை நோக்கு கருவி வழியாக ஹாரிஃபை தலைக்கு மேலிருந்து பார்க்கிறார். ஆனால் ஹாரிஃப் அந்த ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்காமலே அங்கு யாரும் இல்லை என முடிவு செய்து விடுகிறார்.
மூன்று தீவிரவாதிகள் ஜீப்பில் அமர்ந்திருக்கும் பொழுது வரும் அழைப்பை சந்தானபாரதி எடுத்து பேச முயற்சிக்கும் பொழுது அவர் ஆள்காட்டி விரலில் அவர் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளொடு தொடர்பு வைத்திருந்து சிறை சென்றவருக்கு யார் ஓட்டுரிமை கொடுத்தார்கள்?
கடைசியில் கமல் மோகன்லால் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் தான் மோகன்லால் காவல் துறையை சேர்ந்தவர் என்பதே கமலுக்கு தெரிகிறது. அதுவும் வந்திருப்பது காவல் ஆணையர் என்பது ஆணையரே தன்னை அறிகமுகம் செய்த பிறகு தான் கமலுக்கு தெரிகிறது. கூகிளில் தேடி வெடிகுண்டு செய்ய தெரிந்தவருக்கு நகரத்தின் காவல் ஆணையரின் முகம் தெரியாததற்கு என்ன காரணமோ?
மூலத்தில் நஸ்ரூதின் ஷா அனுபம் கேர் இடையே நடக்கும் உரையாடல்களில் எந்த ஒரு மதமும் மத நம்பிக்கைகளும் தாக்கப்படுவதில்லை. தமிழில் வழக்கம் போல கமலஹாசன் இந்து மதத்தை தாக்குவதை திறம்பட செய்திருக்கிறார். மத துவேஷத்திற்கு எதிரானவராக தன்னை காட்டிக் கொள்ளும் கமலஹாசன் அவர்கள் பேசும் வசனங்களை மத துவேஷத்தை வளர்க்கும் விதமாகவே இருக்கிறது. உதாரணம், "நீ இந்துவா?" என்று மோகன்லால் கேட்கும் இடத்தில். "அந்த கும்பலோடு என்னை சேர்க்காதீர்கள்" என்று சொல்லி இந்து மதவெறியர்கள் செய்த சில குற்றங்களை முன்னிறுத்துவார். முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல என்று வசனம் வைக்க தெரிந்த கமலஹாசனுக்கு இந்துக்கள் எல்லாரும் மத வெறியர்கள் அல்ல என்பது ஏனோ விளங்குவதில்லை. இதில் கரம்சந்த் காந்தியின் ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறார். காந்தி இரண்டு கைகளிலும் எழுதுவார் என்பது தெரிந்தவருக்கு அவர் ஒரு இந்து என்பதும் , அனுதினமும் ராம நாமம் ஜபித்தவர் என்பதும் ஏனோ இன்று வரை தெரியாமலேயே இருக்கிறது.
'A WEDNESDAY' திரைப்படத்தின் அழகே நஸ்ரூதின் ஷா, தான் எந்த மதம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் வந்து செல்வது தான். ஆனால் தமிழில் கமல் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் என்பதற்கு பல்வேறு விதங்களில் கோடி காட்டியிருக்கிறார். உதாரணம் அவர் மொட்டை மாடியில் நிற்கும் பொழுது அவர் குரலில் ஒலிக்கும் பாடல். அவர் வைத்திருக்கும் தாடி ஆகியவை.
இது போல இந்தியில் உள்ள பல அழகான விஷயங்களை தமிழில் கொண்டு வர தவறி விட்டார்கள். உதாரணம் அவ்வப்பொழுது நஸ்ரூதின் ஷா, "என் மனைவி இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்னை அழைத்து நான் சாப்பிடேனா? டீ குடித்தேனா? என்றெல்லாம் அவ்வப்பொழுது விசாரிக்கிறாள். உண்மையில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு ஆர்வமில்லை. அவளுக்கு பயம் வந்து விட்டது. அங்கங்கே குண்டு வெடிக்கிறதே,அவற்றில் நான் சிக்கியிருப்பேனோ என்கிற பயம் அவளுக்கு" இந்த வசனத்தில் தான் அந்த படத்தின் ஜீவ நாடியே இருக்கிறது. அதை கோட்டை விட்டார்கள். அதே போல நஸ்ரூதின் ஷாவுடன் ரயிலில் பயணிக்கும் பெயர் தெரியாத இளைஞன், தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் காட்சி. இதையும் கோட்டை விட்டார்கள். இப்படி இன்னும் பல காட்சிகள்.
இப்படி நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைஞர் குரலில் வேறு பேசி வெறுப்பேற்றுகிறார்கள். சில லட்ச உயிர்கள் சேதமடையக் கூடிய நிலையில் ஆக வேண்டிய காரணங்கள் என்னவென்று காவல் ஆணையரிடம் விசாரிக்காமல் கிருஷ்ணரைக் கூப்பிடாமல் தமிழ்க் கடவுள்களைக் கூப்பிடும் படி பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார், முதல்வர் அவர்கள். முதலவரின் உண்மையான முகத்தை பதிவு செய்யும் முயற்சியா?
மூன்று தீவிரவாதிகளையும் கொன்ற பிறகு நஸ்ரூதின் ஷா பேசும் வசனங்கள் எந்த ஒரு பொது மனிதனும் பேசக் கூடிய பொதுவான வசனங்கள். அவர் சொல்லும் காரணங்கள் மதச்சார்பற்றவை. அவருக்கு தீவிரவாதிகள் மீது தான் கோபம் இருந்தது. அதனால் தீவிரவாதிகளை கொல்ல திட்டமிட்டார். கமலஹாசன் அவர்கள் கோபமெல்லாம் இந்து வெறியர்கள் மீதிருக்க ஏனோ இவரும் தீவிரவாதிகளையே கொல்ல முடிவு செய்திருக்கிறார்.
நஸ்ரூதின் ஷா ஒரு இந்தியராக இருந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு பொது மனிதனாக இருந்ததனால் என்னால் அவர் கதாபாத்திரத்தொடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது.
உன்னைப் போல ஒருவன் என்று பெயர் வைத்துவிட்டு, என்னைப் போல இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேம்படுத்த கடந்த கால குற்றங்களை பேசி பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும் என நினைக்காமல்
இந்து நம்பிக்கைகளையும் இந்துக்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லி மத துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்திருப்பதால் உன்னைப் போல் ஒருவன் என்னைப் போல இல்லை.
Subscribe to:
Posts (Atom)




